பிரதமர் அலுவலகம்

‘உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி’ என்பது குறித்த டிபிஐஐடி இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

“தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது”

“உறுதியுடன் இந்தியாவில் உற்பத்தி என்பதை நோக்கிய முன்னேற்றத்திற்கு இளைய மற்றும் திறன் வாய்ந்த மக்கள் தொகையின் பங்கு, ஜனநாயகக் கட்டமைப்பு இயற்கை வளங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான நிலைமைகள் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும்”

“தேசப் பாதுகாப்பு என்ற முப்பட்டகத்திலிருந்து நாம் பார்த்தால் தற்சார்பு இந்தியா என்பது அனைத்தையும்விட முக்கியமானது”

“பொருள் உற்பத்தித் துறையி்ல் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை உலகம் காண்கிறது”

“உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள்”

“உலகத்தரங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதோடு உலகளாவிய போட்டியையும் நீங்கள் சந்திக்க வேண்டும்”

Posted On: 03 MAR 2022 11:35AM by PIB Chennai

தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திரு மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால்  உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது.  இந்தக் கருத்தரங்கிற்கு  உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது.

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடு வெறும் சந்தை என்பதோடு முடிந்துவிடுவது ஏற்புடையது அல்ல என்று அவர் கூறினார். பெருந்தொற்றுக் காலத்தில் வழங்கல்  தொடரில் ஏற்பட்ட இடையூறுகளையும், நிச்சயமற்ற தன்மைகளையும், சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் உற்பத்தி என்பதன் செயல்பாட்டு முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டினார். மறுபக்கம் உறுதியுடன் இந்தியாவில் உற்பத்தி என்பதை நோக்கிய முன்னேற்றத்திற்கு இளைய மற்றும் திறன் வாய்ந்த மக்கள் தொகையின் பங்கு, ஜனநாயகக் கட்டமைப்பு இயற்கை வளங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான நிலைமைகள் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறி உரையைத் தொடர்ந்தார். செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து குறைபாடு இல்லாத, தலையீடில்லாத  பொருள் உற்பத்திக்குத் தாம் அழைப்பு விடுத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். தேசப் பாதுகாப்பு என்ற முப்பட்டகத்திலிருந்து  நாம் பார்த்தால் தற்சார்பு இந்தியா என்பது அனைத்தையும்விட  முக்கியமானது என்று அவர் கூறினார்.

பொருள் உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை உலகம் காண்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின்  ஜிடிபி-யில் பொருள் உற்பத்தி 15 சதவீதமாக உள்ளது என்று  கூறிய அவர், ஆனால் இந்தியாவில் உற்பத்தியில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவில் மிக அதிகமான பொருள் உற்பத்தியை  உருவாக்க முழு பலத்துடன்  நாம் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதியாதாரங்களை சார்ந்திருக்கும் நிலையை அகற்றி செமி கடத்திகள், மின்சார வாகனங்கள் போன்றவற்றின் தயாரிப்பில் புதிய தேவை மற்றும் வாய்ப்புகளைப் பிரதமர் உதாரணமாகக் குறிப்பிட்டார். அதே போல் உள்நாட்டு உற்பத்திக்கு எஃகு மருத்துவச் சாதனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். 

இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்கள் கிடைப்பதற்கும், இதற்கு மாறாக மற்ற பொருட்கள் கிடைப்பதற்கும் இடையேயான வேறுபாட்டை சந்தையில் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் பல்வேறு விழாக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் வெளிநாட்டு பொருட்களை அதிகம் காண்பது நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது என்றும் இவற்றை உள்ளூர் தயாரிப்புகள் மூலம் எளிதாக கிடைக்கச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.  தீபாவளியின் போது அகல் விளக்குகள் வாங்குவது ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ என்ற எல்லையைத் தாண்டி சென்றுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.  தங்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் குறியீடு செய்தல் முயற்சிகளில் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் தற்சார்புக்கு ஊக்கமளிக்குமாறு தனியார் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார். “உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் பொருட்களுக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவை அதிகப்படுத்துமாறும், தங்களின் உற்பத்திப் பொருட்களில் பன்முகத்தன்மையை உருவாக்கி மேம்படுத்துமாறும் தனியார் துறையினரை அவர் வலியுறுத்தினார். 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், “சிறு தானியங்களுக்கான தேவை உலகில் அதிகரித்துள்ளது, உலக சந்தைகளை ஆய்வு செய்வதன் மூலம், அதிகபட்ச உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் செய்வதற்கு நமது ஆலைகளை நவீனமாக்க நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

சுரங்கப் பணிகள், நிலக்கரி, பாதுகாப்பு போன்ற துறைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக  புதிய வாய்ப்புகள் இருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புதிய உத்திகளுக்கான தயாரிப்பில்  பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். “உலகத்தரங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதோடு உலகளாவிய  போட்டியையும் நீங்கள் சந்திக்க வேண்டும்” என்று அவர்  கூறினார்.

கடன் வசதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசும், இந்தத் துறைக்கான  ரூ.6,000 கோடி ராம்ப்  (திட்டங்களுக்கான இடர் பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை) திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகள், பெருந்தொழில்கள், எம்எஸ்எம்இ-க்களின் உற்பத்திப் பொருட்களுக்கு  புதிய ரயில்வே போக்குவரத்தை உருவாக்குவதிலும், பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. சிறிய நிறுவனங்கள் மற்றும்  தொலைதூர பகுதிகளுக்கான போக்குவரத்து தொடர்பு பிரச்சனைக்கு  அஞ்சல் மற்றும் ரயில்வே ஒருங்கிணைப்பு  தீர்வு காணும். வடகிழக்கு மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பிரதமரின் டிவைன் மாதிரியை பயன்படுத்தி பிராந்திய அளவிலான பொருள் உற்பத்தி சூழ்நிலையை வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.    அதே போல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சட்டத்திருத்தங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து திரு மோடி விவரித்தார்.   பெருமளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான பிஎல்ஐ திட்டம், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உற்பத்தி என்ற இலக்கை 2021 டிசம்பரில் எட்டியது. மற்ற பிஎல்ஐ திட்டங்கள் அமலாக்கத்தின் முக்கியமான கட்டங்களில்  உள்ளன.

25,000 புகார்கள் சரி செய்யப்பட்டிருப்பதும், உரிமங்கள் தாமாகவே புதுப்பிக்கப்படுவதும், புகார்களின் சுமையைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழி செய்துள்ளது என்று  பிரதமர் குறிப்பிட்டார். அதே போல், டிஜிட்டல்மயம், ஒழுங்குப்படுத்தும் கட்டமைப்பில் வேகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவந்துள்ளன”  என்று அவர் மேலும் கூறினார்.

பொருள் உற்பத்திக்கான தொழில்துறை தலைவர்கள் சில துறைகளைத் தெரிவு செய்து அவை வெளிநாடுகளை சார்ந்திருப்பதை நீக்குவதற்கு பணியாற்றுமாறு பிரதமர்  வேண்டுகோள் விடுத்தார். கொள்கை அமலாக்கத்தில் சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை சேர்ப்பதற்கு பட்ஜெட் அம்சங்களை முறையாக, உரிய நேரத்தில், தடையின்றி, அமலாக்கி சிறந்த பயன்களை ஏற்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறையை  உருவாக்கவும் இத்தகைய இணையவழிக் கருத்தரங்குகள் முன் எப்போதும் காணப்படாத நிர்வாக நடைமுறைகள்  என்றும்  அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

*************** 



(Release ID: 1802633) Visitor Counter : 258