பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடியபோது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 NOV 2023 4:28PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜெய்!

முதல் கிராமம் என்று இப்போது நான் அழைக்கும் கடைசி கிராமத்தின் எல்லைகளில், அங்கு நிறுத்தப்பட்டுள்ள நமது ஆயுதப்படைகளுடன் நான் தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், நாட்டு மக்களுக்கு எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

நான் இப்போதுதான் மிக உயரமான லெப்சாவுக்குச் சென்றிருந்தேன். பண்டிகைகள், குடும்பத்தின் முன்னிலையில் மட்டுமே கொண்டாடப்படுவது ஐதீகம். பண்டிகை நாளில் குடும்பத்தை விட்டு விலகி எல்லையில் பணியமர்த்தப்படுவது கடமையின் மீதான பக்தியின் உச்சம். எல்லோரும் தங்கள் குடும்பங்களை இழக்கிறார்கள், ஆனால் இந்த தொலைதூர மூலையில் கூட உங்கள் முகத்தில் சோகம் தெரியவில்லை. உங்கள் உற்சாகம் குறையவே இல்லை. 140 கோடி நாட்டு மக்களைக் கொண்ட இந்த பெரிய குடும்பம் உங்கள் சொந்த குடும்பம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்காக நாடு உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. எனவே, தீபாவளி அன்று, உங்கள் நலனுக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தீபம் ஏற்றப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, எனது இந்திய ராணுவம் இருக்கும் இடம், என் நாட்டின் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், ஒரு கோயிலுக்கு சற்றும் சளைத்ததல்ல. கடந்த 30-35 ஆண்டுகளாக நீங்கள் இல்லாமல் ஒரு தீபாவளியைக் கூட நான் கொண்டாடியதில்லை. நான் பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ இல்லாதபோது கூட, பாரதத்தின் பெருமைக்குரிய மகனாக தீபாவளி அன்று எல்லைகளுக்குச் செல்வேன். அந்த நாட்களில் கூட நான் உங்கள் அனைவருடனும் இனிப்புகளை அனுபவிப்பேன், மெஸ்ஸில் உணவை சாப்பிடுவேன். இந்த இடத்தின் பெயர் சுகர் பாயிண்ட். உங்களுடன் சில இனிப்புகளை சாப்பிடுவதன் மூலம், என் தீபாவளி இன்னும் இனிமையானது.

நண்பர்களே,

பாரதத்தின் படைகளும், பாதுகாப்புப் படைகளும் தேசத்தைக் கட்டமைப்பதில் இடைவிடாது பங்களித்துள்ளன. நமது வீரர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு பல போர்களில் ஈடுபட்டுள்ளனர்; நமது வீரர்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்த்துப் போராடி நாட்டின் இதயங்களை வென்றுள்ளனர்! மிகவும் கடினமான சவால்களில் கூட நமது துணிச்சலான மகன்கள் மற்றும் மகள்கள் வெற்றி பெற்றுள்ளனர்! பூகம்பம் போன்ற பேரழிவுகளின் போது ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் வீரர்கள்! சுனாமி போன்ற சூழ்நிலைகளில் கடலுக்கு எதிராகப் போராடி உயிர்களைக் காப்பாற்றிய வீரர்கள்! சர்வதேச அமைதிப் பணிகளில் இந்தியாவின் உலகளாவிய மதிப்பை ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் உயர்த்தியுள்ளன! நமது மாவீரர்களால் தீர்க்கப்படாத நெருக்கடி எது? நாட்டின் பெருமையை உயர்த்தாத துறை ஏதாவது உள்ளதா? இந்த ஆண்டு, ஐ.நா.வில் அமைதி காக்கும் படையினருக்கான நினைவு மண்டபம் ஒன்றையும் நான் முன்மொழிந்தேன், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நமது ராணுவம் மற்றும் வீரர்களின் தியாகத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.

நண்பர்களே,

நெருக்கடியான நேரங்களில், நம் ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தேவதைகளாக செயல்பட்டு, இந்தியர்களை மட்டுமின்றி, வெளிநாட்டினரையும் காப்பாற்றுகின்றனர். சூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தபோது, பல ஆபத்துகள் இருந்தன என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் பாரதத்தின் மாவீரர்கள் தங்கள் பணியை எந்த இழப்பும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்தனர். துருக்கியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டபோது, நம் பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றியதை துருக்கி மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். உலகில் எங்காவது இந்தியர்கள் சிக்கலில் இருந்தால், அவர்களைக் காப்பாற்ற இந்தியப் படைகள், நமது பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக உள்ளன. போர் முதல் சேவை வரை அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் படைகளும், பாதுகாப்புப் படைகளும் முன்னணியில் உள்ளன. அதனால்தான் நமது பாதுகாப்புப் படைகளைப் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம்.

என் குடும்ப உறுப்பினர்களே,

உலகெங்கிலும் உள்ள தற்போதைய சூழ்நிலையில், இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய முக்கியமான காலகட்டத்தில், இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதும், நாட்டில் அமைதியான சூழல் பராமரிக்கப்படுவதும் மிகவும் முக்கியம். இதில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். எனது வீர நண்பரான நீங்கள் அதன் எல்லையில் இமயமலையைப் போல உறுதியாக நிற்கும் வரை பாரதம் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் சேவைகளால் தான் பாரதம் பாதுகாப்பாகவும், செழிப்பான பாதையில் செல்கிறது. கடந்த தீபாவளி முதல் இந்த தீபாவளி வரையிலான காலம், அதாவது கடந்த ஒரு ஆண்டு, பாரதத்திற்கு முன்னெப்போதும் இல்லாத சாதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.கடந்த ஓராண்டில், வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவில் பாரதம்  தனது விண்கலத்தை தரையிறக்கியுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, ஆதித்யா எல் 1 ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. ககன்யான் தொடர்பான மிக முக்கியமான சோதனையையும் வெற்றிகரமாக முடித்தோம். அதே ஆண்டில், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கடற்படையின் ஒரு பகுதியாக மாறியது. அதே போல, ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை தும்கூருவில் தொடங்கியுள்ளது. எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்காக துடிப்பான கிராமத் திட்டம் தொடங்கப்பட்டது. விளையாட்டு உலகிலும் பாரதம் தனது இருப்பை வெளிப்படுத்தியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பல வீரர்கள் பதக்கங்களை வென்று மக்களின் இதயங்களை வென்றுள்ளனர். கடந்த ஓராண்டில், ஆசிய மற்றும் பாரா விளையாட்டு போட்டிகளில், நம் வீரர்கள், நூறு பதக்கங்களை வென்றுள்ளனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நமது வீராங்கனைகள் உலகக் கோப்பையை வென்றுள்ளனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.ஓ.சி கூட்டத்தை பாரதம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது.

நண்பர்களே,

கடந்த தீபாவளி முதல் இந்த தீபாவளி வரையிலான காலம் இந்திய ஜனநாயகம் மற்றும் பாரதத்தின் உலகளாவிய சாதனைகளின் ஆண்டாகவும் இருந்தது. இந்த ஓராண்டில், பாரதம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில், முதல் கூட்டத்தொடரிலேயே நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில், ஜி20 இன் மிகவும் வெற்றிகரமான நிகழ்வு தில்லியில் நடைபெற்றது. புதுதில்லி பிரகடனம் மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற முக்கியமான ஒப்பந்தங்களில் நாம்  கையெழுத்திட்டோம். இதே காலகட்டத்தில், பாரதத்தின் ஏற்றுமதி, 40,000 கோடி டாலரை தாண்டியது. இந்த காலகட்டத்தில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 5 வது இடத்தை அடைந்தது. அதே காலகட்டத்தில், 5ஜி பயனர் தளத்தின் அடிப்படையில் நாம்  ஐரோப்பாவை முந்தியுள்ளோம்.

நீங்கள் தொடர்ந்து பாரத அன்னைக்கு சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் ஆதரவுடன் நாடு தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொடும். நாட்டின் ஒவ்வொரு தீர்மானத்தையும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். இந்த வாழ்த்துடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****

ANU/PKV/RB/DL



(Release ID: 1979913) Visitor Counter : 66