உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கஜுரஹோவில் ஹெலி உச்சி மாநாடு 2023, உடான் 5.2 ஆகியவற்றை திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா தொடங்கி வைத்தார்

Posted On: 25 JUL 2023 4:15PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுரஹோவில் 2023-ம் ஆண்டுக்கான ஹெலி உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது ஆர்.சி.எஸ் உடான் 5.2 மற்றும் ஹெலிசேவா-செயலியையும் திரு சிந்தியா அறிமுகப்படுத்தினார்.

மத்தியப் பிரதேச அரசு, பவன் ஹான்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி)  ஆகியவற்றுடன் இணைந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாடு (ஹெலி உச்சி மாநாடு 2023) ஏற்பாடு செய்யப்பட்டது. “கடைசிப்பகுதியையும் அடைதல்:ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை விமானம் மூலம் மண்டலப் போக்குவரத்து தொடர்பு” என்பது இந்த நிகழ்வின் மையப்பொருளாகும். நிகழ்வில் ஒரு தொடக்க அமர்வும், அதைத் தொடர்ந்து ஒரு தொழில்நுட்ப அமர்வும் இருக்கும். உச்சிமாநாட்டின் பரந்த நோக்கங்கள் பின்வருமாறு:

இந்திய ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானத்துறையின் வளர்ச்சி பற்றி விவாதிக்க அனைத்து தொழில் பங்கேற்பாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை அளித்தல்.

தொலைதூர மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பில் உடான் திட்டத்தின் நோக்கத்தை அதிகரித்தல் மற்றும் நாட்டின் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புற இணைப்பை விரிவுபடுத்துதல்.

தடையற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் தற்போதுள்ள மற்றும் சாத்தியமான சுற்றுலாத் தலங்களைக்கொண்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான இணைப்பை மேம்படுத்துதல்.

நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கடந்த 9 ஆண்டுகளில் ஜனநாயக மயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களின் எண்ணிக்கையுடன், விமானங்களின் எண்ணிக்கை மற்றும் சந்தை அளவிலும் மிகப்பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தில் பெருநகர விமான நிலையங்கள் மற்றும் பெரிய விமான நிறுவனங்கள், சிறுநகர விமான நிலையங்கள், சிறிய விமான நிறுவனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் போலவே முக்கியமானவை என்று அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா  தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இன்று ஹெலிகாப்டர்களுக்கான உடான் 5.2  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் கீழ் வி.ஜி.எஃப் (விமான இயக்கத்திற்கும், எதிர்பார்க்கும் லாபத்திற்குமான இடைவெளியை குறைப்பதற்கான மானியம்) அதிகரித்துள்ளது, கட்டண வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஹெலிசேவாவின் ஒற்றைச் சாளர சேவை தளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் மொபைலில் ஏ.டி.சி.யின் அனைத்து ஒப்புதல்களையும் பெற முடியும்.

இந்த நிகழ்வின் போது ஹெலி-சேவா மொபைல் பயன்பாட்டையும் திரு சிந்தியா அறிமுகப்படுத்தினார்.  ஹெலிசேவா போர்ட்டல் என்பது டிஜிட்டல் இந்தியாவின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு முன்முயற்சியாகும். ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையே சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பொதுவான தளத்தை ஏற்படுத்துகிறது. ஏற்றுதல், உள்ளடக்கம், செயல்பாடு ஆகியவற்றில், இந்த மொபைல் பயன்பாடு, பயனர் அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் ஹெலிகாப்டர் மற்றும் சிறிய ரக விமானத் துறையை மேம்படுத்துவதற்காக பவன் ஹன்ஸ் மற்றும் ஜெட்சர்வ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

***

ANU/AP/SMB/KPG



(Release ID: 1942507) Visitor Counter : 111