தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சிய போர்ட்டலை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர், உள்நாட்டில் கனிமங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி தன்னிறைவு இலக்கை அடைவதற்கும் சுரங்க அமைச்சகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், தன்னிறைவை வளர்த்தல், இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், நிலையான வள மேலாண்மையை ஆதரித்தல், சுரங்கத் துறையில் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முக்கியமான முக்கிய தொழில்களை மேம்படுத்துதல் போன்ற முன்னுரிமைகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்திய சுரங்கத் துறை பொதுவாகவும், குறிப்பாக முக்கியமான கனிமங்களும் தற்போதைய உலகளாவிய சூழலில் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் முக்கியமான கனிம வளங்களை படிப்படியாக ஏலத்திற்கு கொண்டு வர அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, சுரங்கங்கள், நிலக்கரி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே, முக்கியமான கனிமங்கள் ஏல ஆரம்ப கட்டத்தின் சாத்தியமான வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்தார். ஏல செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் நெறி சார்ந்த நடைமுறைகளின் மிக உயர்ந்த தரங்களை நிரூபிக்குமாறு அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு. வி.எல். காந்தா ராவ், நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளை அதிகரிக்க சுரங்க அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கனிமத் துறையின் பன்முக வளர்ச்சிக்கான கொள்கை கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை தெரிவித்தார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுரங்கத்துறை செயலாளர், மின்-ஏல செயல்பாட்டில் எளிதாக பங்கேற்பதற்கு அமைச்சகத்தின் அனைத்து உதவிகளையும் உறுதி செய்தார். மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு ஏல செயல்முறைக்குப் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு திரு ராவ் ஊக்குவித்தார்.
ஏலதாரருடனான முன் ஏல மாநாடு 2023, டிசம்பர் 22 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, டெண்டர் ஆவணத்தை விற்பனை செய்வதற்கான கடைசி தேதி 2024, ஜனவரி 16 மற்றும் ஏலக் கேட்பு சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2024, ஜனவரி 22 ஆகும். அதன்பின், விருப்பமான ஏலதாரர்களை தேர்வு செய்வதற்கான, 'இ - ஏலம்' தொடங்கும். சுரங்கங்களின் விவரங்கள், ஏல விதிமுறைகள், காலக்கெடு போன்றவற்றை எம்.எஸ்.டி.சி ஏல தளத்தில் www.mstcecommerce.com/auctionhome/mlcl/index.js அணுகலாம்.
தற்போது, புவியியல், புவிவேதியியல் மற்றும் புவி இயற்பியல், தரவு அடுக்குகள் போன்ற 35 வரைபட சேவைகள் என்.ஜி.டி.ஆர் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன.. என்.ஜி.டி.ஆர் போர்ட்டலை https://geodataindia.gov.in மூலம் அணுகலாம். பயனர், போர்ட்டலில் பதிவு செய்த பிறகு, தரவைப் பார்க்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.
***
ANU/PKV/SMB/RR/KRS