பிரதமர் அலுவலகம்

23-வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Posted On: 04 JUL 2023 7:45PM by PIB Chennai

மேதகு உறுப்பினர்களே!

 

வணக்கம்!

 

இன்று, 23-வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது முழு ஆசியாவின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவும் தளமாக உருவெடுத்துள்ளது. நாங்கள் ஆசியா முழுவதையுமே குடும்பமாக பார்க்கிறோம்.

 

மேதகு உறுப்பினர்களே,

 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக  அதன் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியா பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தையும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் செய்துள்ளோம். முதலாவது, வசுதைவ குடும்பகம். அதாவது உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதாகும். இது நவீன காலத்தில் நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இரண்டாவது கொள்கை SECURE என்பதாகும். இது பாதுகாப்பு(S), பொருளாதார மேம்பாடு(E), இணைப்பு(C), ஒற்றுமை(U), இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை(R) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இது எங்கள் தலைமைப் பொறுப்பின் நோக்கத்தையும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கான எங்களது பார்வையையும் பிரதிபலிக்கிறது.

 

இந்தக் கண்ணோட்டத்துடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் இந்தியா ஐந்து புதிய அம்சங்களை முன்னெடுத்துள்ளது:

 

ஸ்டார்ட்-அப் நிறுனங்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள்,

பாரம்பரிய மருத்துவம்,

இளைஞர்களுக்கு அதிகாரம்,

டிஜிட்டலில் இணைத்தல், மற்றும்

பகிரப்பட்ட புத்த பாரம்பரியம்

 

மேதகு உறுப்பினர்களே,

 

இந்தியாவின் தலைமையின் கீழ், நாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளோம். ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பு என்பதை 9 நாடுகளுக்குள் சுருக்க இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் தலைமையின் கீழ் முதன்முறையாக எஸ்சிஓ சிறுதானிய உணவு விழா, திரைப்பட விழா,  புத்த பாரம்பரியம் பற்றிய சர்வதேச மாநாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

 

மேதகு உறுப்பினர்களே,

 

இன்று உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த சவாலை சமாளிக்க தீர்க்கமான நடவடிக்கை தேவை. பயங்கரவாதத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும், அதற்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கையாகப் பயன்படுத்துகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை விமர்சிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது. இதுபோன்ற தீவிரமான விஷயங்களில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை.

 

மேதகு உறுப்பினர்களே,

 

ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமை நேரடியாக நம் அனைவரின் பாதுகாப்பையும் பாதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள கவலைகளையே அனைத்து எஸ்சிஓ நாடுகளும் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களின் நல்வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

 

மேதகு உறுப்பினர்களே,

 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் எங்களுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. எஸ்சிஓவின் அடுத்த தலைவரும், கஜகஸ்தான் அதிபரும், எனது நண்பருமான டோகாயேவிற்கு இந்தியாவின் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்சிஓவின் வெற்றிக்காக அனைவருடனும் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

 

மிக்க நன்றி.

 

பொறுப்புத் துறப்பு - இது பிரதமரின் கருத்துகளின் தோராயமான மொழிபெயர்ப்பு. உண்மையான உரை இந்தியில் வழங்கப்பட்டது.

***

(Release ID :1937353)

AP/CR/RJ



(Release ID: 1937783) Visitor Counter : 204