பிரதமர் அலுவலகம்

தில்லி பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவித்தார்


12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் வெளியிட்டார்

"21 ஆம் நூற்றாண்டில் இந்தியா முன்னேறும் இலக்குகளை அடைவதில் நமது கல்வி முறை பெரும் பங்கு வகிக்கிறது"

"தேசிய கல்விக் கொள்கையில் பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது"

"தாய்மொழியில் கல்வி என்பது இந்தியாவில் மாணவர்களுக்கு ஒரு புதிய நீதி வடிவத்தைத் தொடங்குகிறது. இது சமூக நீதியை நோக்கிய மிக முக்கியமானப் படியாகும்.

"மாணவர்கள் ஒரு மொழியில் நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகள் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிப்படும்"

"அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் நாம் ஒரு சக்திவாய்ந்த புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும், அடிமை மனப்பான்மை இல்லாத, புதுமைகளில் ஆர்வமுள்ள, கடமை உணர்வு நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும்"
"கல்வியில் சமத்துவம் என்பது, இடம், வர்க்கம் அல்லது பிராந்தியம் காரணமாக எந்தக் குழந்தையும் கல்வியை இழக்க அனுமதிக்காமல் இருப்பதாகும்&

Posted On: 29 JUL 2023 12:37PM by PIB Chennai

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 3 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறுகிறது. பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியையும் அவர் விடுவித்தார். 6207 பள்ளிகளுக்கு முதல் தவணையாக ரூ.630 கோடி வழங்கப்பட்டது. 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய காரணிகளில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  "21 ஆம் நூற்றாண்டின் இந்தியா முன்னேறும் இலக்குகளை அடைவதில் நமது கல்வி முறை பெரும் பங்கு வகிக்கிறது", என்று அவர் கூறினார். அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், கல்விக்கு விவாதமும் உரையாடலும் மிகவும் முக்கியம் என்றார். வாரணாசியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் கடந்த அகில பாரதிய சிக்ஷா சமகம் நடைபெற்றதையும், இந்த ஆண்டு அகில பாரதிய சிக்ஷா சமகம் புத்தம் புதிய பாரத மண்டபத்தில் நடைபெறுவதையும் பிரதமர் குறிப்பிட்டார். முறைப்படி திறக்கப்பட்ட பின்னர் மண்டபத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

 

காசியின் ருத்ராட்சம் முதல் நவீன பாரத மண்டபம் வரை, பண்டைய மற்றும் நவீனத்தை ஒருங்கிணைக்கும் அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் பயணத்தில் ஒரு மறைக்கப்பட்ட செய்தி உள்ளது என்று பிரதமர் கூறினார். ஒருபுறம், இந்தியாவின் கல்வி முறை நாட்டின் பண்டைய பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருகிறது, மறுபுறம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களை பிரதமர் பாராட்டினார். இன்று தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இதை ஒரு பணியாக எடுத்துக் கொண்டு மகத்தான முன்னேற்றத்திற்கு பங்களித்த அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இக்கண்காட்சி குறித்துப் பேசிய பிரதமர், திறன்கள், கல்வி, புதுமையான நுட்பங்களின் காட்சிப்படுத்தலை எடுத்துரைத்தார். விளையாட்டுத்தனமான அனுபவங்கள் மூலம் சிறு குழந்தைகள் கற்கும் நாட்டில் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியின் மாறிவரும் முகத்தை அவர் தொட்டு, அதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கண்காட்சியை பார்வையிடுமாறு விருந்தினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

சகாப்த மாற்றங்களை உருவாக்க சிறிது நேரம் எடுக்கும் என்று பிரதமர் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் தொடக்கத்தின் போது உள்ளடக்கப்பட வேண்டிய பரந்த அம்சங்களை நினைவு கூர்ந்த பிரதமர், அனைத்து பங்குதாரர்களின் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விருப்பத்தைப் பாராட்டினார். தேசிய கல்விக் கொள்கையில் பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு அதே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். தொடக்கக் கல்வியில் புதிய பாடத்திட்டம், பிராந்திய மொழிகளில் புத்தகங்கள், உயர்கல்வி மற்றும் நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த கல்வி உலகின் பங்குதாரர்களின் கடின உழைப்பை அவர் குறிப்பிட்டார்.  10 +2 முறைக்கு பதிலாக இப்போது 5 + 3 + 3 + 4 முறை நடைமுறையில் இருப்பதை மாணவர்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர் என்றார். 3 வயதில் கல்வி தொடங்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே சீரான நிலை ஏற்படும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்தார். 3-8 வயது மாணவர்களுக்கான கட்டமைப்புத் தயாராக உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கும், இதற்காக என்.சி.இ.ஆர்.டி புதிய பாடப் புத்தகங்களை தயாரித்து வருகிறது. பிராந்திய மொழிகளில் கல்வி வழங்கப்பட்டதன் விளைவாக 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை 22 வெவ்வேறு மொழிகளில் சுமார் 130 வெவ்வேறு பாடங்களின் புதிய புத்தகங்கள் வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

 

எந்தவொரு மாணவருக்கும் அவர்களின் திறன்களுக்கு பதிலாக அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "தாய்மொழியில் கல்வி என்பது இந்தியாவில் மாணவர்களுக்கு ஒரு புதிய நீதி வடிவத்தைத் தொடங்குகிறது. இது சமூக நீதியை நோக்கிய மிக முக்கியமான படியாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகில் உள்ள ஏராளமான மொழிகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர், உலகின் பல வளர்ந்த நாடுகள் தங்கள் உள்ளூர் மொழி காரணமாக விளிம்பைப் பெற்றுள்ளன என்பதை சுட்டிக் காட்டினார். ஐரோப்பாவை உதாரணம் காட்டிய பிரதமர், பெரும்பாலான நாடுகள் தங்கள் சொந்த தாய்மொழிகளைப் பயன்படுத்துகின்றன என்றார். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும், அவை பின்தங்கியதன் அடையாளமாக சித்தரிக்கப்படுவதாகவும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். இதன் விளைவாக, கிராமப்புற குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் வருகையால் நாடு இப்போது இந்த நம்பிக்கையை கைவிடத் தொடங்கியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். "ஐ.நா.வில் கூட, நான் இந்திய மொழியில் பேசுகிறேன்" என்று திரு மோடி மேலும் கூறினார்.

 

சமூக அறிவியல் முதல் பொறியியல் வரையிலான பாடங்கள் இனி இந்திய மொழிகளில் கற்பிக்கப்படும் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "மாணவர்கள் ஒரு மொழியில் நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிப்படும்" என்று திரு மோடி கூறினார். தங்கள் சுயநலத்திற்காக மொழியை அரசியலாக்க முயற்சிப்பவர்கள் இனி தங்கள் கடைகளை மூட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையையும் பெருமையையும் வழங்கும்", என்று அவர் கூறினார்.

 

அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் ஆற்றல்மிக்க புதிய தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அடிமை மனப்பான்மை இல்லாத தலைமுறை, கண்டுபிடிப்புகளில் ஆர்வம், அறிவியல் முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் பெருமை சேர்க்கத் தயாராக இருக்கும், 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் திறமைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறை, கடமை உணர்வு நிறைந்த தலைமுறை  உருவாகும் என்றும்,  "தேசிய கல்விக் கொள்கை இதில் பெரும் பங்கு வகிக்கும்", என்றும் அவர் கூறினார்.

 

தரமான கல்வியின் பல்வேறு அளவுகோல்களில், இந்தியாவின் மிகப்பெரிய முயற்சி சமத்துவத்திற்கானது என்று பிரதமர் கூறினார். "இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும் ஒரே மாதிரியான கல்வியையும், கல்விக்கான ஒரே வாய்ப்பையும் பெற வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரிமை" என்று கூறிய அவர், இது பள்ளிகளைத் திறப்பதோடு நின்றுவிடவில்லை என்பதை வலியுறுத்தினார்.  கல்வியுடன் வளங்களுக்கும் சமத்துவம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் பொருள், ஒவ்வொரு குழந்தையும் விருப்பம் மற்றும் திறனுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதாகும் என்று அவர் கூறினார். "கல்வியில் சமத்துவம் என்பது இடம், வர்க்கம், பிராந்தியம் காரணமாக எந்தக் குழந்தையும் கல்வியை இழக்கவில்லை", என்ற நிலையை ஏற்படுத்துவது என்று அவர் கூறினார். பிரதமரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். "5 ஜி யுகத்தில், இந்த நவீன பள்ளிகள் நவீன கல்வியின் ஊடகமாக இருக்கும்", என்று அவர் மேலும் கூறினார். பழங்குடி கிராமங்களில் உள்ள ஏகலவ்யா பள்ளிகள், கிராமங்களில் இணைய வசதிகள் மற்றும் திக்ஷா, சுயம் மற்றும் சுயம்பிரபா போன்ற முறைகள் மூலம் கல்வி பெறும் மாணவர்கள் குறித்து அவர் குறிப்பிட்டார். "இப்போது, இந்தியாவில், கல்விக்கு தேவையான வளங்களின் இடைவெளி விரைவாக நிரப்பப்படுகிறது", என்று அவர் கூறினார்.

 

தொழிற்கல்வியை பொதுக் கல்வியுடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கல்வியை மிகவும் சுவாரஸ்யமானதாகவும்   கலந்துரையாடும் வகையிலும் மாற்றுவதற்கான வழிகளை பிரதமர் எடுத்துரைத்தார். ஆய்வகங்கள் மற்றும் செய்முறைகளின் வசதி முன்பு ஒரு சில பள்ளிகளுக்கு மட்டுமே இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள் என்றார். இந்த இளம் விஞ்ஞானிகள்தான் குறிப்பிடத்தக்க திட்டங்களை வழிநடத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள், மேலும் இந்தியாவை உலகின் ஆராய்ச்சி மையமாக மாற்றுவார்கள்", என்று அவர் கூறினார்.

 

"எந்தவொரு சீர்திருத்தத்திற்கும் தைரியம் தேவை, தைரியத்தின் இருப்பு புதிய சாத்தியக்கூறுகளின் பிறப்புக்கு வழிவகுக்கிறது" என்று கூறிய திரு மோடி, உலகம் இந்தியாவை புதிய சாத்தியக்கூறுகளின் நாற்றங்காலாகப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டுகளை விளக்கிய  பிரதமர், இந்தியாவின் திறனுடன் போட்டியிடுவது எளிதல்ல என்று கூறினார். பாதுகாப்புத் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய பிரதமர், இந்தியாவின் 'குறைந்த செலவு' மற்றும் 'சிறந்த தரம்' ஆகிய மாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்றார். இந்தியாவின் தொழில்துறை நற்பெயர் மற்றும் ஸ்டார்ட்அப் வளர்ச்சி சூழல் அதிகரித்ததன் மூலம் உலகில் இந்தியாவின் கல்வி முறை மீதான மரியாதை கணிசமாக அதிகரித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். அனைத்து உலகளாவிய தரவரிசையிலும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சான்சிபார் மற்றும் அபுதாபியில் இரண்டு ஐஐடி வளாகங்கள் திறக்கப்படுவது குறித்து தெரிவித்தார். "பல நாடுகளும் தங்கள் சொந்த நாடுகளில் ஐ.ஐ.டி வளாகங்களைத் திறக்க நம்மை  வலியுறுத்தி வருகின்றன", என்று அவர் கூறினார். கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்க விரும்பும் பல உலகளாவிய பல்கலைக்கழகங்களையும் அவர் பட்டியலிட்டார். குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களைத் திறக்க உள்ளன என்று அவர் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களை தொடர்ந்து வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில் செயல்படவும் திரு மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இந்த புரட்சியின் மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

"திறமையான இளைஞர்களை உருவாக்குவதே ஒரு வலுவான தேசத்தைக் கட்டமைப்பதற்கான மிகப்பெரிய உத்தரவாதம்" என்று பிரதமர் வலியுறுத்தினார், அதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நம்பிக்கையான ஆர்வம் மற்றும் கற்பனை ஓட்டங்களுக்கு மாணவர்களை தயார்படுத்துமாறு ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். "நாம் எதிர்காலத்தைக் கண்காணித்து, எதிர்கால மனநிலையுடன் சிந்திக்க வேண்டும். புத்தகங்களின் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

 

வலுவான இந்தியாவில் வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வம் நம்  மீது சுமத்தும் பொறுப்பு குறித்து பேசிய பிரதமர், யோகா, ஆயுர்வேதம், கலை மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து நினைவுபடுத்தினார். 2047 ஆம் ஆண்டில் 'வளர்ந்த பாரதம் ' என்ற இலக்கை  நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தற்போதைய தலைமுறை மாணவர்களின் முக்கியத்துவத்தை அவர் ஆசிரியர்களுக்கு நினைவூட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி , திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, அமிர்த காலத்தில் நாட்டை வழிநடத்த இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டது. அவர்களை அடிப்படை மனித விழுமியங்களில் நிலைநிறுத்தும் அதே வேளையில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாண்டுகளில் பள்ளி, உயர்கல்வி மற்றும் திறன் கல்வித் துறைகளில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளிகள், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்துவதில் தங்கள் நுண்ணறிவுகள், வெற்றிக் கதைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், அதை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான உத்திகளை வகுக்கவும் ஒரு தளத்தை வழங்கும்.

 

அகில பாரதிய சிக்ஷா சமகத்தில் பதினாறு அமர்வுகள் அடங்கும், இதில் தரமான கல்வி மற்றும் ஆளுமைக்கான அணுகல், சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி, சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுவின் பிரச்சினைகள், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, இந்திய அறிவு அமைப்பு, கல்வியின் சர்வதேசமயமாக்கல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

 

இந்நிகழ்ச்சியின் போது, பிரதமரின்  ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை பிரதமர் விடுவித்தார்.  தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் படி சமமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பன்முக சமூகத்தை உருவாக்க இந்தப் பள்ளிகள் மாணவர்களை, ஈடுபாடு, உற்பத்தித்திறன் மற்றும் பங்களிக்கும் குடிமக்களாக மாற்றும் வகையில் வளர்க்கும். 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார்.

***

AP/PKV/DL



(Release ID: 1943935) Visitor Counter : 131