பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 NOV 2022 10:09PM by PIB Chennai

குரு ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டுள்ள என்னுடைய சகா திரு ஹர்தீப் சிங் புரி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் திரு ஜான் பர்லா,  திரு இக்பால் சிங் லால்புரா, திரு ரஞ்சித்  சிங், திரு ஹர்மித் சிங் கல்கா அவர்களே, மற்றும் சகோதர, சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் குரு ஜெயந்தி 2022, விழாவையொட்டி, என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

குரு கோவிந்த் சிங் அவர்களின் 350 வது ஜெயந்தி, குரு தேஜ் பகதூர் அவர்களின் 400 வது ஜெயந்தி மற்றும் குரு நானக் தேவ் அவர்களின் 550 வது ஜெயந்தி விழா போன்ற முக்கிய பிரகாஷ் பர்வ் எனப்படும் ஒளிகளுக்கான விழாக்களைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மங்களகரமான நிகழ்வுகளின் உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்கள் புதிய இந்தியாவின் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு பிரகாஷ் பர்வின் ஒளியும் நாட்டிற்கு பிரகாசமான ஆதாரமாக செயல்படுகிறது. சீக்கிய சமூகத்தால் பின்பற்றப்படும் பிரகாஷ் பர்வின் பொருள், கடமை மற்றும் அர்ப்பணிப்பின் தேசிய பாதையை காட்டுகிறது.

நண்பர்களே!

குரு நானக் தேவ் அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் நலனுக்காக நாடு முன்னேறி வருகிறது. ஆன்மீக ஞானம், உலக செழிப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான குரு நானக் தேவ் அவர்களின் போதனைகளை நான் நினைவு கூர்கிறேன்.

குரு கிரந்த் சாஹிப் வடிவில் நமக்குக் கிடைத்திருக்கும் அமிர்தத்தின் மகிமை, அதன் முக்கியத்துவம் காலம் மற்றும் புவியியல் எல்லைக்கு அப்பாற்பட்டது. நெருக்கடி பெரிதாகும்போது, இந்தத் தீர்வுகளின் பொருத்தம் இன்னும் அதிகமாகிறது. உலகில் அமைதியின்மை மற்றும் அமைதியற்ற காலங்களில், குரு சாஹிப்பின் போதனைகளும் குரு நானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் ஒரு ஜோதியைப் போல உலகிற்கு வழிகாட்டுகின்றன. நமது குருக்களின் இலட்சியங்களை நாம் எவ்வளவு அதிகமாக பின்பற்றுகிறோமோ, அந்த அளவுக்குஒரே பாரதம் உன்னத பாரதம்என்ற உணர்வை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம், மனித நேய விழுமியங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு குருவின் போதனைகள் வலுவோடும், தெளிவாகவும் உள்ளன.

நண்பர்களே!

குருநானக் தேவ் அவர்களின் ஆசீர்வாதத்தால், கடந்த 8 ஆண்டுகளில் சீக்கியர்களின் மகத்தான பாரம்பரியத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. குருக்களின் ஆசீர்வாதத்துடன், இந்தியா தனது சீக்கிய பாரம்பரியத்தின் மகிமையை மேம்படுத்தி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நண்பர்களே!

குருவின் கருணையால் சீக்கியர்களின் பாரம்பரியத்தை இந்தியா தொடரும் என்றும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்றும் நான் நம்புகிறேன். இதே உத்வேகத்துடன் குருவின் பாதத்திற்கு மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் மக்களுக்கும் குரு ஜெயந்தி வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி!

**************

SG/IR/KPG/IDS


(Release ID: 1874657) Visitor Counter : 171