பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகள் வளாகத்தை காணொலி மூலம் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 23 NOV 2020 1:42PM by PIB Chennai

வணக்கம்,

மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்களே, என் அமைச்சரவை சகாக்கள் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களே, திரு. ஹர்தீப் பூரி அவர்களே, இந்தக் கமிட்டியின் தலைவர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!! மக்கள் பிரதிநிதிகளுக்கு தில்லியில்  இந்தப் புதிய வீட்டுவசதி வளாகம் உருவாகியுள்ளதற்கு உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மகிழ்ச்சிகரமான இன்னொரு நிகழ்வும் உள்ளது. இன்றைய நாள் மென்மையான பேச்சுக்கு சொந்தக்காரரான, கடமையில் உறுதியாக இருப்பவரான மக்களவைத் தலைவர் ஒம் பிர்லா அவர்களின் பிறந்த நாளும் கூட. அவருக்கு என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்கு சேவையைத் தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் கடந்த ஆண்டு தயார்படுத்தப் பட்டன. பி.ஆர். சாலையில் இந்த 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்த மூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மன நிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையைத் தர வேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கு உதவக் கூடிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இந்த அடுக்குமாடி வீடுகளில் செய்யப்பட்டுள்ளன. இது நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இருப்பதால், எம்.பி.க்களுக்கு சௌகரியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தில்லியில் தங்குமிட வசதி செய்வது நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்தது. பிர்லா அவர்கள் இப்போது கூறியதைப் போல, நீண்ட காலமாக எம்.பி.க்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படும் நிலைமை இருந்து வந்தது. அதனால் பொருளாதாரச் சுமையும் ஏற்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதில் மகிழ்ச்சி இல்லை. ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தீவிர முயற்சிகள் 2014-க்குப் பிறகு எடுக்கப்பட்டன. தசாப்த காலங்களாக இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதைவிட, தீர்வு கண்டால் தான் அவை முடிவுக்கு வரும். எம்.பி.க்களுக்கான வீடுகள் திட்டம் மட்டுமின்றி, டெல்லியில் பல திட்டங்கள், பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன. இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள், உரிய காலக்கெடுவுக்குள், சிலவற்றில் கெடுவுக்கு முன்னதாகவே கூட முடிக்கப் பட்டுள்ளன. அட்டல் பிகாரி வாஜ்பாயி அவர்கள் தலைமையிலான அரசு இருந்தபோது, அம்பேத்கர் தேசிய நினைவிடத்துக்கான ஆலோசனைகள் தொடங்கின. அதைக் கட்டுவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. இந்த அரசு அமைந்த பிறகுதான் அந்தப் பணிகள் நிறைவு பெற்றன. 23 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு  டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டுள்ளது. போர் நினைவுச் சின்னம் கட்ட வேண்டும் என்ற திட்டம் பல தசாப்தங்களாக யோசனையில் இருந்து வந்தது. நமது நாட்டின் துணிசல்மிக்க வீரர்கள் நீண்டகாலமாக இந்தக் கோரிக்கையை முன் வைத்து, எதிர்பார்த்திருந்தனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் நினைவாக இந்தியா கேட் அருகில் போர் நினைவுச் சின்னம் உருவாக்கும் வாய்ப்பு இந்த அரசுக்குக் கிடைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். தேசிய காவலர்கள் நினைவுச் சின்னமும் இந்த அரசால் கட்டப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடுகள் திறப்பும் அவசர மற்றும் முக்கியமான தேவையாக இருந்து வந்தது. எம்.பி.க்களின் நீண்டகால காத்திருப்பு இதன் மூலம் முடிவுக்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டும்போது, சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு நடவடிக்கைகள், சூரியசக்தி மின் உற்பத்தி வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற, பசுமைக் கட்டடங்களுக்கான கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த அடுக்குமாடி வளாகம் அதிக நவீனத்துவம் பெற்றதாக இருக்கிறது.

நண்பர்களே,

இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட மக்களவைத் தலைவர், மக்களவை செயலகம், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களில் உள்ள அனைவருக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில், இந்த நல்ல வளாகத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டுகிறேன். தரம் மற்றும் சேமிப்பில் மக்களவைத் தலைவருக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதை நாம் எல்லோரும் நன்றாக அறிந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவது, பயனுள்ள விவாதங்கள் நடப்பதை உறுதி செய்வதில் அவர் கவனம் செலுத்துகிறார். இந்தக் கட்டுமானத்திலும் அதே அக்கறையுடன் கூடிய நடவடிக்கைகள், உன்னிப்பாக அமல் செய்யப்பட்டுள்ளன. மழைக்கால கூட்டத் தொடரை நடத்தும் போது மக்களவைத் தலைவர் செயல்பட்ட விதத்தைப் பார்த்தோம். கொரோனா காலத்தில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு தருணத்தையும் நல்ல முறையில் பயன்டுத்திக் கொண்டார்கள். இரு அவைகளின் கூட்டத் தொடர்களை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நடத்தியதிலும் எல்லா கட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர்.

நண்பர்களே,

நமது நாடாளுமன்றத்தில் செயல்பாடு அதிகரித்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஒரு வகையில் அது 2014-ல் தொடங்கியது. அப்போது புதிய பாதையில் பயணிக்க நாடு விரும்பியது, மாற்றத்தை விரும்பியது. அதனால் 300-க்கும் மேற்பட்டவர்கள் முதல்முறை எம்.பி.யாக வெற்றி பெற்றனர். முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த 17-வது மக்களவையிலும், 260 எம்.பி.க்கள் முதல்முறையாக வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் முதல்முறையாக அல்லது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, அதிகபட்ச எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களைத் தேர்வு செய்த மக்களவையாகவும் 17-வது மக்களவை உள்ளது. இந்த இளமையான மனோபாவம், நாடாளுமன்ற செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. இதனால் தான் செயல்பாட்டுப் பாணியிலும், நாட்டின் நிர்வாகத்திலும் புதிய அணுகுமுறை, புதிய மனோபாவத்தை இன்றைக்குக் காண முடிகிறது. புதிய இந்தியாவை உருவாக்க நாடாளுமன்றம் புதிய நடவடிக்கை எடுப்பது, வேகமான முடிவுகள் எடுப்பதற்கும் இதுதான் காரணம். 16-வது மக்களவையில், அதற்கு முன்பிருந்ததைவிட 15 சதவீதம் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 17-வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடரில், குறிப்பிட்ட காலத்திற்குள் 135 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. மாநிலங்களவையும் 100 சதவீதம் செயல்பட்டது. கடந்த இரு தசாப்த காலத்தில் இதுதான் மிக அதிகபட்ச செயல்பாடாகும். கடந்த குளிர்கால கூட்டத் தொடரில், மக்களவையின் செயல்பாடு 110 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது.

நண்பர்களே,

நாடாளுமன்றத்தின் ஆக்கபூர்வமான, தரமான செயல்பாடுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தினர். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த வகையில் புதிய உச்சத்தைத் தொட்டனர். சொல்லப்போனால், இந்த எம்.பி.க்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்துடன் நின்றுவிடவில்லை. நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம் என்று பாருங்கள். ஒன்றுசேர்ந்து புதிதாக பலவற்றைச் செய்திருக்கிறோம். கடந்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பார்த்தால், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்க நாம் செயல்பட்டிருக்கிறோம். தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களை நாட்டின் பிரதானப் பகுதியின் வளர்ச்சி மற்றும் சட்டங்களின் பாதையில் இணைக்க செயப்பட்டிருக்கிறோம். முதல்முறையாக ஊழலுக்கு எதிரான சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் உருவாக்கப் பட்டுள்ளன.

முத்தலாக் என்ற சமூகக் கொடுமையில் இருந்து பெண்களுக்கு விடுதலை தரப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், அப்பாவி சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., திவால் நிலை அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த முடிவுகள் நவீன பொருளாதாரத்துக்கு வழிவகுத்துள்ளன. அதேபோல, இந்தியாவின்  அடையாளத்தை  உறுதிப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் குடிமக்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இவை உருவாக்கப்பட்டது மட்டுமன்றி, அமலாக்கத்திலும் செம்மையான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளன. ஒருவேளை நிறைய பேர் இவற்றை கவனிக்காமல் போயிருக்கலாம். ஆனால் 16-வது மக்களவையில் 60 சதவீத மசோதாக்களை நிறைவேற்ற சராசரியாக 2 - 3 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. முந்தைய மக்களவையைவிட அதிகமான மசோதாக்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அதேசமயத்தில் முன் எப்போதையும்விட அதிக நேரம் விவாதத்திருக்கிறோம்.

சட்டங்களை உருவாக்க வேண்டும், அதற்கான நடைமுறையை மேம்படுத்த வேண்டும் என்ற இரண்டு அம்சங்களிலும் நாம் கவனம் செலுத்தி இருப்பதை இது காட்டுகிறது. மாண்புமிகு எம்.பி.க்களான உங்களால் தான் இவை சாத்தியமாகியுள்ளன. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொது நிகழ்ச்சியில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பொதுவாக இளைஞர்கள் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், 16-17-18 வயது காலம் தான் இளமைப் பருவத்தில் முக்கியமானதாகக் கருதப்படும். எந்தவொரு இளம் ஜனநாயகத்துக்கும் இந்த 16-17-18 அதே அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்போது பாருங்கள், 2019 தேர்தல்கள் நடந்தபோது நாம் 16-வது மக்களவையின் பதவிக் காலத்தை நிறைவு செய்தோம். இந்த காலக்கட்டம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2019-க்குப் பிறகு தொடங்கியது. இந்த மக்களவையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுத்து, நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன்பிறகு 18-வது மக்களவை உருவாகும். புதிய தசாப்தத்திற்கான பயணத்தில் 18-வது மக்களவையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று திடமாக நம்புகிறேன். இந்த 16-17-18-ன் முக்கியத்துவத்தை உங்கள் முன் வைத்திருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் நாம் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தற்சார்பு இந்தியா திட்டமாக இருந்தாலும், பொருளாதாரம் தொடர்பான இலக்குகளாக இருந்தாலும், இதுபோன்ற வேறு முடிவுகளாக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியில் இந்த காலக்கட்டம் பொன்னான காலமாக நினைவில் வைக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

இங்கே  क्रियासिद्धि: सत्वेभवति महताम् नोपकरणे என்று சொல்லப்பட்டது.

நமது உறுதியான முடிவுகள் மற்றும் எண்ணங்களால் தான் நம் கர்மாவை முடிக்க முடியும் என்பது இதன் அர்த்தம்.

இன்றைக்கு நமக்கு ஆதாரவளங்கள் இருக்கின்றன, தீர்க்கமான உறுதியும் இருக்கிறது. நமது உறுதியில் எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவாக, பெரியதாக சாதிக்க முடியும். நாட்டு மக்கள் 130 கோடி பேரின் கனவுகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவோம் என்பதில் நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. இந்த நல்வாழ்த்துகளுடன், மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

-----



(Release ID: 1675170) Visitor Counter : 255