கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

திப்ருகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திரு சர்பானந்தா சோனாவால் பார்வையிட்டார்

Posted On: 03 JUL 2024 7:37PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், கிரேட்டர் திப்ருகர் பிராந்தியத்தை பாதித்துள்ள வெள்ள நிலைமையை ஆய்வு செய்யவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் விரைந்தார். கிரஹாம் பஜார், ஏடி சாலை, எச்எஸ் சாலை, ஆர்.கே.பி பாதை, மங்கோட்டா சாலை, தானா சாரியாலி, ஜலுக்பாரா உள்ளிட்ட திப்ருகர் நகரில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திரு சோனாவால் பார்வையிட்டார். தெங்ககட் மற்றும் ஹதிபந்தாவில் உள்ள கரை தளங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெங்ககாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண முகாமை மத்திய அமைச்சர் இன்று பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் நிலையை மதிப்பிட்ட அவர், பொருள் சேதத்தை மதிப்பீடு செய்ய அவர்களுடன் உரையாடினார். புகலிட முகாம்களில் தூய்மையை பராமரிக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்திய திரு சோனாவால், முகாம்களில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தவும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மத்திய அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திப்ருகர் மக்களவைத் தொகுதிக்குள் பல்வேறு இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

நிலைமை குறித்து பேசிய திரு சர்பானந்தா சோனாவால், "திப்ருகர், தின்சுகியா மற்றும் அசாமின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவது மிகவும் கவலைக்குரியது. பிரதமர் திரு நரேந்திர மோடியும் நிலைமை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு அது குறித்த தகவல்களை அவ்வப்போது பெற்று வருகிறார். இந்த இயற்கைப் பேரிடரை எதிர்த்துப் போராடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த வெள்ளத்தில் மக்கள் இழந்த பொருட்களுக்கு நிதி நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், கரைகளை சீரமைக்கவும், கட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார்..

---

PKV/KPG/DL



(Release ID: 2030526) Visitor Counter : 42