பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் அம்பாஜியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 30 SEP 2022 10:53PM by PIB Chennai

ஜெய் மா அம்பே!

இந்த நாளில் நாம் அன்னையின் ஐந்தாவது அம்சமாகிய மாதா ஸ்கந்தமாதாவை நாம் வணங்குகிறோம். இந்த மங்கலகரமான தினத்தில், மாதா அம்பேயைத் தரிசித்து, அருளைப் பெறும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். எப்போதெல்லாம் இங்கு வருகிறோமோ, அப்போதெல்லாம் புதிய சக்தி கிடைக்கிறது. அந்த உணர்வுடன் இங்கிருந்து திரும்பிச் செல்கிறோம். இந்த முறை இங்கு நான் வந்திருக்கும் நேரத்தில், நாடு புதிய இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. அடுத்த 25  ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க 130 கோடி மக்களும் உறுதி பூண்டுள்ளனர். அன்னை அம்பாவின் அருளுடன் இந்த உறுதியை செயல்படுத்தும் வலிமையை நாம் பெறுவோம்.

சகோதர, சகோதரிகளே,

இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை மிகவும் எளிதாக தோன்றலாம். பிற நாடுகளைப் போல அல்லாமல் மகளிர் சக்தி என்பது நமது கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறது.  இருந்த போதும் பெண்களுக்கு நிதி சம்பந்தமான விஷயங்கள் போன்றவற்றில் வரையறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமே இருந்தது.  பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயரிலோ அல்லது அவர்களது பெயரும் சேர்த்தோ இருப்பதன் மூலம் இந்த நிலை சரி செய்யப்பட்டிருக்கிறது.  மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

சுமார் 80 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் இலவச ரேஷன் பொருட்கள் திட்டத்தை இந்த பண்டிகை காலத்தில் நீட்டிப்பதற்காக மத்திய அரசு ரூ. 4 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.  2014-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் வசிக்கும் பெண்களின் வாழ்க்கை அம்சங்கள் ஒவ்வொன்றும் கருத்தில் கொள்ளப்படுவதோடு, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்கள் உந்து சக்தியாக மாறி இருக்கின்றனர்.  மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அனைத்திலும் மகளிர் சக்தியே மையமாக இருப்பதை நீங்கள் காணலாம்.  கழிவறைகள், எரிவாயு இணைப்புகள், வீடு தோறும் குடிநீர், மக்கள் நிதி கணக்குகள், முத்ரா திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அல்லாமல் கடன் போன்ற திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளில் நீங்கள் இதனைக் காணலாம்.  இன்று தொடங்கப்பட்ட திட்டங்களால் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை நாம் அடையவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நமக்கு அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன. இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவின் பால் ஈர்க்கப்படுகின்றனர். இந்த வாய்ப்பை நாம் நழுவ விடலாமா? எனவே, நாம் கடினமாக உழைப்பதுடன், வளர்ச்சி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இந்தவிதமான முன்னேற்றத்தை அடைய உங்களுக்கு ஏராளமான ஆதரவு எப்போதும் கிடைக்கும். இதுதான் எனது வலிமை, இதுதான் எனது செல்வம். உங்களது ஆசி, நாம் முன்னேற ஊக்கமளிக்கும். நன்றி!

 

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

***************



(Release ID: 1864416) Visitor Counter : 110