பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டம்: சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன் சார்ந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 JUN 2021 4:20PM by PIB Chennai

சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செயல்பாட்டு செயல் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக  தனியார் மின் விநியோக நிறுவனங்களைத் தவிர இதர  நிறுவனங்கள்/ எரிசக்தி துறைகளின் மின் விநியோக கட்டமைப்பை  வலுப்படுத்த, நிபந்தனையுடன் கூடிய  நிதியுதவியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மேம்பாடுகளுடன் தொடர்புடைய ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு கட்டமைப்பின் அடிப்படையில், மதிப்பீடு செய்யப்பட்ட மின் விநியோக நிறுவனங்கள் அடிப்படை குறைந்தபட்ச இலக்குகளை அடைவதன் அடிப்படையிலும், தகுதி பெறுவதற்கு முந்தைய அம்சங்களைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையிலும் இந்த உதவி அமைந்திருக்கும்.

ஒட்டுமொத்த அணுகுமுறையாக இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்தின் செயல் திட்டங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

மத்திய அரசின் ஒட்டுமொத்த நிதிநிலை ஆதரவான ரூ. 97,631 கோடியுடன் ரூ. 3,03,758 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம்-2015 உடன், அனுமதி அளிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்  ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டு திட்டம், தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி திட்டம் முதலியவை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்‌. அவற்றின் ஒட்டுமொத்த நிதிநிலை ஆதரவு (சுமார் ரூ. 17,000 கோடி), புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் துறை திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டின் ஒருபகுதியாக 2022 மார்ச் 31 வரை தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் அமலில் இருக்கும். இந்தத் திட்டங்களின் கீழ் உள்ள நிதி, ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம், தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி திட்டம் ஆகியவற்றிற்கு 2023 மார்ச் 31 வரை பயன்படுத்தப்படும்.

2025-26-ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆர்இசி மற்றும் பிஃஎப்சி ஆகியவை இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முதன்மை முகமைகளாக நியமிக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

1.       2024-25ஆம் ஆண்டுக்குள் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 12-15 சதவீதமாகக் குறைப்பது.

2.       சராசரி விநியோக கட்டணம்- சராசரி வருவாய் இடையேயான இடைவெளியை 2024- 25-ஆம் ஆண்டுக்குள் பூஜ்யமாகக் குறைப்பது.

3.       நவீன மின் விநியோக நிறுவனங்களுக்கான செயல்திறனை மேம்படுத்துதல்.

4.       நிலையான  நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறன் வாய்ந்த மின் விநியோகத் திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட தரத்தில், நம்பகத்தன்மையான, எளிதில் அணுகுவதற்கு ஏதுவான மின்சாரத்தை விநியோகிப்பது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731473

*****************



(Release ID: 1731594) Visitor Counter : 456