பிரதமர் அலுவலகம்

கட்ச்-ல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 08 MAR 2022 9:37PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெண் துறவிகள் ஏற்பாடு செய்துள்ள இந்த புதுமையான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன்.

தாய்மார்களே, சகோதரிகளே வணக்கம்!

கடுமையான இயற்கைச்  சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர். நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள். அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன.

பக்தி இயக்கத்திலிருந்து, ஞான தர்ஷன் வரை சமூகத்தில் சீர்திருத்தமும் மாற்றமும் ஏற்பட  வடக்கே  மீராய்பாய் முதல் தெற்கே சாந்த் அக்கா மகாதேவி போன்ற பெண் தெய்வங்கள்,  பெண்கள் குரல் கொடுத்தனர். அதேபோல், கட்ச் மற்றும் குஜராத்தும், சாதி தரோல், கங்கா சாதி, சாதி லோயன், ரம்பை மற்றும் லிர்பை போன்ற பெண் தெய்வங்களைக்  கண்டவை .  பெண்கள், சக்தியாகத்  திகழும் நாட்டின் எண்ணிலடங்கா  தெய்வங்கள், சுதந்திரப்  போராட்டச்  சுடரைத் தொடர்ந்து எரியச் செய்தன.

இந்தப்  பூமியைத்  தாயாகக்  கருதும் நாட்டில், பெண்களின் முன்னேற்றம் எப்போதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வலிமையை கொடுக்கிறது. பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைய, நாடு இன்று முக்கியத்துவம் அளிக்கிறது.  இந்தியாவின் வளர்ச்சிப்  பயணத்தில், பெண்களின் முழுப்  பங்களிப்புக்கு இன்று நாடு முக்கியத்துவம் அளிக்கிறது.  11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டது, 9 கோடி உஜ்வாலா கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டது, 23 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள்  பெண்களுக்கு கவுரவத்தை கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது.

பெண்களுக்கு அரசு நிதிஉதவி அளிக்கிறது, அப்போதுதான் அவர்கள் முன்னேறி, தங்கள் கனவுகளை நிறைவேற்றிச்  சொந்தமாக தொழில் தொடங்க முடியும். ‘ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன்கள் பெண்கள் பெயரில் உள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் 70 சதவீத கடன்கள் நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் கட்டிக்  கொடுக்கப்பட்ட 2 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் உள்ளன. இவையெல்லாம், நிதி சம்பந்தமாக முடிவு எடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன.

பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அரசு உயர்த்தியுள்ளது. பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.  பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் பிரிவும் உள்ளது.  ஆண்களும், பெண்களும் சமம் என்பதைக்  கருத்தில் கொண்டு, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முயற்சிக்கிறது. பாதுகாப்புப்  படைகளில்  பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சைனிக் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை தொடங்கியுள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான பிரசாரத்தக்கு மக்கள் உதவ வேண்டும். பெண் குழந்தைகளைப்  பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப்  படிக்க வைப்போம் திட்டத்தில் பெண்களின் பங்கு அவசியமாகும்.  பெண் குழந்தைகளைப்  பள்ளியில் சேர்க்கும் விழாவிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கு வேண்டும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, மிகப் பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் இது இன்னும் அதிகப்  பங்காற்ற வேண்டும்..  உள்ளூர் பொருட்களின் சக்தி பெண்களின் கையில்தான் உள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் சந்த் பாரம்பரியம் முக்கிய பங்காற்றியுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்தப் பாரம்பரியம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பங்காற்ற வேண்டும். உங்களிடம் இதுதான் எனது எதிர்பார்ப்பு. அனைவருக்கும் நன்றி!

*****



(Release ID: 1810159) Visitor Counter : 227