பிரதமர் அலுவலகம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா சாஹித் பிரதமரை சந்தித்தார்

Posted On: 23 JUL 2021 6:47PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் மேன்மைமிகு அப்துல்லா சாஹித் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

2021 ஜூலை 7 அன்று நியூயார்க்கில் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அடுத்த தலைவர் என்ற முறையில் மேன்மைமிகு அப்துல்லா சாஹித் இந்தியா வந்துள்ளார்.

மேன்மைமிகு அப்துல்லா சாஹித்தின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், உலக அரங்கில் வளர்ந்துவரும் மாலத்தீவின் மதிப்பை இது பிரதிபலிப்பதாக கூறினார்.

நம்பிக்கை மிகுந்த தலைமைத்துவம் என்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் புதிய தலைவரின் லட்சியத்தை பாராட்டிய பிரதமர், அவரது தலைமைக்கு தனது முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை இந்தியா அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

ஐக்கிய நாடுகளின் உறுப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்முனை அமைப்புகளை சீர்திருத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய பிரதமர், உலகின் தற்போதைய உண்மை நிலவரங்களையும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மை யானவர்களின் எண்ணங்களையும் அவை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினார்.

சமீப வருடங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்திய-மாலத்தீவு இருதரப்பு உறவு குறித்து பிரதமரும் மேன்மைமிகு அப்துல்லா சாஹித்தும் விவாதித்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தடைகளுக்கு இடையிலும் இருதரப்பு திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையிலும் சாகர் லட்சியத்திலும் முக்கிய தூணாக இடம்பெற்றிருக்கும் மாலத்தீவுகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

 

-----



(Release ID: 1738310) Visitor Counter : 208