சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொவிட் தடுப்புமருந்து வழங்கல் நிலைமையை மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு செய்தார்

Posted On: 30 JAN 2021 7:19PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொவிட் தடுப்புமருந்து வழங்கல் நிலைமையை மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் இன்று ஆய்வு செய்தார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், கொவிட் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கையை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதார செயலாளர் பாராட்டினார்.

இந்தியா கடந்து வந்துள்ள சர்வதேச மைல்கற்கள் குறித்து பேசிய அவர், பத்து லட்சம், இருபது லட்சம் மற்றும் முப்பது லட்சம் பேருக்கு தடுப்புமருந்தை குறுகிய காலத்தில் வழங்கிய நாடு இந்தியா என்று கூறினார்.

தடுப்பு மருந்து அதிகம் பேருக்கு சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதார செயலாளர் கேட்டுக்கொண்டார். தடுப்பு மருந்து வழங்கலில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கொவிட் தடுப்பூசி விநியோக செயல்முறை, 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

*****************



(Release ID: 1693632) Visitor Counter : 201