பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ சுத்தூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 20 JUN 2022 8:49PM by PIB Chennai

மைசூரில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். மேதகு ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திரா மஹாஸ்வாமி, ஸ்ரீ சித்தேஸ்வரா சுவாமி, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்‌.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சாமுண்டீஸ்வரி அன்னையை வணங்கியதோடு, துறவிகளுடன் கலந்து கொள்வதற்கு தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். நாரத பக்தி சூத்திரம், சிவ சூத்திரம் மற்றும் பதஞ்சலி யோகா சூத்திரம் ஆகியவற்றிற்கு ஸ்ரீ சித்தேஸ்வரா சுவாமியின் உரைகளை பிரதமர் மக்களுக்கு அர்ப்பணித்தார். 

“காலமும், நேரமும் மாறியதால் இந்தியா ஏராளமான இன்னல்களை சந்தித்தது. ஆனால் இந்தியாவின் உணர்வு குறைந்தபோது, நாடு முழுவதும் உள்ள துறவிகளும் முனிவர்களும் நாட்டின் உணர்வை மீட்டெடுத்தனர்”, என்று பிரதமர் தெரிவித்தார். நூற்றாண்டுகளின் கடினமான காலகட்டத்தில், ஆலயங்களும், மடங்களும் கலாச்சாரத்தையும், அறிவையும் நிலைத்திருக்கச் செய்தன, என்றார் அவர்.

உண்மைத் தன்மையின் இருப்பு, வெறும் ஆராய்ச்சியின் அடிப்படையானதல்ல, மாறாக சேவை மற்றும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். சேவையையும் தியாகத்தையும், நம்பிக்கையைவிட மேலானதாகக் கொண்டுள்ள உணர்வுகளுக்கு ஸ்ரீ சுத்தூர் மடம் மற்றும் ஜே.எஸ்.எஸ். மகா வித்யாபீடம் ஆகியவை சிறந்த உதாரணங்கள்.

தெற்கு இந்தியாவின் சமத்துவம் மற்றும் ஆன்மீக  கலாச்சாரம் பற்றி பேசுகையில், “நம் சமூகத்திற்கு பகவான் பசவேஸ்வரா வழங்கியுள்ள ஆற்றல்,  ஜனநாயகத்தின் கோட்பாடுகள், கல்வி மற்றும் சமத்துவம் ஆகியவை இன்றும் இந்தியாவின் அடித்தளமாக விளங்குகின்றன”, என்று பிரதமர் கூறினார். துறவிகளின் போதனைகளுக்கு இணங்க, அனைவரின் முயற்சியுடன் செயல்பட  தற்போதைய ‘அமிர்த காலம்' ஓர் சிறந்த தருணம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக, தேசிய உறுதிப்பாடுகளுடன் நமது முயற்சிகளை இணைப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“கல்வித்துறையில், தேசிய கல்வி கொள்கை என்ற உதாரணம் இன்று நம் முன்னே உள்ளது. நாட்டின் இயற்கையின் ஒரு பகுதியாக, நமது புதிய தலைமுறையினர் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக உள்ளூர் மொழிகளில் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன”,  என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பாரம்பரியத்தை மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், இதுபோன்ற பிரச்சாரங்களிலும், பெண் கல்வி, சுற்றுச்சூழல், நீர் சேமிப்பு மற்றும் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களிலும் ஆன்மீக அமைப்புகளின் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

******



(Release ID: 1835779) Visitor Counter : 128