பிரதமர் அலுவலகம்

கார்கிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்


இந்த நிகழ்வின்போது துணிச்சல்மிக்க வீரர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 24 OCT 2022 2:26PM by PIB Chennai
  • பல ஆண்டுகளாக நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். தீபாவளி என்பது பயங்கரவாதத்தை முடிவு கட்டும் விழாவாகும் ”
  • இந்தியாவை நாம் மதிப்பது வெறும் புவியியல் பகுதியாக அல்ல வாழும் உணர்வாக, நிலையான  உணர்வாகஅழியாத வாழ்வாகக் கருதுகிறோம் ”
  • எல்லையில் நீங்கள் கேடயம்போல் நிற்கிறீர்கள் நாட்டுக்கு உள்ளேயும்கூட எதிரிகளுக்கு எதிராகக் கண்டிப்புடன் நடவடிக்கைஎடுக்கப்படுகிறது”
  • “400க்கும் அதிகமான பாதுகாப்பு சாதனங்களை இனிமேல் வெளிநாட்டிலிருந்து வாங்குவதில்லை, இந்தியாவிலேயே அவை தயாரிக்கப்படும் என்று முடிவு செய்திருப்பதற்காக நமது ராணுவத்தை நான் பாராட்டுகிறேன் ”
  • தேசப் பாதுகாப்புக்கான புதிய சவால்கள், புதிய முறைகள், மாறிவரும் தேவைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப நாட்டின் ராணுவத்தை பலப்படுத்த நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம் ”

ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது என்ற தமது பாரம்பரியத்தை மனதில் கொண்டு கார்கிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளியைக்  கொண்டாடினார். தீரம் மிக்க வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர்,  கார்கில் பூமியின் மதிப்பு என்பது எப்போதும் ராணுவத்தில் நமது துணிச்சல் மிக்க புதல்வர்களையும்  புதல்விகளையும் நோக்கியதாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எனது குடும்பத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று பிரதமர் கூறினார். வீரர்களுடன் இருக்கும்போது தீபாவளியின் இனிமை கூடுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் இவர்களுடன் இருக்கும்போது தனது உணர்வு மேலும் பலமடைகிறது என்றார். "ஒரு பக்கம் நமது தேசத்தின் இறையாண்மை மிக்க எல்லைகள் இருக்கின்றன மறுபக்கம் உறுதி பூண்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் நாம் நமது தாய் நாட்டை நேசிக்கிறோம் மறுபக்கம் தீரமிக்க ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.  இவ்வளவு உச்சத்தில் எங்கேயும் தீபாவளியை நான் எதிர்பார்க்க முடியாது." இந்த வீரர்களின் தைரியத்தையும் துணிவையும் இந்தியா பெருமிதத்தோடு கொண்டாடுகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் இது நமது பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பகுதி என்றார்.  "இன்று வெற்றிகரமான கார்கிலிலிருந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் நான் மிக மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் கூறினார்.

 

தற்போதைய புவிசார் அரசியல் வரைபடத்தில் விளக்குகளின் திருவிழா அமைதி மற்றும் வளத்தைக்  காட்டுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து விவரித்த பிரதமர் "இது பயங்கரவாதத்தை முடிவுகட்டும் விழா" என்றார்.  கார்கில் இதைத்தான் மிகச் சரியாக செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வெற்றியின் கொண்டாட்டங்கள் இன்றும் நினைவுகூரப்படுவதாகப்  பிரதமர் தெரிவித்தார்.

 

கார்கில் போரைத் தாம்  கண்டதையும் அதனை நெருக்கமாக இருந்து கவனித்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். போரின் போது எதிரிகளுக்கு தக்க பதிலடி  கொடுத்தபோது ராணுவ வீரர்களுடன் பிரதமர் நேரத்தை செலவிட்டது பற்றிய 23 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களைப் பாதுகாத்து அவற்றைக் காண்பித்த அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில் கடமைப் பாதை என்னை போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றது என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டு மக்களால் திரட்டி தரப்பட்ட பொருட்களை வழங்குவதற்காக தாம் வந்திருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர் அது தமக்கு ஒரு வழிபாட்டுத் தருணமாக இருந்தது என்றார். அந்தக் காலத்தின் சூழ்நிலை பற்றி தெரிவித்த பிரதமர், நல்ல நோக்கத்திற்காக ஒவ்வொரு தனி நபரின் மனம், உடல், உயிர் அனைத்தும்  ஒருமித்த உறுதியை கொண்டிருந்ததாகவும் வெற்றியின் உற்சாகம் எங்களை சுற்றிலும் வானை நிறைத்தது என்றும் கூறினார்.

 

"இந்தியாவை நாம் மதிப்பது வெறும் புவியியல் பகுதியாக அல்ல வாழும் உணர்வாக, நிலையான  உணர்வாக,  அழியாத வாழ்வாகக் கருதுகிறோம்" என்று உயர்த்திப் பேசினார். தொடர்ந்து பேசிய திரு மோடி இந்தியாவைப் பற்றி நாம் பேசும்போது அதன் தொன்மையான கலாச்சாரம் முன்னுக்கு வருகிறது. மரபுகளின் சுழற்சி தானாகவே உருவானது.  இந்தியாவின் வலிமை வளரத் தொடங்கி இருக்கிறது என்றார். இந்தியா மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர் ஒரு பக்கத்தில் மிக உயர்ந்த இமய மலைகள் இருக்கின்றன மறுபக்கத்தில் இந்திய பெருங்கடல் சூழ்ந்திருக்கிறது என்றார். கடந்த கால நாகரீகங்கள் பலவும் மண் துகள்களாக அழிந்து போனதை நினைவு கூர்ந்த பிரதமர்,  இந்தியாவின் கலாச்சார நீரோட்டம் இன்னமும் எவ்வித இடையூறும் இன்றி நீடிப்பதை சுட்டிக்காட்டினார்.  ஒரு தேசம் அழியாமல் நீடிக்கிறது என்றால் அந்நிலத்தின் தீரமிக்க புதல்வர்களும் புதல்வியரும் அவர்களின் பலத்திலும் வளத்திலும் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்  என்பது பொருளாகும்  என அவர் விவரித்தார்.

 

கார்கில் போர்க்களம் இந்திய ராணுவத்தின் வீரத்திற்கு ஒளிரும் உதாரணமாகும். த்ராஸ், பட்டாலிக், டைகர் ஹில் ஆகியவை இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் வீரத்திற்கு முன்னால் எதிரிகள் தலைவணங்கிய மலையின் உச்சிகள் என்பது நிரூபிக்கப்பட்டன என்று திரு மோடி கூறினார். இந்தியாவின் எல்லைகளில் இருக்கின்ற மனிதர்கள்  இந்தியப் பாதுகாப்பின் உறுதியான தூண்கள் ஆவர். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அதன் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன, அதன் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது,   தன்னம்பிக்கையால் சமூகம் நிறைந்துள்ளது என்பது அதன் பொருள். நாட்டின் வளம் பற்றிய செய்தியை நாம் கேட்கும்போது ஒட்டுமொத்த தேசத்தின் மன உறுதியும் உயர்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டு மக்களிடையே உள்ள ஒருமைப்பாட்டு உணர்வை எடுத்துரைத்த பிரதமர் தூய்மை இந்தியா இயக்கம்,  மின்சாரம் மற்றும் குடிநீருடன் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ராணுவ வீரரும்  பெருமிதம் கொள்வார்கள். இந்த சேவைகள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு செல்வது குறைவாக இருந்தாலும் இது அவர்களுக்கு திருப்தியைத் தரும். போக்குவரத்து தொடர்பு அதிகரித்திருப்பதை ராணுவ வீரர்கள் கவனிக்கும் போது அவர்கள் முகாமிற்குச் செல்வதை எளிதாக்கும். விடுமுறை காலங்களில் வீட்டுக்குச்  செல்வதும் கூட எளிதாகும். 7-8  ஆண்டுகளுக்கு முன் 10ஆவது  இடத்திலிருந்த இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய ஐந்தாவது பொருளாதாரம் ஆக மாறி இருக்கும் அண்மைக்கால சாதனையையும் அவர் எடுத்துரைத்தார். புதிய கண்டுபிடிப்புக்கான தொழில் இயங்குவதை மனதில் கொண்டு 80,000த்திற்கும் அதிகமான புத்தொழில்கள் உருவாகியிருப்பது பற்றியும் பிரதமர் பேசினார். அகண்ட அலைவரிசை இணையதளத்தை விரிவு படுத்துவதற்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தி இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரோ நிகழ்த்திய புதிய சாதனையையும் அவர் நினைவு கூர்ந்தார்.  உக்ரைன் போர் குறித்தும் விவரித்த பிரதமர், மூவண்ணக்கொடி இந்தியர்களின் கேடயமாக இருந்து பாதுகாத்ததை சுட்டிக்காட்டினார்.

 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி வருவது பற்றி பிரதமர் விவரித்தார். எல்லையில் நீங்கள் கேடயம் போல் நிற்கிறீர்கள் அதே சமயம் நாட்டிற்குள் இருக்கின்ற எதிரிகளுக்கு எதிரான நடவடிக்கையும் கண்டிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.  பயங்கரவாதம், நக்சலிசம்,  தீவிரவாதம் ஆகியவற்றை வேரறுக்கும் முயற்சியில் நாடு வெற்றி பெற்றுள்ளது என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். நக்சலிசம் பற்றி பேசியபோது ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பகுதியை இது சுற்றி வளைத்திருந்தது என்று கூறினார்.  அதன் பலம் தொடர்ந்து சுருங்கி வருகிறது என்றும் அவர் கூறினார். ஊழல் பற்றி பேசிய பிரதமர் தீர்மானகரமான யுத்தத்தை இந்தியா நடத்தி வருகிறது என்றார். ஊழல் செய்தவர் எவ்வளவு சக்தி மிக்கவராக இருந்தாலும் சட்டத்திலிருந்து அவரால் தப்ப முடியாது என்றார்.  தவறான நிர்வாகம், நமது வளர்ச்சிப் பாதையில் தடைகளை உருவாக்கி  நாட்டின் ஆற்றலைக் குறைத்து விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.  அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை,  அனைவரின் முயற்சி என்ற மந்திரத்துடன் பழைய குறைகளை எல்லாம் நாங்கள் வெகு வேகமாக நீக்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

 

நவீனப் போர்முறையில் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர்,  இயற்கையான போர்களின்  தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்தப் புதிய சகாப்தத்தில் புதிய சவால்களுக்கும் புதிய நடைமுறைகளுக்கும் தேசப் பாதுகாப்பின் மாறிவரும் தேவைகளுக்கும் ஏற்ப நாட்டின் ராணுவ பலத்தை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.  ராணுவத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களின் தேவை பற்றி பேசிய அவர் பல தசாப்தங்களாக இவர்களின் தேவைகள் உணரப்பட்டுள்ளன, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த அவர் ஒவ்வொரு சவாலுக்கு எதிராகவும் வேகமான நடவடிக்கைகள் எடுக்க நமது படைப்பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றார். இதற்காக சி டி எஸ் போன்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது  எல்லைப் பகுதியில் நவீன அடிப்படை கட்டமைப்புக்கான வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நமது ராணுவ வீரர்கள் தங்களின் கடமைகளை செய்ய  அதிக வசதி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பல ராணுவ பள்ளிகள் நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

தற்சார்பு இந்தியா பற்றி எடுத்துரைத்த பிரதமர், இந்திய ராணுவங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களின் இருப்பு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டி காட்டினார். வெளிநாட்டு ஆயுதங்களை சார்ந்து இருப்பதைக் குறைத்துத்  தற்சார்புடன் இருக்க ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் உறுதி ஏற்று இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.  அதிகமான பாதுகாப்பு சாதனங்கள் இனிமேல் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட மாட்டாது என்றும் இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்றும் முடிவு செய்து இருப்பதைச் சுட்டிக்காட்டி முப்படைகளின்  செயலுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். உள்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் நம்பிக்கையில் உச்சத்தை தொடுவார்கள் என்றும் எதிரிகளின் மன உறுதியை நசுக்க இது ஒரு வியத்தகு விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பிரசாந்த் - இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள்,  தேஜஸ் போர் விமானங்கள், கப்பற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த்ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்த பிரதமர் அரிஹண்ட், பிருத்வி, ஆகாஷ்,  திரிசூல்,பினாக், அர்ஜுன் ஆகிய இந்தியாவின் ஏவுகணை பலத்தையும் அவர் எடுத்துரைத்தார்.  இப்போது இந்தியா பாதுகாப்பு  சாதனங்களின் ஏற்றுமதியாளராக மாறி இருக்கிறது என்று மேலும் தெரிவித்த அவர், நாட்டின் ஏவுகணை திறத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். ட்ரோன்கள் போன்ற நவீனமான, பயன்பாட்டிற்கு உகந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிய விரைவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

போர் என்பதை கடைசியாகத் தெரிவுசெய்வது என்ற பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம் என்று திருமோடி கூறினார். உலக சமாதானத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் போருக்கு எதிரானவர்கள் என்றும் பலம் இல்லாமல் அமைதி சாத்தியம் இல்லை என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். நமது ராணுவங்கள் திறமையையும் போர் உத்தியையும் பெற்றிருக்கின்றன என்றும் நம்மை யாராவது எதிர்த்தால்  அந்த எதிரிகளுக்கு அவர்களின் மொழியிலேயே தக்க பதிலடி கொடுப்பது எவ்வாறு என்பதை நமது ராணுவம் தெரிந்து வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அடிமை மனோபாவத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பற்றி பேசிய பிரதமர் புதிதாக தொடங்கப்பட்ட கடமைப்பாதையை உதாரணமாகக்  குறிப்பிட்டார். தேசிய  போர் நினைவுச் சின்னமாக இருந்தாலும் தேசிய காவலர்  நினைவுச் சின்னமாக இருந்தாலும் புதிய இந்தியாவுக்கு  இவை புதிய அடையாளத்தைத் தருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியக் கப்பற்படைக்கான புதிய கொடி பற்றி  நினைவு கூர்ந்த பிரதமர்,  கப்பற்படைக்கு சிவாஜியின் துணிச்சல் உந்து சக்தியாக இப்போது சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

 

ஒட்டுமொத்த உலகத்தின் கண்கள் இப்போது இந்தியா மீதும் அதன் வளர்ச்சித் திறன் மீதும் உள்ளன என்பதைப் பிரதமர் கோடிட்டுக்காட்டினார். சுதந்திரத்தின் அமிர்த காலம் இந்தியாவின் ஆற்றலுக்கு உண்மையான சான்றாக இருக்கிறது என்றும் திரு மோடி தெரிவித்தார். இதில் உங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. ஏனெனில் நீங்கள்தான் இந்தியாவின் பெருமிதம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல் ஒன்றைப் பாடியதுடன்  அவர் தமது உரையை   நிறைவுசெய்தார்.

 

****



(Release ID: 1870635) Visitor Counter : 194