பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
‘பெண் குழந்தை பாதுகாப்பு’ குறித்த இணையவழி கருத்தரங்கு – மகளிருக்கான தேசிய ஆணையம் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
24 JAN 2022 5:15PM by PIB Chennai
பெண் குழந்தைகளின் உரிமைகளை பிரபலப்படுத்தவும் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று ‘பெண் குழந்தை பாதுகாப்பு’ குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆணையத்தின் தலைவர் திருமதி. ரேகா சர்மா, ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் திரு.ஓ.பி.தங்க்கர், குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் பிரக்யா வாட்ஸ் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.
“ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களின் திறமைகளை நிரூபித்துள்ளனர். மகளிருக்கான தேசிய ஆணையம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், அதிகாரமளித்தலும் உறுதி செய்யப்படுகிறது. தரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த இளம்பெண்களுக்கு நமது அரசு வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இளம்பெண்கள் முன்வந்து மாற்றத்தின் முகவர்களாகத் திகழ வேண்டும்” என்று திருமதி. ரேகா சர்மா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் திரு.தங்க்கர், “சமூகத்தில் மாற்றங்கள் இப்போது வெளிப்படையாக தெரிகின்றன. இருப்பினும் இன்னும் மாபெரும் மாற்றம் தேவைப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு நமது பிரதமர் மற்றும் அரசின் அர்ப்பணிப்பு சமூகத்தில் பிரதிபலிக்கிறது” என்றார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் மகளிருக்கான தேசிய ஆணையம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறது. இந்த அமைச்சகத்தின் மூலம் 2008-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1792216)
வருகையாளர் எண்ணிக்கை : 191