உள்துறை அமைச்சகம்

அமைச்சரவை செயலாளர் தலைமையில் டவ்-தே புயல் குறித்த தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் : கொவிட் மையங்கள் தடைகள் இன்றி செயல்பட ஏற்பாடு

Posted On: 16 MAY 2021 2:36PM by PIB Chennai

அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ளதை முன்னிட்டு, தேசிய நெருக்கடி மேலாண்மை கூட்டத்துக்கு அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார்.  குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், லட்சத்தீவு, தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  நிர்வாகிகளின் ஆலோசகர்கள், பல அமைச்சகங்களின் செயலாளர்களுடன் இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைப்பெற்றது.

மத்திய மற்றும் மாநில அரசு குழுவினரின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்த திரு ராஜீவ் கவுபா, புயலால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களை அப்புறப்படுத்த  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு, உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியறுத்தினார். மின்சாரம், தொலை தொடர்பு, மற்றும் இதர முக்கிய சேவைகளை மீண்டும் வழங்குவதற்கான தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்  கூறினார்.

புயலால் மருத்துவமனைகள், கொவிட் சிகிச்சை மையங்களின் செயல்பாட்டில் தடைகள் ஏற்படுவதை தவிர்க்கவும், அவற்றுக்கு ஆக்ஸிஜன்களின் விநியோகத்தை சீராக பராமரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மையங்கள் தடைகள் இன்றி செயல்படவும், அவற்றுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படி சம்மபந்தப்பட்ட மத்திய குழுவினருக்கு அமைச்சரவை செயலாளர் உத்தரவிட்டார்.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள, தேசிய நெருக்கடி மேலாண்மை குழு செய்துள்ள தயார்நிலை ஏற்பாடுகளை மாநில செயலாளர்கள் பாராட்டினர். போதிய அளவு உணவு தானியங்கள், குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மின்சாரம், தொலை தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகளை பாராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 79 குழுக்கள் உள்ளதாகவும், கூடுதலாக 22 குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தரைப்படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புபடைகளின் மீட்பு குழுக்கள் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719063

*****************



(Release ID: 1719150) Visitor Counter : 191