பிரதமர் அலுவலகம்

விசாகப்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை

Posted On: 12 NOV 2022 1:40PM by PIB Chennai

ஆந்திர பிரதேச ஆளுநர் திரு பிஸ்வபூஷன் அவர்களே, முதலமைச்சர் திரு ஜகன் மோகன் ரெட்டி அவர்களே, நாடாளுமன்ற நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

விசாகப்பட்டினம், இந்தியாவின் சிறப்பு மிகுந்த நகரமாகும். பழங்கால இந்தியாவில் முக்கிய துறைமுகமாக இந்நகரம் விளங்கியது. இந்திய வர்த்தகத்தின் மையப்புள்ளியாக இன்றும் விசாகப்பட்டினம் தொடர்ந்து நீடிக்கிறது. ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது, ஆந்திர பிரதேசம் மற்றும் விசாகப்பட்டினம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான காரணியாக அமையும். இந்த திட்டங்கள் உள்கட்டமைப்பு, எளிதான வாழ்வு மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற புதிய பரிமாணங்களுக்கு வித்திடுவதோடு, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை புதிய உயரத்திற்கும் கொண்டு செல்லும்.

நண்பர்களே,

உள்கட்டமைப்பு குறித்த நமது தொலைநோக்குப் பார்வை இன்றைய நிகழ்ச்சியில் தெளிவாக வெளிப்படுகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தினால் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு  சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டம் உள்கட்டமைப்பின் வேகத்தை அதிகரித்திருப்பதோடு திட்டங்களின் செலவையும் குறைத்துள்ளது. இன்று ஒட்டுமொத்த உலகமும் சவால்களின் புதிய யுகத்தை சந்தித்து வருகிறது. இருந்த போதும் பல்வேறு துறைகளில் இந்தியா புதிய உயரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. நமது ஒவ்வொரு முடிவும், கொள்கையும் சாமானிய மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் ஒற்றை நோக்கத்தோடு எடுக்கப்படுகிறது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பத் திட்டம், ஜி.எஸ்.டி, தேசிய உள்கட்டமைப்பு திட்டம், விரைவு சக்தி போன்ற கொள்கைகளால் இன்று இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அதே வேளையில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுகின்றன.

ஆந்திராவில் நவீன தொழில்நுட்பத்தினால் ஆழ்கடல் எரிசக்தி குறித்து ஆய்வு செய்யப்படும். கடல்சார் பொருளாதரத்துடன் தொடர்புடைய எண்ணிலடங்காத வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சிகளை நாடு மேற்கொண்டு வருகிறது. முதன்முறையாக கடல்சார் பொருளாதாரத்திற்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்படுகிறது. முழுமையான வளர்ச்சி என்ற சிந்தனையை 21-ஆம் நூற்றாண்டின் இந்தியா அமல்படுத்தி வருகிறது. நாட்டின் இத்தகைய வளர்ச்சியில் ஆந்திர பிரதேச தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த உறுதிபாட்டோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புக் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****

MSV/RB/IDS



(Release ID: 1875755) Visitor Counter : 167