| 
                        நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
                         
                         
                        
                            அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா,2020 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
                         
                        
                         
                        
                            
                         
                        
                         
                        
                            Posted On:
                        22 SEP 2020 1:22PM by PIB Chennai
                         
                        
                         
                        
                             அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்க வகை செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாவை, 2020 ஜூன் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ்,  மக்களவையில் கடந்த 14-ம் தேதி அறிமுகம் செய்தார்.  இந்த மசோதா, மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 
அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020, தனியார் முதலீட்டாளர்களுக்கு, தங்கள் வணிக நடவடிக்கைகளில்  ஒழுங்குமுறை தலையீடுகளால், ஏற்படும் அச்சத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து, சேமித்து வைத்து, கொண்டு சென்று, விநியோகிப்பதில் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இது வழி வகுக்கும். இதன் மூலம், விவசாயத் துறையில், தனியார் துறை / அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது வகை செய்யும். குளிர்பதன வசதிகள், உணவு விநியோகத்தில் நவீனமயமாக்கம் ஆகியவற்றையும் இது ஊக்குவிக்கும். 
ஒழுங்குமுறை சூழலைத் தளர்த்தும் அதே வேளையில், நுகர்வோரின் நலன்களை அரசு இதில் உறுதி செய்துள்ளது. போர், பஞ்சம், அசாதரணமான விலை ஏற்றம், இயற்கை பேரிடர்கள்  போன்ற சூழ்நிலைகளில், விவசாய உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்தும் வசதி அதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதிப்பு கூட்டு நிறுவு திறனில் பங்கேற்போர், ஏற்றுமதி தேவைக்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்கள் இது போன்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கான வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், விவசாயத்துறையில் முதலீடு செய்பவர்கள் ஊக்கமிழக்க மாட்டார்கள்.
மாநிலங்களவையில், இன்று இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ்,  சேமிப்பு வசதிகள் இல்லாததால், விவசாய விளைபொருட்கள் பெருமளவுக்கு வீணாவதைத் தடுக்க இந்தத் திருத்தம் அவசியமாகிறது என்று கூறினார். இந்த மசோதா, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோர், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கும் ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கும் என்று கூறிய அவர், இது, நம் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றும் எனக் கூறினார். இந்தத் திருத்தம், விவசாயத் துறையில், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி முறையை வலுப்படுத்தும்  என்று அவர் தெரிவித்தார். இந்தத் திருத்தம், இத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம் புரியவும் வழி வகுக்கும்  என்றார். 
பின்புலம்;
இந்தியா பெரும்பாலான விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் உபரி நிலையை எய்தியுள்ள போதிலும், குளிர்பதன வசதிகள், சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் வசதிகளில் முதலீடு குறைவாக இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற இயலாத நிலை நிலவுகிறது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தால், தொழில் முனைவோரின் ஊக்கம் குலைந்து, ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அமோக அறுவடை காலங்களில், குறிப்பாக அழுகும் பொருட்களால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இந்தச் சட்டம் குளிர்பதன வசதிகள் மற்றும் நவீனமயமாக்கலில் முதலீட்டை ஈர்க்கும். இது, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிலையான விலையைப் பராமரிக்க உதவும். சந்தைகளில் போட்டி  சூழலை உருவாக்குவதுடன், சேமிப்பு வசதிகள் குறைபாட்டால், விவசாய விளைபொருட்கள் வீணாவதையும் தடுக்கும்.  
****
                        
                        
                         
                        
                         
                        
                            (Release ID: 1657739)
                         
                        
                         
                     |