குடியரசுத் தலைவர் செயலகம்
உலக நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை உட்பட ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் பூமி இந்தியா: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
Posted On:
05 FEB 2021 6:28PM by PIB Chennai
இந்தியா இன்று சந்தை மட்டுமல்ல,உலக நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை உள்பட ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் பூமி என ஏரோ இந்தியா கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் கூறினார்.
பெங்களூரில் நடைப்பெற்ற ஏரோ இந்தியா-21 கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில், உலகளவில் இந்தியாவின் வலிமை வளர்ந்து வருவதற்கு இந்த ஏரோ இந்தியா-21 கண்காட்சியே சான்றாக உள்ளது. இந்தியாவின் திறன்கள் மீதான, உலகளாவிய நம்பிக்கை சீராக வளர்ந்து வருவதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இதுவரை கண்டிராத வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
தற்சார்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி என்று இரட்டை நோக்கங்களுடன் பாதுகாப்புத் துறையில் இந்தியாவை முன்னணி நாடாக இடம் பெறச் செய்வதற்கு, நாங்கள் பல கொள்கை முயற்சிகளை எடுத்துள்ளோம்.
உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க, தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
பாதுகாப்புத்துறை சீரான தாராளமயமாக்கலை கண்டிருக்கிறது. பல பொருட்கள் தயாரிப்புக்கு, தொழில்துறை உரிமம் பெறுவதற்கான தேவைகள் நீக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளுக்கான உரிமம் மற்றும் ஏற்றுமதி அங்கீகார நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகள் அமைக்கவும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இரண்டு பாதுகாப்பு வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் எல்லாம், நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியாவை தற்சார்பு பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா எப்போதுமே, உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகளவில் இயற்கை வளங்கள் உள்ளதாலும், உத்திகளின் இருப்பிடமாக இருப்பதாலும் அது முக்கியமான பகுதியாகும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒத்துழைப்பை அதிகரிக்க, அனைத்து பகுதியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக, ‘சாகர்’ என்ற திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகள் கவனம் செலுத்துவது முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***
(Release ID: 1695580)
(Release ID: 1695694)
Visitor Counter : 185