வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றும் பிரதமர் புது நிறுவனங்களுடன் கலந்துரையாடுகிறார்

Posted On: 16 JAN 2021 9:41AM by PIB Chennai

நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கான சூழலியலை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் 'பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டின்' முதல் நாளான நேற்று உலகெங்கிலும் இருந்து முன்னணி சிந்தனையாளர்கள் ஒரு தளத்தில் ஒன்று திரண்டனர்.

தொழில்நுட்பங்கள், புதுமைகள், துடிப்பான கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்தனர். இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடையே ஊக்கத்தை உருவாக்குவதற்கு அரசு மற்றும் சர்வதேச அமைப்புக்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியது.

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் இன்று மாலை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார்.

 

பிம்ஸ்டெக் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை நடத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ஆகஸ்ட் 2018-இல் காத்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் உறுதியளித்தவாறு இந்த இரண்டு நாள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல் நேற்று இம்மாநாட்டை தொடங்கி வைத்தார்.

25-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறும் இந்த உச்சி மாநாடு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதற்கு பின்பு நடைபெறும் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஆகும்.

ஸ்டார்ட் அப் சூழலியல்களை உருவாக்கி வலுப்படுத்தும் விதமாக, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு இடயே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டை மேம்படுத்தும் வகையில் 24 அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688984

------



(Release ID: 1689106) Visitor Counter : 195