பிரதமர் அலுவலகம்

தேசிய கல்விக் கொள்கை பற்றி, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 07 SEP 2020 1:29PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை பற்றிய, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கல்வி கொள்கை மற்றும் கல்வி முறை ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்றார்.

கல்விக்கான பொறுப்பு மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்றாலும், கல்விக் கொள்கை உருவாக்குவதில்  இவற்றின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அதிகரிக்கும்போதுதான், கல்வி கொள்கை முழுமையடையும். நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்ற பின்புதான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட ஒவ்வொருவரும் கல்விக் கொள்கையை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

 

தற்போது அனைத்து தரப்பினரும் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர், இந்த சீர்திருத்தங்களை முந்தைய கல்வி கொள்கையிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படுவதாக பிரதமர் கூறினார். கல்விக் கொள்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதை பிரதமர் பாராட்டினார். கல்வி முறையில் சீர்திருத்தத்தை மட்டும் ஏற்படுத்தாமல், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை  கொண்டுவரப்படுவதால், இத்தகைய விவாதம் அவசியம் என பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதுதான் இந்த கல்வி கொள்கையின் நோக்கம் என அவர் கூறினார்.

வேகமாக மாறிக் கொண்டிருக்கம் சூழலில், இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயாரக்குவதுதான் இந்த  கல்வி கொள்கையின் நோக்கம் என பிரதமர் கூறினார். எதிர்கால தேவைக்கான அறிவும், திறனுடன் நாட்டின் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

படிப்பதை விட, கற்றலில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது மற்றும் பாடத்திட்டத்தை தாண்டி விவேகமாக சிந்திப்பதை புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது எனவும் பிரதமர் கூறினார். நடைமுறையை விட விருப்பம், செய்முறை மற்றும் செயல்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பிரதமர் கூறினார். கற்றலின் முடிவு, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஒவ்வொரு மாணவரையும் முன்னேற்றுதல் ஆகியவற்றில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது என அவர் கூறினார்.

21ம் நூற்றாண்டில் இந்தியாவை அறிவான நாடாக மாற்றுவதே புதிய கல்விக் கொள்கையின் இலட்சியம் என பிரதமர் திரு மோடி கூறினார். சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் மையங்கள் அமைக்கவும் புதிய கல்வி கொள்கை அனுமதிக்கிறது என பிரதமர் மேலும் கூறினார். இதன் மூலம் அறிவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை நாட்டில் எப்படி அமல்படுத்துவது என்ற முயற்சி தற்போது நடப்பதாகவும்,   இதில் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் திறந்த மனதுடன் கேட்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அனைவரது சந்தேகங்களும் தீர்க்கப்படும் என பிரதமர் கூறினார். இந்த கல்வி கொள்கை, அரசின் கல்வி கொள்கை அல்ல, நாட்டின் கல்வி கொள்கை என பிரதமர் திரு மோடி கூறினார்.

வேகமாக மாறிவரும் காலங்களுக்கு தேவையானதை தேசிய கல்வி கொள்கை வழங்குகிறது என பிரதமர் திரு மோடி கூறினார். மண்டல மற்றும் சமூக சமநிலையற்ற தன்மையைப் போக்குவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருவதாகவும், கல்வியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வியில் உள்ள குறைபாடுகளை நீக்கவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பிரதமர் கூறினார்.

தேசிய கல்வி கொள்கை-2020-ஐ முழுமையாக புரிந்து கொண்டு அமல்படுத்துவதற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

*******



(Release ID: 1651969) Visitor Counter : 258