சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது தொடக்கம்

Posted On: 01 APR 2021 11:31AM by PIB Chennai

45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது, இன்று முதல்  தொடங்கியது.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில், கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொவிட் பாதிப்பு 39,544ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.

மொத்த கொவிட் பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கியது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக்  கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 - எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708870

******

(Release ID: 1708870)



(Release ID: 1708893) Visitor Counter : 247