வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
அசாம் ரைஃபிள்ஸ் படையின் 188-வது அமைப்பு தின விழாவில் மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பங்கேற்பு
Posted On:
24 MAR 2023 12:58PM by PIB Chennai
ஷில்லாங்கில் நடைபெற்ற அசாம் ரைஃபிள்ஸ் படையின் 188-வது அமைப்பு தின விழாவில் மத்திய வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். 1835-ஆம் ஆண்டு முதல் வீரத்தின் இணையற்ற புகழையும், அதிக எண்ணிக்கையிலான வீரதீர சாகச விருதுகளையும் அசாம் ரைஃபிள்ஸ் படை பெற்றுள்ளது என்று அமைச்சர் கூறினார். வீரர்களின் உயரிய தியாகத்தின் வாயிலாக இந்த பெருமை சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.
அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக வடகிழக்குப் பகுதியை உருவாக்குவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜி. கிஷன் ரெட்டி குறிப்பிட்டார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் உள்கட்டமைப்பு, இணைப்பு, அமைதி, நிலைத்தன்மை என அனைத்துத் துறைகளிலும் வடகிழக்கு மாகாணங்கள் வேகமாக முன்னேறி, இங்கு புதிய யுகம் பிறந்துள்ளது என்று அமைச்சர் பெருமிதம் கொண்டார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை தொடர்வதற்காக சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், மேலும் ரூ. 77,930 கோடி மதிப்பில் ரயில்வே திட்டங்கள், ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் சாலைத் திட்டங்கள் மற்றும் 17 புதிய விமான நிலையங்கள் போன்ற பிரம்மாண்டமான திட்டங்கள் இங்கு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதியில் இத்தகைய புதிய மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு அசாம் ரைஃபிள்ஸ் படை மிகப்பெரிய பங்காற்றி உள்ளதாக அவர் கூறினார்.
பேரிடர் மேலாண்மை பணிகளின் போது அசாம் ரைஃபிள்ஸ் படையின் செயல்பாடுகளையும், அதன் வலிமை மற்றும் குழு பணியால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஓர் அங்கமாக நியமிக்கப்பட்டிருப்பதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். படையின் பெண் அதிகாரிகளின் பங்களிப்பு பற்றி பேசிய அமைச்சர், அவர்களது பணி இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி இந்தியாவின் மகளிர் சக்தியின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்று தெரிவித்தார்.
***
(Release ID: 1910285)
SM/RB/KRS
(Release ID: 1910328)