பிரதமர் அலுவலகம்

பிரதமர் கதிசக்தி செயல் திட்டத்தை அக்டோபர் 13-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்


துறைகள் தனித்தனியாக இயங்குவதை தடுத்து பெரிய கட்டமைப்புத் திட்டங்களில் பங்குதாரர்களுக்கான முழுமையான திட்டமிடலை பிரதமர் கதிசக்தி அமைப்பு ரீதியானதாக்கும்

மையப்படுத்தப்பட்ட தளத்தின் மூலம் அனைத்து துறைகளும் ஒருவருக்கொருவரின் திட்டங்களை காண முடியும்

மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கான ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற இணைப்பை வழங்க பல்முனை இணைப்பு

பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சரக்கு போக்குவரத்து செலவைக் குறைக்கவும், விநியோக சங்கிலிகளை மேம்படுத்தவும் மற்றும் உள்ளூர் பொருட்களை உலகளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றவும் பிரதமர் கதிசக்தி உதவும்

பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்

Posted On: 12 OCT 2021 6:28PM by PIB Chennai

நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில், பிரதமர் கதிசக்தி எனும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டத்தை, 13 அக்டோபர், 2021 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு உருவாக்கம் பல சிக்கல்களால் தசாப்தங்களாக பாதிக்கப்பட்டது. உதாரணமாக, பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலை அமைக்கப்பட்டவுடன், மற்ற ஏஜென்சிகள் நிலத்தடி கேபிள்கள், எரிவாயு குழாய் பதித்தல் போன்ற செயல்பாடுகளுக்காக மீண்டும் சாலையை தோண்டினர். இதை சமாளிக்க, அனைத்து கேபிள்கள், குழாய்கள் போன்றவற்றை ஒரே சமயத்தில் அமைக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேரம் எடுக்கும் ஒப்புதல் செயல்முறை, ஒழுங்குமுறை அனுமதிகளின் பெருக்கம் போன்ற பிற சிக்கல்களையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில், முழுமையான பார்வையுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படுவதை அரசு உறுதி செய்தது.

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பங்குதாரர்களுக்கான முழுமையான திட்டமிடலை அமைப்புரீதியானதாக ஆக்குவதன் மூலம் கடந்த கால பிரச்சினைகளை பிரதமர் கதிசக்தி தீர்க்கும். தனித்தனியாக திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலுக்கு பதிலாக, பொதுவான பார்வையுடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிகள், உலர்/நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை இது உள்ளடக்கும். இணைப்புகளை மேம்படுத்தவும், இந்திய வணிகங்களை அதிக போட்டித்தன்மையுடையதாக மாற்றவும் ஜவுளி மண்டலங்கள், மருந்து மண்டலங்கள், ராணுவ வழித்தடங்கள், மின்னணு பூங்காக்கள், தொழில் வழித்தடங்கள், மீன்வள மண்டலங்கள், வேளாண் மண்டலங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கப்படும். பிசாக்-என் (பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனம்) உருவாக்கிய இஸ்ரோ படங்களுடன் கூடிய இடஞ்சார்ந்த திட்டமிடல் கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இது விரிவாகப் பயன்படுத்தும்.

பிரதமர் கதிசக்தி ஆறு தூண்களை அடிப்படையாகக் கொண்டது:

1. விரிவான தன்மை: பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தற்போதைய மற்றும் ஏற்கனவே திட்டமிட்ட அனைத்து முன்முயற்சிகளையும் மையப்படுத்தப்பட்ட போர்ட்டலுடன் இது இணைக்கும். ஒவ்வொரு துறையும் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும்போது அடுத்தவர்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான தெரிவுநிலையைக் கொண்டிருக்கும்.

2. முன்னுரிமை: இதன் மூலம், துறைகளுக்கிடையேயான தொடர்புகள் மூலம் பல்வேறு துறைகள் தங்கள் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும்.

3. சிறந்த பயன்பாடு: முக்கிய இடைவெளிகளைக் கண்டறிந்த பிறகு பல்வேறு திட்டங்களுக்கு திட்டமிட தேசிய செயல்திட்டம் உதவும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல, நேரம் மற்றும் செலவின் அடிப்படையில் மிகவும் உகந்த வழியைத் தேர்வு செய்ய இது உதவும்.

4. ஒத்திசைவு: தனிப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பெரும்பாலும் தனித்தனியாக வேலை செய்கின்றன. திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்படுகிறது. பிஎம் கதிசக்தி ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும், பல்வேறு அடுக்கு நிர்வாகங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இடையே உள்ள வேலைகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.

5. பகுப்பாய்வு தன்மை: ஜிஐஎஸ் சார்ந்த திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு உபகரணங்களின் வாயிலாக 200-க்கும் மேற்பட்ட அடுக்குகளில் ஒட்டுமொத்த தரவுகளையும் ஒரே இடத்தில் இது வழங்கும். இதன் மூலம், செயல்படுத்தும் முகமைக்கு நல்ல தெளிவு கிடைக்கும்.

6. மாற்றியமைக்க கூடியது: செயற்கைக்கோள் படமுறையின் மூலம் கள முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை ஜிஐஎஸ் தளம் மூலம் தொடர்ந்து இது வழங்குவதால், பல்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் தெரிந்துக் கொண்டு, ஆய்வு செய்து கண்காணிக்க முடியும்.

முக்கிய தலையீடுகளை அடையாளம் காணவும் முதன்மைத் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.

அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக பிரதமர் கதிசக்தி உருவாகியுள்ளது. இது வாழ்க்கையை எளிதாக்குவதோடு வணிகத்தையும் எளிதாக்குகிறது. பல்முனை இணைப்பு என்பது மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரு போக்குவரத்து முறையில் இருந்து மற்றொரு முறைக்கு செல்ல ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற இணைப்பை வழங்கும். உள்கட்டமைப்பின் கடைசி மைல் இணைப்பை இது எளிதாக்கும் மற்றும் மக்களுக்கான பயண நேரத்தையும் குறைக்கும். 

வரவிருக்கும் இணைப்புத் திட்டங்கள், பிற வணிக மையங்கள், தொழில்துறை பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பொது மற்றும் வணிக சமூகத் தகவல்களை பிரதமர் கதிசக்தி வழங்கும். முதலீட்டாளர்கள் தங்கள் வணிகங்களை பொருத்தமான இடங்களில் திட்டமிடுவதற்கான மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்புக்கு இது வழிவகுக்கும். பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்திற்கு இது ஊக்கத்தை அளிக்கும். தளவாட செலவுகளைக் குறைப்பதன் மூலமும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதன் மூலமும் உள்ளூர் பொருட்களின் உலகளாவிய போட்டித்தன்மையை இது மேம்படுத்தும். மேலும், உள்ளூர் தொழில்கள் மற்றும் நுகர்வோருக்கு சரியான இணைப்புகளை உறுதி செய்யும்.

நிகழ்ச்சியின் போது பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தை (கண்காட்சி அரங்குகள் 2 முதல் 5 வரை) பிரதமர் திறந்து வைப்பார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் முதன்மை நிகழ்வான இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐஐடிஎஃப்) 2021 நவம்பர் 14-27 வரை இந்த புதிய கண்காட்சி அரங்குகளில் நடைபெறும்.

மத்திய வர்த்தகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

*********



(Release ID: 1763391) Visitor Counter : 967