பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார் பிரதமர்: திரு தர்மேந்திர பிரதான் புகழாரம்

Posted On: 14 DEC 2020 2:06PM by PIB Chennai

தூய்மையை மக்கள் இயக்கமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றியுள்ளார் என தூய்மை விருது விழாவில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புகழாரம் சூட்டினார்.

பெட்ரோலியத்துறையில் தூய்மை விருது வழங்கும் விழாவில் பெட்ரோலிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:

தூய்மையை, மக்கள் இயக்கமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றியுள்ளார். இந்த மக்கள் இயக்கத்தில், பெட்ரோலியத்துறையும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இதை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

நாடு 75வது சுதந்திர ஆண்டை 2022-ல் நிறைவு செய்யும் போது, நாட்டின் தூய்மை கனவை நாம் உணர வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும். புனிதத் தலங்களிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும், நவீன கழிப்பறைகளை பொதுத் துறை நிறுவனங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தூய்மைப் பணியையும், பிரசாரத்தையும் சிறப்பாக மேற்கொண்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் விருதுகளையும் வழங்கினார்.

தூய்மைக்கான முதல் பரிசை ஐஓசிஎல் நிறுவனமும், 2ம் பரிசை பிபிசிஎல் நிறுவனமும், மூன்றாம் பரிசை ஓஎன்ஜிசி நிறுவனமும், சிறப்பு விருதை எச்பிசிஎல் நிறுவனமும் பெற்றன.

தூய்மை சேவை விருதுப் பிரிவில் முதல் பரிசை எச்பிசிஎல் நிறுவனமும், 2ம் பரிசை பிபிசிஎல் நிறுவனமும், 3வது பரிசை ஐஓசிஎல் நிறுவனமும் பெற்றன.

*******



(Release ID: 1680582) Visitor Counter : 114