பாதுகாப்பு அமைச்சகம்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணி: கொச்சியில் ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted On: 25 JUN 2021 2:17PM by PIB Chennai

கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும், முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.

அவருடன்  கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், கடற்படை தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா ஆகியோர் உடன் சென்றனர். கப்பல் கட்டப்படும் இடத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அப்போது, இந்த கப்பலை கடலில் இறக்கும் நிகழ்ச்சி கடந்தாண்டு நவம்பரில் வெற்றிகரமாக நடைப்பெற்றதாக திரு ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

கப்பலில் நேவிகேஷன், தகவல் தொடர்பு உள்பட இதர கருவிகளை பொருத்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திரு ராஜ்நாத் சிங்கிடம் விளக்கப்பட்டது. இந்த கப்பலை முதல் முறையாக கடலில் செலுத்தும் பரிசோதனைகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்என்ற பெயரில் கடற்படையில் 2022ம் ஆண்டு மத்தியில் சேர்க்கப்படும். இந்த கப்பல் கடற்படைக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும். இந்த கப்பலில் மிக்-29 கே ரக போர் விமானங்கள், காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள், விரைவில் சேர்க்கப்படவுள்ள எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்கள், உள்நாட்டு இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை செயல்படுத்தப்படும்.

நீண்ட தூரத்துக்கு வான் பாதுகாப்பு, தாக்குதல் மற்றும் தடுப்பு நடவடிக்கை, நீர் மூழ்கி கப்பல்களை அழிப்பதுமுன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது என பல வகை போர் முறைகளுக்கு இந்த கப்பல் பயன்படும் என்பதால், இது ஈடு இணையற்ற ராணுவ சாதனமாக இருக்கும். 

கடற்படையில் மேற்கொள்ளப்படும் பல வித புத்தாக்கம், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

அதன்பின் பேட்டியளித்த திரு ராஜ்நாத் சிங் கூறியதாவது:

இந்த கப்பலில் 75 சதவீத பொருட்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானவை.  உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான ராணுவ கொள்முதல் கவுன்சிலின் திட்டங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்திய கடற்படையின் பணி பாராட்டத்தக்கது. டவ்தே  மற்றும் யாஸ் புயல்களின் போது கடற்படை மேற்கொண்ட தேடுல் மற்றும் மீட்பு பணிகளும் பாராட்டத்தக்கவை.

இவ்வாறு திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

****************



(Release ID: 1730312) Visitor Counter : 277