பிரதமர் அலுவலகம்

ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்


கடந்த 2 மாதங்களில் ஆறாவது வந்தேபாரத் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது

“முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று ராஜஸ்தான் பெற்றுள்ளது. இது போக்குவரத்து தொடர்பை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தி சுற்றுலாவை மேம்படுத்தும்”

“இந்தியா முதலில், எப்போதும் முதலில் என்ற உணர்வை வந்தேபாரத் நனவாக்கியுள்ளது”

“வளர்ச்சி, நவீனத்துவம், நிலைத்தன்மை, தற்சார்பு ஆகியவற்றுடன் இணைந்திருப்பதாக வந்தேபாரத் ரயில் மாறியுள்ளது”

“ரயில்வே போன்ற, குடிமக்களுக்கு முக்கியமான, அடிப்படைத் தேவை, துரதிருஷ்டவசமாக அரசியல் பகுதியாக மாறியிருந்தது”

“2014-க்கு பின் ராஜஸ்தானுக்கான ரயில்வே பட்ஜெட் 14 மடங்கு அதிகரித்துள்ளது, 2014-ல் 700 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 9500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது”

“பாரத் கௌரவ் சுற்றுவட்ட ரயில்போக்குவரத்து ஒரே பாரதம்- உன்னத பாரதம் என்ற உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது”

“ரயில்வே போன்ற போக்குவரத்து தொடர்பின் கட்டமைப்பு வலுப்படும்போது நாடு வலுப்படுகிறது. இது நாட்டின் சமான்ய மக்களுக்கு பயனளிக்கிறது, ஏழைகளுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் பயனளிக்கிறது”

Posted On: 12 APR 2023 12:27PM by PIB Chennai

ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வையொட்டி திரண்டிருந்த மக்களிடையே  உரையாற்றிய பிரதமர், வீரம் செறிந்த ராஜஸ்தான் பூமி அதன் முதலாவது வந்தேபாரத் ரயில் வண்டியை பெற்று இருப்பதற்காக பாராட்டு தெரிவித்தார். இது ஜெய்பூர்-தில்லி இடையேயான பயணத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, தீர்த்ராஜ் புஷ்கர், அஜ்மீர் ஷெரீஃப் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இது உதவும் என்பதால், ராஜஸ்தான் சுற்றுலா தொழில் துறைக்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார்.

தில்லி-ஜெய்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் ஆறு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வாய்ப்பை பெற்றதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  மும்பை-சோலாப்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், மும்பை-ஷிரடி வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், ராணி கமலபதி- ஹஸ்ரத் நிஜமுதீன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், செகந்திராபாத்- திருப்பதி வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை மற்ற ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்களாகும். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 லட்சம் மக்கள் பயணம் செய்திருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். “வந்தேபாரத் ரயிலின் வேகம்  முக்கிய சிறப்பம்சம் என்றும், மக்களின் நேரத்தை இது சேமிக்கிறது” என்றும் பிரதமர் கூறினார். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மூலம், பயணம் செய்தவர்கள் ஒவ்வொரு போக்குவரத்தின் போது, 2500 மணி நேரத்தை சேமித்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உற்பத்தித் திறன், பாதுகாப்பு, அதிவேகம், அழகான வடிவமைப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்  உருவாக்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மக்கள் பெரிதும் வரவேற்பதாக  கூறிய பிரதமர், இந்த எக்ஸ்பிரஸ் ரயில்  இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது  பகுதியளவு தானியங்கி ரயிலாகும் என்றும், உலகிலேயே கச்சிதமான, திறன்மிக்க ரயில் வண்டிகளில் ஒன்றாகும் என்றும் கூறினார். “உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புக்கான கவச் கருவியை பெற்றுள்ள முதலாவது ரயிலாகவும், வந்தேபாரத் உள்ளது” என்று திரு மோடி கூறினார். கூடுதல் என்ஜின் தேவைப்படாமல் சாஹ்யாத்ரி மலைத்தொடரின் உயரத்தை அளவிடும் முதலாவது ரயிலாகவும் இது உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா முதலில், எப்போதும் முதலில் என்ற உணர்வை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் நனவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சி, நவீனத்துவம், நிலைத்தன்மை, தற்சார்பு ஆகியவற்றுடன் இணைந்திருப்பதாக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மாறியிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரயில்வே போன்ற குடிமக்களுக்கு முக்கியமான, அடிப்படைத் தேவை அரசியல் பகுதியாக மாறியிருந்தது பற்றி  பிரதமர் கவலைத் தெரிவித்தார். சுதந்திர காலத்தில் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னலை இந்தியா கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்துக்கு பிந்ததைய ஆண்டுகளில் நவீன மயத்திற்கான தேவையில் அரசியல் நலன் ஆதிக்கம் செலுத்திவிட்டது என்று அவர் கூறினார். ரயில்வே அமைச்சரை தெரிவு செய்வதில், ரயில்கள் பற்றிய அறிவிப்பில், பணி நியமனங்களில் கூட, அரசியல் சார்பு இருந்தது. ரயில்வே பணிகளின் தவறான புரிதலோடு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் பல மிக நீண்ட காலத்திற்கு நீடித்தன. தூய்மையும், பாதுகாப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டன. முழுமையான பெருபான்மையுடன் நிலையான அரசை 2014-ல் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் அழுத்தம் காலாவதியானது. ரயில்வே நிம்மதி பெருமூச்சு விட்டது. புதிய உச்சத்திற்கு அது சென்றது என அவர் கூறினார்.

புதிய வாய்ப்புகளின் பூமியாக ராஜஸ்தானை மத்திய அரசு மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். தனது பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக சுற்றுலாவை கொண்டிருக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்திற்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து தொடர்புக்கு முன்னெப்போதும் இல்லாத பணிகளை மத்திய அரசு செய்திருப்பதாக அவர் கூறினார். ராஜஸ்தானின் எல்லைப்பகுதிகளில் சுமார் 1400 கிலோமீட்டர் தூர சாலைப்பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் மாநிலத்தில் 1000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் போக்குவரத்து தொடர்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை கோடிட்டுக்காட்டிய பிரதமர், தரங்கா குன்று முதல் அம்பாஜி வரை ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.  நூறு ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள இந்த பாதைக்கான கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. உதய்பூர் – அகமதாபாத் ரயில்பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்த அவர், 75 சதவீதத்திற்கும் அதிகமான ரயில்வே வலைப்பின்னல் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றார். 2014-க்கு பின் ராஜஸ்தானுக்கான ரயில்வே பட்ஜெட் 14 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2014-ல் 700 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 9500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ரயில்வே பாதைகளை இருமடங்காக்கும் பணிகளின் வேகமும், இருமடங்காகியுள்ளது.  பாதை மாற்றம் மற்றும் இரட்டிப்பாக்குவது துங்கர்பூர், உதய்பூர், சித்தோர்கர், பாலி, சிரோஹி போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவியாக உள்ளது. அமிர்த பாரத் ரயில்வே திட்டத்தின் கீழ், பத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

சுற்றுலா பயணிகளின் வசதியை மனதில் கொண்டு பல்வேறு வகையான  ரயில்களை அரசு இயக்கி வருவதாக கூறிய பிரதமர், பாரத் கௌரவ் ரயில் இதற்கு உதாரணமாக திகழ்கிறது என்று  தெரிவித்தார். இந்த ரயில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறைகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், 15,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.  அயோத்தி - காசி, தக்சின் தர்ஷன், துவாரகா தர்ஷன், சீக்கியர்கள் புனித தலங்கள் என பல்வேறு இடங்களுக்கு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.  இதில் பயணம் செய்தவர்கள், சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட நேர்மறையான பின்னூட்டம் குறித்து தெரிவித்த பிரதமர், ஒரே பாரதம்  உன்னத பாரதம் என்ற உத்வேகத்தை இந்த ரயில்கள் தொடர்ந்து வலிமைப்படுத்துவதாக கூறினார்.

ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு இயக்கம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், ராஜஸ்தானில் தயாரிக்கப்படும் உள்ளூர் பொருட்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான மற்றொரு முயற்சிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 70 ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு பொருள் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு ராஜஸ்தான் ஜெய்ப்பூர் படுக்கை விரிப்புகள், ரோஜா உற்பத்திப் பொருட்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார். இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் சிறு விவசாயிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், ஆகியோருக்கு புதிய சந்தை வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். வளர்ச்சிக்கான பங்களிப்பில் அனைவரும் பங்கேற்பதற்கு இது உதாரணம் என்று பிரதமர் கூறினார். ரயில் போன்ற போக்குவரத்து கட்டமைப்புகள்  வலிமையாகும் போது, நாடும் வலிமையாகுவதாக அவர் தெரிவித்தார். இதனால், நாட்டின் குடிமக்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவதாக அவர் தெரிவித்தார். நவீன வந்தேபாரத் ரயில் ராஜஸ்தானின் விரைவான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

முதற்கட்டமாக தொடக்க நாளில் ஜெய்பூர்-தில்லி கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை ஏப்ரல் 13 அன்று தொடங்கும். இந்த ரயில் அஜ்மீரிலிருந்து ஜெய்பூர், ஆல்வர், குர்கான் வழியே தில்லி கண்ட்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.

தில்லி கண்ட்டோன்மென்ட்- அஜ்மீர் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் அடையும். தற்போது இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி 15 நிமிடங்களில் சென்றடைகிறது.  அதே வழித்தடத்தில் தற்போது மற்ற ரயில்கள்  செல்லும் நேரத்தைவிட 60 நிமிடங்கள் விரைவாக புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்படும். 

புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும்.

-----------

 AP/SMB/IR/RS/KPG/RR



(Release ID: 1915857) Visitor Counter : 168