நிதி அமைச்சகம்

கட்டமைப்பு மற்றும் நடைமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தற்சார்பு இந்தியா முன்முயற்சிகள் தொழில்துறை செயல்பாட்டை வலுப்படுத்தி, இந்த நிதியாண்டில் 11.8 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 31 JAN 2022 2:51PM by PIB Chennai

2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளால் உலகளாவிய தொழில் துறை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.  இந்திய தொழில்துறையும் இந்த இடையூறுகளுக்கு விதிவிலக்கு ஆகாவிட்டாலும், 2021-22-ல் அதன் செயல்திறன் மேம்பட்டுள்ளது.  பொருளாதார நடவடிக்கைகள் மேம்பாடு, வரலாற்று அளவாக தடுப்பூசி செலுத்தப்பட்டது, நுகர்வோர் தேவை அதிகரிப்பு, தற்சார்பு இந்தியா வடிவில் தொழில் துறைக்கான அரசின் கொள்கை ரீதியான ஆதரவு போன்றவை, 2021-22-ல் தொழில்துறை செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு உகந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, அந்நிய நேரடி முதலீட்டு வரவில் புதிய சாதனை படைத்து, இதுவரை இல்லாதவாறு 2020-21-ல் வருடாந்திர அந்நிய நேரடி முதலீடு 81.97 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

தொழில்துறைக்கு வங்கிகள் வழங்கிய மொத்தக்கடன் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், பரிமாற்றச் செலவுகளை குறைத்திருப்பதுடன், தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது.

தேசிய கட்டமைப்புக் குழாய் திட்டம், தேசிய பணமாக்கல் திட்டம் போன்றவை கட்டமைப்பு முதலீட்டை ஊக்குவித்துள்ளன. 

உதயம் பதிவு இணைய தளம் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விளக்கம் மாற்றியமைக்கப்பட்டது போன்றவை, உற்பத்தியை அதிகரித்து, விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.  பிரதமரின் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டெக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்திச் சூழலை மேம்படுத்துவதற்கான ரூ.76,000 கோடி திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தேசிய நெடுஞ்சாலைகள் / சாலைகள் கட்டுமானப் பணி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

புதிய ரயில்பாதைகள் மற்றும் பல்வழித் தட திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வே ஆண்டுக்கு 1,835 வழித்தட கிலோமீட்டர் அளவுக்கு புதிய பாதைகளை அமைத்துள்ளது.  எண்ணெய் மற்றும் எரிவாயு அமைப்புகளின் தேவையை தெளிவாக வெளிப்படுத்தும் விதமாக லக்ஷயா பாரத் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா 2.0 திட்டத்தின்மூலம் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.  ட்ரோன் விதிமுறைகளை அரசு தளர்த்தியிருப்பதுடன், வானூர்தி துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030, இந்திய கடல்சார் துறையின் ஒருங்கிணைந்த மற்றும் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்திருப்பதுடன், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த  உள்நாட்டு நீர்வழிக் கலன் சட்டம் 1917 மாற்றியமைக்கப்பட்டு, உள்நாட்டு நீர்வழிக் கலன் சட்டம் 2021, புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

4ஜி சேவை அதிகரிப்பதை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட தொலைத்தொடர்பு சீர்திருத்தங்கள், 5ஜி கட்டமைப்பு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா விரைவான வளர்ச்சி வீதத்தை அடைந்து 2.9 மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதுடன், சூரிய சக்தி திட்டங்கள் 18 மடங்கு விரிவடைந்து இருப்பதோடு, பசுமை எரிசக்தி பெருந்தட திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************



(Release ID: 1793895) Visitor Counter : 401