கலாசாரத்துறை அமைச்சகம்

முதலாவது உலகளாவிய புத்தமத உச்சிமாநாட்டை ஏப்ரல் 20-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 17 APR 2023 8:01PM by PIB Chennai

புதுதில்லியில் ஏப்ரல் 20-ஆம் தேதி, முதலாவது உலகளாவிய புத்தமத உச்சிமாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சி அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். மத்திய கலாச்சார அமைச்சகமும், சர்வதேச புத்தமத கூட்டமைப்பும் இணைந்து ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தவிருக்கின்றன. விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், முதலாவது உலகளாவிய புத்தமத உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்ததாக அவர் கூறினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற புத்தமத  துறவிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக இந்தியா வரவிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கூறினார். புத்த மதத்தின் தத்துவங்கள் மற்றும் கோட்பாடுகளின் உதவியோடு சமகால சவால்களை எதிர்கொள்வது பற்றி உச்சிமாநாட்டில் விவாதங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதர நாடுகளுடனான கலாச்சாரம் மற்றும் தூதரக உறவுகளை மேம்படுத்தும் ஊடகமாகவும் இந்த உச்சிமாநாடு விளங்கும், என்றார் அவர். சுமார் 30 நாடுகளிலிருந்து 171 பிரதிநிதிகளும், இந்திய புத்தமத அமைப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 150 பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

 (Release ID: 1917432)



(Release ID: 1917608) Visitor Counter : 165