நித்தி ஆயோக்

‘சம்பூர்ணதா அபியான்' இயக்கத்தைத் தொடங்கியது, நித்தி ஆயோக்

Posted On: 04 JUL 2024 6:07PM by PIB Chennai

‘சம்பூர்ணதா அபியான்' என்ற  இயக்கத்தை நித்தி ஆயோக் தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு காணப்பட்டது. முன்னேற விரும்பும்  112 மாவட்டங்கள் மற்றும் 500  முன்னேற விரும்பும் வட்டாரங்களில் தொடக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2024ஜூலை  4 முதல் செப்டம்பர் 30 வரை இயங்கும் இந்த விரிவான மூன்று மாத பிரச்சாரம்,  முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் 12 முக்கிய சமூகத் துறை குறிகாட்டிகளின் 100% செறிவூட்டலை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரச்சாரத்தின் முதல் நாளில் ஜம்மு-காஷ்மீர் முதல் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வரை லட்சக்கணக்கான மாவட்ட,  வட்டார அளவிலான அதிகாரிகள், முன் களப்பணியாளர்கள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் கலைஞர்கள், மாணவர்கள் உள்ளூர் பிரதிநிதிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

3 மாத கால 'சம்பூர்ணதா அபியான்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட, வட்டார அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராம சபைகள், சுகாதார முகாம்கள், ஐ.சி.டி.எஸ் முகாம்கள், விழிப்புணர்வு அணிவகுப்புகள், பேரணிகள், கண்காட்சிகள், சுவரொட்டி தயாரித்தல், கவிதை போட்டிகள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை 12 கருப்பொருட்களில் நடத்தப்படும்.

300 மாவட்டங்களில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில் நித்தி ஆயோக் அதிகாரிகள், இளம் தொழில் வல்லுநர்கள் நேரில் பங்கேற்று, பிரச்சாரத்தை திறம்பட ஏற்பாடு செய்து செயல்படுத்துவதில் உள்ளூர் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் ஆதரவளிக்கவும் உள்ளனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது இந்த இயக்கத்தின் நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, உள்நாட்டில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதில் போட்டியையும் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வையும் வலுப்படுத்தும்.

***

(Release ID: 2030805)

SMB/BR/RR



(Release ID: 2030902) Visitor Counter : 15