பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் மூன்று முக்கியத் திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 24 OCT 2020 1:53PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் பட்டேல் அவர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சி.ஆர். பட்டேல் அவர்களே, மாநிலத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளே வணக்கம்.

மா அம்பேயின் அருளாசியுடன், குஜராத் வளர்ச்சியுடன் தொடர்புடைய மூன்று முக்கிய திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. இன்று, குஜராத் மாநிலமானது, கிசான் சூர்யோதய திட்டம், கிர்னார் ரோப்வே, நாட்டின் மிகப்பெரிய நவீன இருதய மருத்துவமனை ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த மூன்று திட்டங்களும், மின்சாரம், அர்ப்பணிப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய குஜராத்தின் அடையாளங்களாகும். இந்த மூன்று திட்டங்களுக்காக குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள் உரித்தாகுக.

சகோதர, சகோதரிகளே, குஜராத் எப்போதும் அசாத்திய ஆற்றல் மிக்க மக்களின் பூமியாகக் திகழ்கிறது. நாட்டுக்கு சமூக, பொருளாதார தலைமையை வழங்கிய மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் ஆகியவர்கள் மூலம் குஜராத்தைச் சேர்ந்த பலர் மதிக்கப்படுகின்றனர். கிசான் சூர்யோதய திட்டம் மூலம் குஜராத் புதிய முன்முயற்சியுடன் எழுந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சுஜாலம்-சுப்லாம் மற்றும் சவுனி, கிசான் சூர்யோதய திட்டத்துக்குப் பின்னர், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மைல் கல்லை குஜராத் எட்டியுள்ளது.

கிசான் சூர்யோதய திட்டத்தின் கீழ், குஜராத் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மின்சாரத் துறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ள பணிகள், இத்திட்டத்துக்கு அடிப்படையானவை. குஜராத் ஒரு காலத்தில் கடும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்தது. 24 மணி நேர மின்சாரம் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மாணவர்களின் படிப்பு, விவசாயிகளின் பாசனம், தொழில்களின் வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் திறனை அதிகரிக்க, மின் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்துப் பணிகளும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டன.

பத்தாண்டுக்கு முன்பு நாட்டிலேயே முதல் மாநிலமாக சூரிய சக்தி மின்சாரத்துக்கான ஒருங்கிணைந்த கொள்கையை குஜராத் வகுத்தது. பதானில் 2010-ம் ஆண்டு சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்ட போது, இந்தியா ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே தொகுப்பு என்னும் வழியை உலகத்துக்கே காட்டும் என யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். இன்று, இந்தியா சூரிய மின்சக்தியில் கடந்த சில ஆண்டுகளில் உலகிலேயே 5-வது இடத்தைப் பிடித்து வேகமாக முன்னேறி வருகிறது.     

சகோதர, சகோதரிகளே,

கிராமங்கள், வேளாண்மை பற்றி அதிகம் தெரியாதவர்கள் பெரும்பாலும் பாசனத்துக்கு இரவு நேரத்தில் மட்டுமே மின்சாரம் பெறப்பட்டது என்பது பற்றி அறிய மாட்டார்கள். இதற்காக விவசாயிகள் இரவு முழுவதும் கண் விழிக்க நேர்ந்தது. கிர்னார் மற்றும் ஜுனாகாத் பகுதிகளில் வன விலங்குகளின் அச்சுறுத்தலையும் விவசாயிகள் எதிர்நோக்கினர். அதே பகுதிகளில்தான் கிசான் சூர்யோதயத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் உதயம் முதல் இரவு 9 மணி வரை மும்முனை மின்சாரத்தைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு புதிய விடியலைக் கொண்டு வரும்.

ஏற்கனவே உள்ள மின்சாரம் கொண்டு செல்லும்  முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல், முற்றிலும் புதிய திறனை இதில் உருவாக்குவதற்காக பணிகளை செய்துவரும் குஜராத் அரசின் முயற்சிகளுக்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.  இத்திட்டத்தின் கீழ், அடுத்த 2, 3 ஆண்டுகளில், சுமார் 3500 சுற்று கிலோமீட்டருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் புதிய  லைன்கள் அமைக்கப்படும். ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இது செயல்படுத்தப்படும். இதில், பெரும்பாலான கிராமங்கள் பழங்குடியினர் அதிகமாக வசிப்பவையாகும். குஜராத் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் மின்விநியோகம் கிடைக்கும் போதுலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில், மாற்றத்தை இது ஏற்படுத்தும்.

நண்பர்களே, கால மாற்றத்துக்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து பணியாற்றி விவசாயிகளின் முதலீட்டைக் குறைத்து, அவர்களது சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தங்கள் வருமானத்தை இருமடங்காக்க உதவ வேண்டியது அவசியம். ஆயிரக்கணக்கான எப்பிஓ-க்களை அமைத்ததுடன், 100 சதவீதம் வேம்பு தடவப்பட்ட யூரியா, மண் வள அட்டைகள், பல புதிய முன்முயற்சிகளை துவக்குதல் போன்ற விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க அரசு பல்வேறு  முயற்சிகளை எடுத்துள்ளது.  கேயுஎஸ்யுஎம் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் சிறிய சூரிய சக்தி நிலையங்களை அமைப்பதில், எப்பிஓ-க்கள் பஞ்சாயத்துக்கள், இதுபோன்ற அனைத்து  அமைப்புகளுக்கும் உதவி அளிக்கப்படுகின்றது. பாசன பம்புகள் சூரிய சக்தி மூலம் இணைக்கப்படுகின்றன. இதில்  உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விவசாயிகளின் பாசன பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். உபரி மின்சாரத்தை அவர்கள் விற்பனை செய்யவும் முடியும்.

நண்பர்களே, மின்சாரத் துறையுடன், பாசனத்துறை மற்றும் குடிநீர் திட்டங்களிலும் குஜராத் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டிருகிறது. தண்ணீருக்காக மக்கள் பெரும் சிரமங்களை முன்பு அனுபவித்து வந்தனர். தண்ணீருக்காக பெரும் அளவில் நிதி செலவழிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டது.  கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், முன்பு கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாத மாவட்டங்களை இன்று குடிநீர் சென்றடைந்துள்ளது.

குஜராத்தின் வறண்ட பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைந்துள்ளதற்கு சர்தார் சரோவர் திட்டம், தண்ணீர் தொகுப்புகள் போன்ற திட்டங்கள் தான் காரணமாகும். அத்திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெருமிதம் கொள்கிறேன். குஜராத்தில் 80 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் விரைவில் பெறும். கிசான் சூர்யோதய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், ஒரு துளியில் பல பயிர்கள் என்ற தாரகமந்திரத்தை அமல்படுத்த விவசாயிகள் முனைய வேண்டும். பகல் வேளையில் மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நுண் பாசனத்தை மேற்கொள்ள இது உதவும் என்பதுடன், கிசான் சூர்யோதயத் திட்டம் மாநிலத்தில் நுண் பாசனத்தை விரிவாக்கவும் உதவும்.

சகோதர, சகோதரிகளே, சர்வோதயாவைப் போல ஆரோக்யதாவும் இன்று குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. ஆரோக்யதா புதிய வரப்பிரசாதமாகும். நாட்டின் மிகப்பெரிய இருதய மருத்துவமனையாகயு.என்.மேத்தா இருதவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் இன்று தொடங்கப்படுகிறது.  உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், நவீன சுகாதார வசதிகள் கொண்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாக இது உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய இதய மருத்துவமனையாக  இருக்கும். நவீன மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகிய  கட்டமைப்புகளை உருவாக்கி, ஒவ்வொரு கிராமத்தையும் சிறந்த சுகாதார வசதிகளால் இணைப்பதில் குஜராத் மெச்சத்தக்க பணிகளை அமல்படுத்தியுள்ளது. குஜராத்தில் 21 லட்சம் பேர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.  குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் 525 மக்கள் மருந்து மையங்கள் குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளன.  இதில்சாதாரண குஜராத் மக்களைப் பாதுகாக்க சுமார் 100 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே, குஜராத் பெற்றுள்ள மூன்றாவது நன்கொடை நம்பிக்கை மற்றும் சுற்றுலாவுடன் தொடர்பு கொண்டது. கிர்னார் மலை மா அம்பேயின் தங்குமிடமாக உள்ளது. இதில் கோரக்நாத் சிகரம், குரு தத்தாத்ரேயா சிகரம் மற்றும் ஜெயின் கோவில் ஆகியவை உள்ளன. முன்பு கோவிலுக்குச் செல்ல 5-7 மணி நேரம் ஆனது. இப்போது, உலகத் தரம் வாய்ந்த ரோப்வே துவக்கப்பட்டுள்ளதால், 7-8 நிமிடத்தில் அதனை அடையமுடியும். இதனால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் இங்கு வருவார்கள். பனஸ்கந்தா, பவகாத், சத்புரா ஆகியவற்றுடன் இது குஜராத்தின் நான்காவது ரோப்வேயாகும். இந்த ரோப் வே வேலை வாய்ப்புகளையும், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளையும் வழங்கும். நீண்ட காலமாக சிரமங்களை அனுபவித்து வந்த மக்களின் வசதிக்காக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்களை அமைப்பதால், உள்ளூர் மக்கள் பெறக்கூடிய பொருளாதாரப் பயன்கள் ஏராளம்.

நீலக்கொடி சான்றிதழ் பெற்ற சிவ்ராஜ்பூர் கடற்கரை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ள ஒற்றுமை சிலை ஆகியவை மக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.  உலகிலேயே மிக உயரமான ஒற்றுமை சிலையை, கொரோனாவுக்கு முன்பு வரை, 45 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். மிக்குறுகிய காலத்தில் 45 லட்சம் பேர் வந்துள்ளது சாதனையாகும். முன்பு யாருமே செல்லாத இடமாக அகமதாபாத்தில் உள்ள கங்காரியா ஏரி இருந்தது. மறுசீரமைப்புக்குப் பின்னர், ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் பேர் ஏரியை பார்வையிடுகின்றனர். பலருக்கு இது வருமான வாய்ப்பாக திகழ்கிறது. குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு ஆதாரமான துறையாக சுற்றுலா உள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள குஜராத் மக்கள் , குஜராத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் பற்றி பரப்பும் தூதர்களாக செயல்பட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துஅதன் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.

இந்த நவீன வசதிகளுக்காக, குஜராத் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மா அம்பேயின் அருளாசியுடன் குஜராத் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். குஜராத் சுகாதாரத்துடன், வலிமையாகத் திகழட்டும்.  இத்துடன் மேலும் எனது வாழ்த்துக்கள் பலவற்றைத் தெரிவித்துக் கொண்டு, நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

*****



(Release ID: 1667559) Visitor Counter : 207