பிரதமர் அலுவலகம்

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கான நிதியுதவியை பிரதமர் விடுவித்தார்


உத்தரப்பிரதேசத்தில் 22 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 21.5 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 14 லட்சம் குடும்பங்கள் தங்களுக்கான வீடுகளை ஏற்கனவே பெற்றுள்ளன

Posted On: 20 JAN 2021 2:59PM by PIB Chennai

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேசத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கான நிதியுதவியை,  பிரதமர் திரு.நரேந்திரமோடி காணொலிக்காட்சி வாயிலாக விடுவித்தார்.   பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.  மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரப்பிரதேச ஆளுநர் மற்றும் முதலமைச்சரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,  குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளையொட்டி தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.   குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் தமது மரியாதையை செலுத்தினார்.   இந்த நன்னாளையொட்டி, நாட்டு மக்களுக்கு அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.  குரு கோபிந்த் சிங் தம்மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதுடன்,  அவருக்கு சேவையாற்ற தமக்கு நல்வாய்ப்புகளை வழங்கியிருப்பதாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   குரு சாஹிப்பின் வாழ்க்கையும், போதனைகளும்  சேவை மற்றும் நேர்மையை பின்பற்றுவதற்கு நம்மை ஊக்குவிப்பதாக உள்ளன என்றார்.  சேவை மற்றும் நேர்மையிலிருந்து வெளிப்படும் வலிமையும், வீரமும்,  குரு கோபிந்த் சிங் காட்டிய வழியில்  நாடு செல்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், நலிந்த பிரிவு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.   ஆக்ராவில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை தாம் தொடங்கி வைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.   இந்தத் திட்டம், இந்திய கிராமங்களின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.   மேலும் இந்தத் திட்டம்,  லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதோடு,  பரம ஏழைகளிடத்திலும், தாங்களும் சொந்த வீட்டுக்கு உரிமையாளர் ஆகலாம் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. 

ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதில்,  வேகமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் இருப்பது குறித்தும், பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.   இந்த மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சம் குடும்பங்களுக்கு, ரூ.2,600 கோடி, அவர்களது வங்கிக் கணக்கில் இன்று செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.   இந்த 6 லட்சம் குடும்பங்களில், 5 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணைத் தொகை கிடைக்கப் பெறுவதுடன்,  சொந்த வீட்டிற்காக வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும் நிலையும் கடந்துவிட்டது.   அதே போன்று,  80 ஆயிரம் குடும்பங்களுக்கு இரண்டாவது தவணை கிடைக்கப் பெறுவதன் வாயிலாக,  அடுத்த குளிர் காலத்திற்குள், அவர்களுக்கு சொந்த வீடு கிடைத்து விடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   

தற்சார்பு இந்தியா, நாட்டு மக்களின் தன்னம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதோடு, சொந்த வீடு என்பது இந்த தன்னம்பிக்கையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   சொந்த வீடு என்பது, வாழ்க்கையில் உத்தரவாதத்தை அளிப்பதோடு, வறுமையிலிருந்து விடுபடவும் நம்பிக்கை அளிக்கும். 

 

முந்தைய அரசுகளின் ஆட்சியின்போது, சொந்த வீடு கட்ட நமக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை,  ஏழை மக்களிடம் இல்லாமல் இருந்தது.   முந்தைய திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள், போதிய தரம் இல்லாமல் இருந்தது.   தவறான கொள்கைகளின் விளைவுகளை, ஏழைகள் சுமக்க வேண்டிய அவலம் இருந்ததாகவும் பிரதமர் கூறினார்.   இந்த அவலத்தைக் கருத்திற்கொண்டு தான்,  நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக,  ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் சொந்த வீடு வழங்கும் நோக்கில்,  பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டது.  கடந்த சில ஆண்டுகளில்,  நாட்டின் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டிருப்பதுடன்,  மத்திய அரசின் 1.5 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்புடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.   மாநிலத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   உத்தரப்பிரதேசத்தில்,  22 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும்,  இதில் 21.5 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.   இதில் 14.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடு கிடைத்து விட்டது, அவற்றில் பெரும்பாலான வீடுகள் தற்போதைய ஆட்சியில் கட்டப்பட்டவை ஆகும்.  

 

கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதிற்கொண்டு,  சொந்த வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு,  இரண்டாவதாக வீடு ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதுடன்,  மூன்றாவதாக, வீட்டின் உரிமை  பெரும்பாலும் பெண்களுக்கு அளிக்கப்படுவதோடு, நான்காவதாக,  நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கலாம்,  இறுதியாக, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டைப் பெற முடியும்.   சொந்த வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள்,  உள்ளூர் தொழிலாளர்கள்,  சிறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு இந்த வீடுகள் பெரிதும்  பலனளிக்கும்.   இத்திட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படுவதை சுட்டிக் காட்டிய திரு.மோடி,  இந்த வீடுகள் பெரும்பாலும், குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரில் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.   நிலமற்ற குடும்பத்தினர், நிலத்திற்கான ஆவணத்தைப் பெறுவதோடு, தொகை முழுவதும் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதன் வாயிலாக, ஊழல் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன.

 

நகர்ப்புறங்களில் கிடைக்கும் வசதிக்கும், கிராமப்புறங்களில் கிடைக்கும் வசதிக்கும் இடையேயான வேறுபாட்டைக் குறைக்க முயற்சிக்குமாறு வலியுறுத்திய பிரதமர், நகர்ப்புற மக்களைப் போன்றே கிராமப்புற மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்க  வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.    எனவே, கழிப்பறை, விளக்கு வசதி, தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளும், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.   அடிப்படை வசதிகளைத் தேடி ஏழை மக்கள் அலையக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம் .  

பிரதமரின் ஸ்வமித்வா திட்டம்,  கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில், உத்தரப்பிரதேசம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.  இத்திட்டத்தின்கீழ், வீட்டிற்கான உரிமைப் பத்திரத்துடன் கூடிய நிலத்தை, கிராமப்புற மக்கள் பெறுவார்கள்.   உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஆய்வுப் பணிகளுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதோடு,  மக்களின் சொத்துக்கள் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ட்ரோன் உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்படுவதுடன்,  நிலப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.   இந்தத் திட்டத்தின் மிகப் பெரும் பயன் என்னவென்றால்,  இந்த வீடுகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.   இது, கிராமப்புற சொத்துக்கள் மீதான விலையில், ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும்.   இம்மாநிலத்தில் உள்ள 8.5 ஆயிரம் கிராமங்களில் ஆய்வுப்பணி  முடிக்கப்பட்டு,  ‘கரோணி‘ என்றழைக்கப்படும்  நில அளவைக்குப் பிந்தைய சான்றிதழ் டிஜிட்டல் வடிவில் மக்களுக்கு கிடைக்கும்.   உத்தரப்பிரதேசத்தில் , ஏற்கனவே இதுபோன்ற 51 ஆயிரம் சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

ஏராளமான திட்டங்கள் கிராமங்களைச் சென்றடையும்போது,  பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, கிராமப்புற பொருளாதாரமும் உத்வேகம் பெறும் என்றும் பிரதமர் கூறினார்.  பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சாலைகள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   கண்ணாடி இழை மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.  இந்தத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்தில் சொந்த ஊர் திரும்பிய, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில்,    கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம், 10 கோடி மனித வேலை நாட்களை உருவாக்கி, உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   இது, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.  

 

வாழ்க்கையை எளிதாக்க, ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், உஜாலா திட்டம் போன்ற பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை பட்டியலிட்ட அவர், இந்தத் திட்டங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.   அதிவிரைவுச் சாலைகள் மற்றும் எய்ம்ஸ் போன்ற திட்டங்கள் உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,   இந்தத் திட்டங்கள் அனைத்தும், உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவியிருப்பதாகத் தெரிவித்தார்.   இதன் காரணமாகவே, தற்போது பல பெரிய நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்ய முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் உற்பத்தி‘ என்ற திட்டத்தின் மூலம், சிறிய நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைப்பதாகவும், இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்கள் பலனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

*****

 

 



(Release ID: 1690504) Visitor Counter : 198