பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் புதிர்வழித் தோட்டம் மற்றும் மியாவாக்கி காட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்

Posted On: 30 OCT 2022 7:25PM by PIB Chennai

புத்தர் சிலை உள்ளிட்ட வனப்பகுதியில் நடந்து சென்ற பிரதமர், அதன்பிறகு புதிர்வழித் தோட்டத்திற்குச் சென்றார். புதிய நிர்வாக கட்டிடத்தையும், ஓயோ படகு இல்லத்தையும் அவர் திறந்து வைத்தார். புதிர்வழித் தோட்டத்தையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.

பின்னணி:

மியாவாக்கி காடு மற்றும் புதிர்வழித் தோட்டம் ஆகியவை ஒற்றுமை சிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றுலாத் தலங்களாகும். 2100 மீட்டர் நடைபாதையுடன் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் பிரம்மாண்டமான புதிர்வழித் தோட்டத்தின் பணிகள், மிகக் குறுகிய காலமாக எட்டு மாதங்களிலேயே நிறைவடைந்துள்ளது. நேர்மறையான சக்தியை அளிக்கும் ‘யந்திர’ வடிவத்தில் கெவாடியாவில் புதிர்வழித் தோட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1,80,000 செடிகள் இந்தத் தோட்டத்தில் நடப்பட்டுள்ளன.

ஏக்தா நகருக்கு வருகை தரும் மக்களின் மற்றொரு விரும்பத்தக்க தலமாக மியாவாக்கி காடு திகழும். ஜப்பான் நாட்டின் தாவரவிய வல்லுநரும், சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய நுட்பத்தின் பெயரால் இந்த காடு அழைக்கப்படுகிறது. இந்த புதிய நுட்பத்தின்படி, பல்வேறு இனங்களின் மரக்கன்றுகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக நடப்பட்டு, அதன் மூலம் அடர்ந்த நகர்ப்புற காடு உருவாக்கப்படுகிறது. இந்த முறையில் செடிகளின் வளர்ச்சி 10 மடங்கு வேகமாக இருப்பதால், 30 மடங்கு அடர்த்தியான வளர்ச்சியை காடு அடைகிறது. பாரம்பரிய முறையில் காடு வளர்வதற்கு குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், மியாவாக்கி முறையில் வெறும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளிலேயே காடு வளர்ச்சி பெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872060

**************

(Release ID: 1872060)



(Release ID: 1872206) Visitor Counter : 147