பிரதமர் அலுவலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 13 FEB 2024 10:44PM by PIB Chennai

வணக்கம்!

இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம்  நட்பு வாழ்க! என்று சொல்கிறது. 

சகோதர சகோதரிகளே,

இன்று, நான் எனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வந்துள்ளேன். கடல் கடந்து, நீங்கள் பிறந்த மண்ணின் நறுமணத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். 140 கோடி இந்திய சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு செய்தியை நான் கொண்டு வந்துள்ளேன். பாரதம் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது, நீங்கள் தேசத்தின் பெருமை. பாரதம் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.

நண்பர்களே,

இங்கு மதிப்பிற்குரிய ஷேக் நஹ்யானும் நம்மிடையே இருக்கிறார். அவர் இந்திய சமூகத்தின் நல்ல நண்பர் மற்றும் நலம் விரும்பி. இந்திய சமூகத்தினர் மீது அவர் கொண்டுள்ள அன்பு பாராட்டத்தக்கது. இன்று, இந்த மகத்தான நிகழ்ச்சிக்காக எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீதுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இது எனது 7-வது பயணம். சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் இன்று என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தார். அவரது உற்சாகம்தான் அவரை மிகவும் சிறப்பானவராக ஆக்குகிறது.

நண்பர்களே

அவரை நான்கு முறை பாரதத்திற்கு வரவேற்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் அவர் குஜராத்திற்கு  பயணம் மேற்கொண்டார். அப்போது, லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று தங்கள் நன்றியை தெரிவித்தனர். அவர்கள் ஏன் இந்த நன்றியைத் தெரிவித்தார்கள் தெரியுமா? இந்த நன்றியுணர்வு என்னவென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில்  அவர் உங்கள் அனைவரையும் கவனித்துக்கொள்ளும் விதம், உங்கள் நலன்களைப் பற்றி அவர் அக்கறை கொள்ளும் விதம் ஆகியவைதான். 

நண்பர்களே,

ஐக்கிய அரபு அமீரகம் தமது மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் சயீத் விருதை எனக்கு வழங்கி கௌரவித்திருப்பது எனது பாக்கியம். இந்த கௌரவம் எனக்கு மட்டுமல்ல. இந்த கௌரவம் கோடிக்கணக்கான இந்தியர்களுடையது. உங்கள் அனைவருக்குமானது. எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத்தை நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் அனைத்து இந்தியர்களையும் மிகவும் பாராட்டுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின்  வளர்ச்சியில் உங்கள் பங்கை அவர் பாராட்டுகிறார். 

நண்பர்களே

பாரதம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புறவு நிலத்திலும் விண்வெளியிலும் முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த அமீரகத்தின் முதல் விண்வெளி வீரரான சுல்தான் அல் நெயாடிக்கு பாரதத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச யோகா தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்வெளியில் இருந்து பாரதத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

21-ம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது தசாப்தத்தில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளது. இன்று, ஐக்கிய அரபு அமீரகம்  இந்தியாவின் ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. வாழ்க்கையை எளிதாக்குவதிலும், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதிலும் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைத்து வருகின்றன. இன்று நாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன. 

நண்பர்களே

சமூகம் மற்றும் கலாச்சார உறவுகளின் அடிப்படையில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும்  சாதித்திருப்பது உலகிற்கே ஒரு முன்மாதிரி.  பாரதமும், ஐக்கிய அரபு அமீரகமும் காலத்தின் பேனாவால் உலக புத்தகத்தில் ஒரு சிறந்த விதியை எழுதிக் கொண்டிருக்கின்றன. இருநாடுகளுக்கும்  இடையிலான நட்பு நமது பகிரப்பட்ட செல்வம். உண்மையில், நாம் ஒரு சிறந்த எதிர்காலத்தைத் தொடங்குகிறோம். நம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கிறது. இந்த உறவு நாளுக்கு நாள் செழிக்கும் என்று பாரதம் நம்புகிறது.

நண்பர்களே

தற்போது மைதானத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய பள்ளிகளில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த இளம் நண்பர்கள் இரு நாட்டு  வளத்தில் பங்குதாரர்களாக ஆகப் போகிறார்கள். ஷேக் முகமது பின் சயீத்தின் ஆதரவுடன், தில்லி ஐ.ஐ.டி-யின் அபுதாபி வளாகத்தில் முதுகலை படிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. துபாயில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அலுவலகமும் விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்குள்ள இந்திய சமூகத்திற்கு சிறந்த கல்வியை வழங்க இந்த நிறுவனங்கள் உதவும் என்று நான் நம்புகிறேன்.


நண்பர்களே,

பாரதத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரின் சாதனைகள். வெறும் 10 ஆண்டுகளில், பாரதம் உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் திறன்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் மோடியின் உத்தரவாதம் அமைகிறது. மோடியின் உத்தரவாதம் என்ன தெரியுமா? மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் பாரத்தை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதுதான்.  மோடியின் உத்தரவாதம் நிச்சயம் நிறைவேற்றப்படும் உத்தரவாதம் என்று பொருள். 

நண்பர்களே

சமீபத்தில் பாரதத்திற்கு சென்ற உங்களில் பலருக்கும் தெரியும் இந்த நாட்களில் பாரதம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்று. இன்று பாரதம் நவீன விரைவுச் சாலைகளை அமைத்து வருகிறது. இன்று பாரதம் புதிய விமான நிலையங்களைக் கட்டி வருகிறது. இன்று பாரதம் நவீன ரயில் நிலையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்று, புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகளால் பாரதத்தின் அடையாளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இன்று, பாரதம் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் அடையாளம் காணப்படுகிறது. இதையெல்லாம் கேட்கும்போது உங்களுக்குப் பெருமையாக இருக்கிறது அல்லவா?
நண்பர்களே,

விரைவில், ஐக்கிய அரபு அமீரகத்திலும்  யுபிஐ தொடங்கப்படும். இது ஐக்கிய அரபு அமீரகம்  மற்றும் இந்திய கணக்குகளுக்கு இடையே தடையற்ற பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும். இதன் மூலம், பாரதத்தில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் எளிதாக பணத்தை அனுப்ப முடியும்.
நண்பர்களே,

பாரதமும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து 21 ஆம் நூற்றாண்டுக்கான புதிய வரலாற்றை உருவாக்கி வருகின்றன. என் நண்பர்களே, நீங்கள் அனைவரும் இந்த வரலாற்றின் குறிப்பிடத்தக்க அடித்தளம். நீங்கள் இங்கு செலுத்தும் கடின உழைப்பு பாரதத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. பாரதம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வளர்ச்சி மற்றும் நட்புறவை வலுப்படுத்துங்கள். இந்த நம்பிக்கையுடன், இந்த மகத்தான வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் மாதா கி - ஜே!
பாரத் மாதா கி - ஜே!
பாரத் மாதா கி - ஜே!


மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பி்ரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

ANU/PKV/PLM/DL



(Release ID: 2006905) Visitor Counter : 69