பிரதமர் அலுவலகம்
‘குளோபல் சிட்டிசன் லைவ்‘ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி-யின் காணொலி உரை
Posted On:
25 SEP 2021 10:50PM by PIB Chennai
நமஸ்தே!
இங்கு குழுமியுள்ள இளைஞர்கள் மற்றும் துடிப்புமிக்கவர்களிடம் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நமது கிரகத்தின் அழகான பன்முகத்தன்மையுடன் கூடிய, உலகளாவிய குடும்பத்தினர் என் முன்பாக உள்ளனர்.
உலக குடிமக்கள் இயக்கம், இசை மற்றும் படைப்பாற்றல் திறனைப் பயன்படுத்தி, உலகை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விளையாட்டைப் போன்றே, இசைக்கும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் வல்லமை உள்ளது. சிறந்த அறிஞரான ஹென்றி டேவிட் தோரே ஒருமுறை கூறியதை, நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; “நான் இசையைக் கேட்கும்போது, நான் எவ்வித ஆபத்தையும் உணர்ந்ததில்லை. நான் பலவீனமானவன். எதிரிகள் யாரையும் நான் கண்டதில்லை. நான் ஆரம்ப காலத்துடனும், தற்காலத்துடனும் தொடர்புடையவன். “
இசை நமது வாழ்க்கையில் அமைதியை உண்டாக்கக் கூடியது. அது, மனதையும், ஒட்டுமொத்த உடலையும் அமைதிப்படுத்தும். இந்தியா, பல்வேறு இசைப் பாரம்பரியத்தின் தாய் வீடாகும். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், பல்வேறு வடிவிலான இசை காணப்படுகிறது. எங்களது வலிமையானஇசை மற்றும் பன்முகத்தன்மையை கண்டறிய இந்தியாவிற்கு வருமாறு, உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.
நண்பர்களே,
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக, வாழ்நாளில் எப்போதாவது ஏற்படக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றை எதிர்த்து மனிதகுலம் போராடி வருகிறது. பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நமது பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், நாம் வலிமையாகவும் மேம்பட்டவர்களாகவும் இருப்போம் என்ற பாடத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. கோவிட்-19க்கு எதிரான போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றும்போது, இந்த ஒற்றுமை உணர்வின் உச்சத்தை நாம் பார்த்தோம். குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடமும், நாம் இந்த உணர்வைக் காண முடிந்தது. ஒவ்வொரு பிரச்சினையிலும், மனிதகுலம் புத்தெழுச்சி பெறும் முறை, தலைமுறைகளுக்கும் நினைவில் இருக்கும்.
நண்பர்களே,
கோவிட் தவிர, வேறு பல சவால்களும் இருந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நீண்ட காலமாக நீடிப்பது வறுமை. ஏழை மக்கள் அரசாங்கத்தை சார்ந்தவர்களாக மாற்றுவதன் மூலம் மட்டுமே, வறுமையை ஒழித்துவிட முடியாது. ஏழை மக்கள், அரசை நம்பிக்கைக்குரிய பங்குதாரர்களாக காணும்போது தான் வறுமையை எதிர்த்துப் போரிட முடியும். பங்குதாரர்கள், உரிய கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம், வறுமையின் பிடியிலிருந்து அவர்களை மீட்கலாம்.
நண்பர்களே,
பருவநிலை மாற்ற அச்சுறுத்தலும், நம்முன் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இயற்கைக்கு உகந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் தான், பருவநிலை மாற்றத்தை வெற்றிகொள்ள முடியும்.
மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அஹிம்சை சிந்தனைகள், அனைவரும் அறிந்ததே. எனினும், அவர் உலகின் தலைசிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர், கார்பன் வெளியேற்றம் இல்லாத வாழ்க்கைமுறையைப் பின்பற்றியவர் ஆவார். நமது கிரகத்தின் (பூமியின்) நலனைத்தான், அனைத்திற்கும் மேலாக அவர் கருதினார். நாம் அனைவரும் இந்த கிரகத்தைப் பாதுகாக்கும் கடமை உடைய அறங்காவலர்கள் என்ற உயரிய தத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஜி-20 நாடுகளில், பாரீஸ் உடன்படிக்கைக்கு ஏற்ப செயல்படும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு மற்றும் பேரழிவுகளிலிருந்து மீளக்கூடிய உட்கட்டமைப்பு வசதிக்கான கூட்டமைப்புகளின்கீழ் உலகநாடுகளை ஒருங்கிணைத்த நாடு என்ற பெருமிதத்தை இந்தியா பெற்றுள்ளது.
நண்பர்களே,
மனிதகுலத்தின் மேன்மைக்கு(வளர்ச்சிக்கு) இந்தியா வளர்ச்சியடைய வேண்டியது என்று நாம் நம்புகிறோம். உலகின் மிகப் பழமையான வேதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரிக் வேதத்தை சுட்டிக்காட்டி, எனது உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். உலக மக்களை வளர்த்தெடுப்பதற்கான பொன்னெழுத்துக்களைக் கொண்டதாக அது திகழ்கிறது.
ரிக் வேதம் கூறுவது என்னவென்றால் :
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னேறுவோம், ஒத்த குரலில் பேசுவோம்;
நமது மனது உடன்படச் செய்வதோடு, கடவுளர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைப் போன்று, நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வோம்.
பகிர்ந்துகொள்ளக்கூடிய நோக்கம் மற்றும் பகிர்ந்துகொள்ளும் மனதைப் பெறுவோம். அதுபோன்ற ஒற்றுமைக்காக நாம் பிரார்த்திப்போம்.
நம் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய நோக்கம், விருப்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்.
நண்பர்களே,
உலக மக்களுக்கு இதைவிட வேறு சிறந்த சாசனம் எது இருக்க முடியும்? கருணை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கிரகத்தைப் படைக்க நாம் அனைவரும் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.
நன்றி,
மிக்க நன்றி,
நமஸ்தே.
*******
(Release ID: 1758583)
Visitor Counter : 268
Read this release in:
Punjabi
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
English
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Malayalam