ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம் குறித்த வடகிழக்கு மாநிலங்களின் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சர்களின் மாநாடு: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2021 1:50PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் குறித்த வடகிழக்கு மாநிலங்களின் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சர்களின் மாநாடு, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறும். குவஹாத்தியில் உள்ள அசாம் நிர்வாகக் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் வடகிழக்கு பகுதிகளில் உள்ள 8 மாநிலங்களைச் சேர்ந்த பொது சுகாதார பொறியியல் துறைக்கான அமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும், ஒவ்வொரு மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் மீதம் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகளை விரைவில் வழங்குவது தொடர்பாகவும், இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
வடகிழக்கு பகுதிகளின் மேம்பாடு மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் பங்காக 2021-22 இல் ரூ. 9,262 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதுபோன்ற சவாலான தருணங்களில் வடகிழக்கு மாநிலங்களின் ஊரக வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி, அந்த மாநிலங்களின் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், எளிதான வாழ்விற்கு வழிவகை செய்யவும் கடந்த 2019-ஆம் ஆண்டு தமது சுதந்திர தின உரையின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஜல் ஜீவன் இயக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755018
*****
(Release ID: 1755018)
(வெளியீட்டு அடையாள எண்: 1755052)
வருகையாளர் எண்ணிக்கை : 254