சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

3 நாள் பழங்குடியினர் கலைக் கண்காட்சி நிறைவு

Posted On: 08 NOV 2023 12:17PM by PIB Chennai

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சங்கலா அறக்கட்டளை ஆகியவை இணைந்து புதுதில்லியில் நவம்பர் 3 முதல் 5 வரை நடத்திய "அமைதியான உரையாடல்: விளிம்பு நிலையிலிருந்து மையத்திற்கு" என்ற பெயரில் முதல் கலைக் கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ந்தக் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 3-ம் தேதி அன்று தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமன்றி, மனித குலத்தின் உயிர்வாழ்விற்கும் இன்றியமையாத பருவநிலை மாற்றப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஒரு விரிவான மற்றும் ஒன்றிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

பழங்குடியினர் மற்றும் பிற வனவாசி சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகளைத் தழுவுவதன் முக்கியத்துவத்தை இந்த உரை எடுத்துக்காட்டியது, இயற்கையுடன் இணக்கமாக வாழும்போது வளமான மற்றும் மனநிறைவான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

கன்ஹா புலிகள் காப்பகத்தின் மஹர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் உருவாக்கிய நினைவுப் பரிசு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. டாட், பிந்து பாணியில் பாக்தேவ் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஓவியம், புலியின் நித்தியப் பாதுகாப்பை நாடி, நீல வானத்தின் கீழ் பழங்குடியினர் இரவு நேர வழிபாட்டுச் சடங்குகளில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

தொடக்க விழாவில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோண்டு, பில், படசித்ரா, கோவார், சோஹ்ராய், வார்லி மற்றும் பல கலைப் பாணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா முழுவதும் உள்ள 12 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 43 கலைஞர்களின் அசாதாரணத் திறமையை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தியது.

இந்தியாவின் புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள பழங்குடி மற்றும் பிற வனவாசி சமூகங்களுக்கு இடையிலான சிக்கலான உறவையும், காடு மற்றும் வனவிலங்குகளுடன் அவர்களின் ஆழமான வேரூன்றிய தொடர்பையும் இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்ல கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அங்கு குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

***

ANU/PKV/BS/AG/KPG



(Release ID: 1975643) Visitor Counter : 108