பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய மாணவர் படை தலைமை இயக்குனரகத்தின் கைபேசி பயிற்சி செயலி 2.0-ஐ பாதுகாப்பு செயலாளர் தொடங்கி வைத்தார்

Posted On: 28 MAY 2021 2:44PM by PIB Chennai

தேசிய மாணவர் படை தலைமை இயக்குனரகத்தின் கைபேசி பயிற்சி செயலி 2.0-2021 மே 28 அன்று பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின்  போது நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையினருக்கு இணையவழியில் பயிற்சி அளிப்பதற்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கும். தேசிய மாணவர் படை தொடர்பான அடிப்படை தகவல்கள் மற்றும் ஒட்டுமொத்த பயிற்சி திட்டம் ஆகியவற்றை ஒரே தளத்தில் இது கொண்டிருக்கும். இதன் மூலம் தேசிய மாணவர் படையினர் பயிற்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை  செயலாளர், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இணைய வழியின் மூலம் பயிற்சி அளிப்பதற்காக தேசிய மாணவர் படையை  பாராட்டினார். நேரடி பயிற்சிக்கு கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து டிஜிட்டல் முறையில் பயிற்சி பெறுவதற்கு தேசிய மாணவர் படையினருக்கு இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் பயிற்சியில் பங்கேற்று, சான்றிதழ் தேர்வுகளில் கலந்துகொண்டு கல்வி ஆண்டு வீணாவதை

தேசிய மாணவர் படையினர் தடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கொவிட்-19 காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று கூறிய டாக்டர் அஜய் குமார்,

இது தேசிய மாணவர் படையினருக்கு புதிய வாழ்க்கை முறையாகவும், பயிற்சி முறையாகவும் அமைந்திருப்பதாக தெரிவித்தார். தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்த பாதுகாப்பு படையினர் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

வரவேற்புரை ஆற்றிய தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் எய்ச், கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து டிஜிட்டல் முறையின் மூலமாக தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கான தேவை உணரப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த செயலியின் முதல் பதிப்பை 2020 ஆகஸ்ட் 27 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தியதை அவர் குறிப்பிட்டார்.

செயலி குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பெறப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்களின் அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணொளி மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

*****************



(Release ID: 1722503) Visitor Counter : 236