பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்


சூரத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், நகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாய்ச்சல்: பிரதமர்

Posted On: 17 DEC 2023 3:59PM by PIB Chennai

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய முனையக் கட்டடத்தை அவர் நடந்து சென்று பார்வையிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"சூரத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் நகரத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கிறது. இந்த அதிநவீன வசதி, பயண அனுபவத்தை மேம்படுத்துவது  மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் இணைப்பையும் அதிகரிக்கும்."

​பிரதமருடன்  குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் சென்றார்.

பின்னணி

இந்த முனையக் கட்டிடம் 1200 உள்நாட்டுப் பயணிகளையும் 600 சர்வதேசப் பயணிகளையும் நெரிசல் மிக்க  நேரத்தில் கையாளும் திறனைக்கொண்டுள்ளது. இதனை 3000 பயணிகளாக அதிகரிக்கவும், வருடாந்திர கையாளும் திறனை 55 லட்சம் பயணிகளாக அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முனையக்  கட்டிடம், சூரத் நகரின் நுழைவாயிலாக இருப்பதால், அதன் உள்ளூர்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சாராம்சம் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கிறது. பார்வையாளர்களுக்குத் தங்களுக்கான இடம் என்ற உணர்வை உருவாக்குகிறது. மேம்படுத்தப்பட்ட முனையக் கட்டிடத்தின் முகப்பு சூரத் நகரின் 'ராண்டர்' பிராந்தியத்தின் பழைய வீடுகளின் வளமான மற்றும் பாரம்பரிய மரவேலைப்பாட்டுடன் பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தில் இரட்டைப் பாதுகாப்புக் கூரை அமைப்பு, எரிசக்தி சேமிப்பிற்கான வசதிகள், குறைந்த வெப்ப ஆதாய இரட்டை மெருகூட்டும் அலகு, மழை நீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,  மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை நிலத்திற்கும்  சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கும் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைத்த அம்சங்கள் உள்ளன.

*******


ANU/PKV/SMB/DL



(Release ID: 1987483) Visitor Counter : 78