பிரதமர் அலுவலகம்

குஜராத்தின், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


குஜராத்தின் வல்சாத் மாவட்டத்திற்கு உட்பட்ட தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மருத்துவமனையை பிரதமர் திறந்துவைத்தார்

குஜராத்தின் வல்சாத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மகளிர் உயர் சிறப்பு மையம் மற்றும் ஸ்ரீமத் ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

“புதிய மருத்துவமனை சுகாதார சேவைத் துறையில் அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வுக்கு வலுசேர்க்கும்”

“‘மகளிர் சக்தியை’ ‘தேசத்தின் சக்தியாக’ வெளிக்கொணர வேண்டியது நமது கடமை”

“மகளிர், பழங்குடியினர், நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் தான் நாட்டின் உணர்வை உயிரோட்டமாக வைத்துள்ளனர்”

Posted On: 04 AUG 2022 5:49PM by PIB Chennai

குஜராத்  மாநிலம் வல்சாத் மாவட்டத்திற்கு உட்பட்ட  தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மருத்துவமனை திட்டங்கள் மகளிர் மற்றும் சமுதாயத்தின் பிற தேவையுள்ள பிரிவினருக்கு பெரும் சேவை அளிப்பதாக அமையும் என்றார். ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் அமைதியான முறையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த மிஷனுடனான தமது நீண்டகால தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திர தின அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேவைப்படும் நேரத்தில் கடமையாற்றும் உணர்வும், இந்த அமைப்பின் நீண்டகால சேவையும் பாராட்டத்தக்கது என்றார்.  குஜராத்தின் சுகாதார சேவையில் பூஜ்ய குருதேவ் தலைமையில்  ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் ஆற்றி வரும்  பாராட்டுக்குரிய சேவைகள்  குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஏழைகளுக்கு சேவையாற்றும் இந்த மிஷனின் உறுதிப்பாடு மேலும் வலுவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த மருத்துவமனையும், ஆராய்ச்சி மையமும், அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும்.  “சுதந்திர தின ‘அமிர்த காலத்தில்’ ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இவை வலுசேர்க்கும்.  அத்துடன், சுகாதார சேவை துறையில் அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வுக்கு வலுசேர்க்கும்” என்றும் அவர் கூறினார்.

“சுதந்திர தின அமிர்தப் பெருவிழாக் காலத்தில் இந்தியாவை அடிமைத்தனத்திலிருந்து மீட்க பாடுபட்ட அனைத்துக் குழந்தைகளையும் நாடு நினைவு கூர்கிறது. ஸ்ரீமத் ராஜ்சந்திரா அது போன்ற ஒரு புனிதர் என்றும்  அவரது மகத்தான பங்களிப்பு நாட்டின் வரலாற்றில் ஒரு அங்கமாக இருக்கும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்ரீமத் ராஜ்சந்திரா மீதான  மகாத்மா காந்தியின் ஈர்ப்பையும் அவர் விவரித்தார்.   ஸ்ரீமத்தின் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வரும் திரு ராகேஷுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மகளிர், பழங்குடியினர், நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் தான் நாட்டின் உணர்வை உயிரோட்டமாக வைத்துள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார். மகளிருக்கான உயர் சிறப்பு மையத்தை ஏற்படுத்தியது போன்ற மாபெரும் நடவடிக்கை பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களுக்கு கல்வி மற்றும் திறன் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதை மிகத்தீவிரமாக வலியுறுத்தி வந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா என்றார். தமது இளமைப் பருவத்திலிருந்தே பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றி பேசிவந்தவர் ஸ்ரீமத். சுதந்திரதின அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், மகளிர் சக்தியை தேசத்தின் சக்தியாக வெளிக்கொணர வேண்டியது நம் அனைவரது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சகோதரிகள் மற்றும் புதல்விகளின் முன்னேற்றத்தை தடுக்கக் கூடிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தியா தற்போது பின்பற்றி வரும் சுகாதாரக் கொள்கை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களின் சுகாதாரம் மீது கவனம் செலுத்துவதாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

திட்டம் குறித்த விளக்கம்

வல்சாத் மாவட்டத்திற்குட்பட்ட தரம்பூரில் ரூ.200 கோடி செலவில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.  250 படுக்கை வசதிகள் கொண்ட இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், குஜராத்தின் தென்பகுதியில் உள்ள மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளிக்கும்.

ஸ்ரீமத் ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனை, 150 படுக்கை வசதியுடன் சுமார் ரூ.70 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில், தரம் மிகுந்த மருத்துவ வசதிகளுடன், பிரத்யேக கால்நடை மருத்துவர் குழுவும், துணைப் பணியாளர்களும் பணியாற்றுவார்கள். இந்த மருத்துவமனை, கால்நடைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான முழுமையான மருத்துவ சேவையுடன் வழக்கமான மருந்துகளையும் வழங்கும்.

ஸ்ரீமத் ராஜ்சந்திரா மகளிர் உயர் சிறப்பு மையம்  ரூ.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இங்கு பொழுதுபோக்கு வசதிகள், சுயமுன்னேற்றத்திற்கான வகுப்பறைகள் மற்றும் ஓய்வறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.  இங்கு  700க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பணியமர்த்தப்படுவதுடன் மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் அளிப்பதாகவும் அமையும்.

-----



(Release ID: 1848511) Visitor Counter : 142