உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடி ஆட்சியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்- மத்திய அமைச்சர் அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2023 4:53PM by PIB Chennai

பிரதமர் மோடி ஆட்சியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் ஸ்ரீ சுவாமி நாராயண் சன்ஸ்தன் வட்தல் கட்டியுள்ள எஸ்ஜிஎம்எல் கண் மருத்துவமனையை காணொலிக்காட்சி மூலம் அவர் இன்று திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி, தனது உரையைத் தொடங்கிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, 50 படுக்கை வசதி கொண்ட கண் மருத்துவமனை ரூ.15 கோடி மதிப்பீட்டில்  மிகச்சிறந்த தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஏழை கண் நோயாளிகள் குறைந்த செலவில் சிகிச்சைப் பெற முடியும் என்றார்.

நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வசதிகளை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார். இதன்மூலம் இதுவரை 80 கோடி ஏழைகள் பயனடைந்துள்ளனர். அதேபோல் பிரதமர் மோடி ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

ஏழைகள் பெருமளவில் பயனடையும் வகையில், 22 புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது என்றும் மருத்துவப் படிப்பை மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

***

AP/GS/RJ/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1894770) வருகையாளர் எண்ணிக்கை : 380
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu