பிரதமர் அலுவலகம்

காவல் துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் ஜனவரி 21-22 தேதிகளில் பங்கேற்பு

Posted On: 20 JAN 2023 6:31PM by PIB Chennai

புதுதில்லியின் பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டிஜிபி/ஐஜிபி) மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 ஜனவரி 21-22 தேதிகளில் பங்கேற்கிறார்.

2023 ஜனவரி  20-22ம் தேதி வரை நடைபெறும் இந்த 3 நாள் மாநாடு நேரடி மற்றும் காணொலி என இருவகைகளிலும் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கின்றனர் மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொள்கின்றனர்.

இணையதளக் குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பில் உள்ள சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், திறன் கட்டமைப்பு, சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள்கள் குறித்து மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்ட விரிவான கலந்துரையாடல் இந்த மாநாட்டில் இடம் பெறும். ஒவ்வொரு கருப்பொருளிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றும் நடைமுறைகள் இந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் சிறந்த நடைமுறைகள் குறித்து பிற மாநிலங்கள் கற்க இயலும்.

2014-ம் ஆண்டு முதல் காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். முந்தைய காலங்களில் அடையாளமாக பங்கேற்றது போல் அல்லாமல் தற்போது பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று வருகிறார்.  கருத்துக்களை பொறுமையாக பிரதமர் கேட்பதுடன் புதிய சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைப்பதற்கான முறைசாரா விவாதங்களையும் பிரதமர் ஊக்குவித்து வருகிறார். இந்த நடைமுறை காவல்துறை உயர் அதிகாரிகள், பிரதமரிடம் நேரடியாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை எடுத்துரைக்க உதவுகிறது. அத்துடன்  காவல்துறை அதிகாரிகள் வெளிப்படையாக தங்களது பரிந்துரைகளையும் வழங்க முடிகிறது.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் இந்த மாநாடு, நிகழ்கால பாதுகாப்பை உறுதி  செய்வது மட்டுமல்லாமல், சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் காவல் துறை மற்றும் பாதுகாப்பில் எதிர்காலத்திற்கான கருப்பொருள்கள் குறித்து  ஆலோசிக்கும் வகையிலும் இந்த மாநாட்டில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் திரு நரேந்திர மோடி, டிஜிபிக்களில் ஆண்டு மாநாட்டை ஊக்குவித்து வருகிறார். இந்த மாநாடு, 2014-ல் குவஹாத்தியிலும், 2015-ல் கட்ச் வளைகுடாவிலும், 2016-ல் ஐதராபாத்திலும், 2017-ல் டெகான்பூரில் உள்ள பிஎஸ்எஃப் பயிற்சி மையத்திலும், 2018-ல் கெவாடியாவிலும் மற்றும் 2019-ல் புனே ஐஐஎஸ்இஆர்-லும், 2021-ஆம் ஆண்டு லக்னோ காவல் துறை தலைமையகத்திலும் நடத்தப்பட்டன. 

***

(Release ID: 1892526)

AP/PLM/KPG/KRS

 



(Release ID: 1892565) Visitor Counter : 220