மத்திய அமைச்சரவை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 19 AUG 2020 4:31PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு இயக்கி, பராமரித்து, மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு இந்த விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொதுத்துறையில் தேவைப்படும் முதலீட்டைத் திரட்டுவதுடன், சேவை வழங்குவதில் உயர்திறன், நிபுணத்துவம், தொழில் வல்லமையை இத்திட்டம் கொண்டு வரும்.

பின்புலம்

இந்திய விமானநிலைய ஆணையத்தின் தில்லி, மும்பை விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டு முயற்சியில் இயக்கி, பராமரித்து, மேம்படுத்துவதற்காக பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.

இந்தக் கூட்டு முயற்சி  அனுபவமும், உலகத்தரமும் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கி, விமானப் பயணிகளுக்கு தரமான திறன்மிக்க சேவைகளை வழங்க உதவியுள்ளது. மேலும் இந்தத் திட்டம், இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வருவாயை அதிகரித்து, நாட்டின் இதர பகுதிகளில் விமான நிலையங்களையும்விமான வழிகாட்டுக் கட்டமைப்பையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உதவியுள்ளது. பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சிகள் (பிபிபி) மூலம் பெறும் வருவாயைக் கொண்டு இந்திய விமானநிலைய ஆணையம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில்  கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தனது விமான நிலையங்களை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தவும் முடிந்துள்ளது. இந்தியாவில் உள்ள இந்தக் கூட்டுமுயற்சி விமான நிலையங்கள், விமானநிலைய சேவை தரத்திற்கான, சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் பட்டியலில்  முதல் 5 இடங்களை தொடர்ந்து பிடித்து வந்துள்ளன

எனவே, இந்திய விமானநிலைய ஆணையத்தின் மேலும் பல விமான நிலையங்களை இதே பிபிபி முறையில் பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சி மதிப்பீட்டுக் குழுவின்  மூலம் குத்தகைக்கு விட அரசு தீர்மானித்ததுஇந்த மதிப்பீட்டுக் குழுவின் வரம்புக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றி முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட செயலர்கள் குழுவையும் அரசு அமைத்துள்ளது.

 பொதுத்துறை - தனியார் கூட்டு முயற்சி மதிப்பீட்டுக்குழு பரிவர்த்தனை ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி ஆயோக், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை, பொருளாதார விவகாரத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயலர்கள் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பின் கீழ், முழுமையான ஏல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இந்திய விமான நிலைய ஆணையம், 14.12.2018 அன்று கருத்துரு வேண்டுகோளை வெளியிட்டது. பயணிகள் கட்டண அடிப்படையில் சர்வதேச ஏலப்போட்டி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தொழில்நுட்ப ஏல விண்ணப்பங்கள் 16.02.2019 –இல் திறக்கப்பட்டன. தகுதிபெற்ற போட்டியாளர்களின் நிதி விண்ணப்பங்கள் 25.02.2019/26.02.2019 தேதிகளில் திறக்கப்பட்டன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமானநிலையங்களுக்குமான அனைத்து ஏலப்போட்டிகளிலும் பயணிகள் கட்டண விகிதத்தின் அடிப்படையில் அதிக தொகை குறிப்பிட்டு வெற்றி பெற்றது

---------------------------------------------------------------



(Release ID: 1647006) Visitor Counter : 250