பிரதமர் அலுவலகம்

74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


அவரது உரையில் இருந்து சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

Posted On: 15 AUG 2020 2:09PM by PIB Chennai

1.            எனதருமை நாட்டு மக்களே, மகிழ்ச்சியான இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

 

2.            இந்த அசாதாரணமான காலத்தில்சேவா பரமோ தர்மாஎன்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப கொரோனா போராளிகள் வாழ்ந்து வருகின்றனர். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், சேவைப்பணியாளர்கள் மற்றும் பல மக்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

 

3.            நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்த அவர், சக குடிமக்களுக்கு, தேவையான இந்தத்தருணத்தில் முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மீண்டும் உறுதி அளித்தார்.

 

4.            இந்திய விடுதலைப் போராட்டம், ஒட்டுமொத்த உலகுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. தங்களது பகுதியை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக, சில நாடுகள் அடிமைப்பட நேர்ந்தது. கடுமையான போர்கள் நிகழ்ந்த காலத்திலும் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கம் தடைப்பட இந்தியா அனுமதிக்கவில்லை.

 

5.            பெருந்தொற்றுக் காலத்தின் போதும் 130 கோடி இந்தியர்களும் சுயசார்பு அடைவோம் என்று உறுதி பூண்டனர். இப்போது இந்தியாவின் கருத்தில் சுயசார்பு இந்தியா என்ற எண்ணம் பதிந்துவிட்டது. சுயசார்பு இந்தியா என்ற கனவு 130 கோடி இந்தியர்களுக்கும் ஒரு உறுதிமொழியாக, ஒரு மந்திரமாக இன்று உருவெடுத்துள்ளது என்னுடைய சக இந்தியர்களின் திறமைகள், உறுதி, சக்தி ஆகியவை குறித்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய்வு எடுப்பதே இல்லை.

 

6.            இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா, ஒரு முக்கியமான பங்கு வகிக்க வேண்டிய நேரம் இது. இதை அடைவதற்கு இந்தியா சுயசார்பு இந்தியாவாக மாறவேண்டும். வேளாண்மை, சுகாதாரம், விண்வெளித்துறை என அனைத்து துறைகளிலும் சுயசார்பு நிலையை அடைய இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விண்வெளித் துறையை அனைவருக்கும் திறந்து விடுவதன் மூலமாக நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். அவர்களது திறன்களும் ஆற்றலும் அதிகரிக்க பல வழிகள் உருவாகும் என்று நான் நம்புகிறேன்.

 

7.            சில மாதங்களுக்கு முன்பு வரை நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தோம். பெருந்தொற்று காலத்தின் போது நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நாமே தயாரித்தோம். அதுமட்டுமல்லாமல், நாம் அவற்றை உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்கிறோம்

 

8.            இந்தியாவிலேயே தயாரிப்போம் என்பதைத்தவிர, நாம்உலகிற்காகத் தயாரிப்போம்என்ற மந்திரத்தையும் தழுவிக் கொள்ளவேண்டும்.

 

9.            110 லட்சம் கோடி ரூபாய் செலவிலான தேசியக்கட்டமைப்பு பைப்லைன் திட்டங்கள், நம்முடைய ஒட்டுமொத்தக்கட்டமைப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பதாக அமையும். மல்டி மாடல் தொடர்புக் கட்டமைப்பிற்கு நாம் கவனம் செலுத்துவோம். தனிப்பட்ட முறையில் நாம் இனி இயங்க முடியாது. முழுமையான, ஒருங்கிணைந்த கட்டமைப்பில் கவனம் கொள்வது அவசியம். பல்வேறு பிரிவுகளில் சுமார் 7000 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கட்டமைப்பு பிரிவில், புதிய புரட்சியை இது உருவாக்கும்.

 

10.          நம் நாட்டிலிருந்து கச்சாப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, முழுமையான உற்பத்திப் பொருள்களாக இந்தியாவிற்கே திரும்பி வரும் நிலை இன்னும் எத்தனை காலம்தான் நீடிப்பது? நம்முடைய வேளாண் அமைப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஒரு காலம் இருந்தது. அப்போது நம் நாட்டின் முன்னால் இருந்த மிகப் பெரும் கவலை, நம் நாட்டு மக்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்பதாகவே இருந்தது. இன்று நம்மால் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் உணவளிக்க முடியும். சுயசார்பு இந்தியா என்பது இறக்குமதியைக் குறைப்பது மட்டுமல்ல. நம்முடைய திறன்களையும், கற்பனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதும் ஆகும்.

 

11.  இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை உலகம் முழுவதும் கவனித்து வருகிறது. இதன் பலனாக, அந்நிய நேரடி முதலீடு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து குவிந்து வருகிறது.. கோவிட் தொற்று காலத்திலும், இந்தியா, எப்டிஐ-யில் 18 சதவீத  உயர்வைக் கண்டுள்ளது.

12. நாட்டில் ஏழைகளின் ஜன்தன் கணக்குகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நேரடியாக மாற்றப்பட்டுள்ளது என்பதை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? விவசாயிகளின் நலனுக்கான வேளாண் உற்பத்திப்பொருள் சந்தைப்படுத்துதல் சட்டம் இயற்றப்படும் என யாராவது எண்ணியிருப்பார்களா? ஒரு நாடு, ஒரே ரேசன் அட்டை, ஒரு நாடுஒரே வரி, திவால் சட்டம் , வங்கிகள் இணைப்பு ஆகியவை நாட்டின் இன்றைய உண்மை நிலையாகும்.

13. மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக நாம் உழைத்து வருகிறோம்- கடற்படை, விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு, இன்று அவர்கள் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். முத்தலாக் முறையை நாம் ரத்து செய்தோம். பெண்களுக்கு சானிடரி பட்டைகளை வெறும் ஒரு ரூபாய்க்கு வழங்கினோம்.

14. எனது அன்புக்குரிய நாட்டு மக்களேசுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம். சமுதாயத்தின் வலிமை, ஒரு நாட்டின் விடுதலை ஆகியவை அதன் ஆற்றல், முன்னேற்றத்தின் ஆதாரம் அதன் தொழிலாளர் சக்தி.

15. 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டுள்ளன. ரேசன் அட்டைகள் உள்ள அல்லது இல்லாத 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆயிரம் கோடி , வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளதுஏழைகள் நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டம் , கிராமங்களில் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

16. உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை கொடுங்கள், மறுதிறன், திறன் மேம்பாடு பிரச்சாரம், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் பொருளாதாரத் தன்னிறைவை கொண்டு வரும்.

17. நாட்டின் பல பிராந்தியங்கள் இன்னும் மேம்பாடு அடையாமல் உள்ளன. இத்தகைய 110 பின்தங்கிய மாவட்டங்களைத் தேர்வு செய்து, மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதார வசதிகள், சிறந்த வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குவதற்கான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

18. தன்னிறைவு விவசாயம், தன்னிறைவான விவசாயிகள் ஆகியவற்றுக்கு தன்னிறைவு இந்தியா முக்கிய முன்னுரிமை  அளிக்கிறது. நாட்டின் விவசாயிகளுக்கு நவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதற்காக, சில நாட்களுக்கு முன்பு , ரூ.1 லட்சம் கோடிக்கான விவசாய உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

19. இதே செங்கோட்டையிலிருந்து, கடந்த ஆண்டு, நான் ஜல்ஜீவன் இயக்கத்தை அறிவித்தேன். இன்று அத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் குடிநீர் இணைப்புகளைப் பெற்று வருகின்றன.

20. நடுத்தரப் பிரிவிலிருந்து வந்த வல்லுநர்கள், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் முத்திரை பதித்து வருகின்றனர். நடுத்தரப்பிரிவினருக்கு வாய்ப்புகள் தேவை, அவர்களுக்கு அரசின் தலையீட்டிலிருந்து சுதந்திரம் தேவை.

21. உங்கள் வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணைக்கு, அதனைச் செலுத்தும் காலத்தில் ரூ.6 லட்சம் வரை தள்ளுபடி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்கடந்த ஆண்டில்தான், முடிக்கப்படாமல் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகளை முடிக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உருவாக்கப்பட்டது.

22. தன்னிறைவு இந்தியாவை உருவாக்க, நாட்டின் கல்வி மிகவும் முக்கியமாகும். நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில், புதிய இந்தியாவை உருவாக்குவதில், முன்னேற்றமான இந்தியாவை உருவாக்குவதில் இது அவசியமாகும். இந்த சிந்தனையில் , நாடு தற்போது புதிய கல்விக் கொள்கையைப் பெற்றுள்ளது.

23. கொரோனா காலத்தில், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் எத்தகைய பங்கு வகித்துள்ளது என்பதை நாம் கண்டோம். கடந்த மாதத்தில் மட்டும் பீம் யுபிஐயிலிருந்து மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

24. 2014-க்கு முன்பு , வெறும் 5 டஜன் பஞ்சாயத்துகள் மட்டும் இணைய வசதிக்காக கண்ணாடி இழைக் கேபிளால் இணைக்கப்பட்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில், 1.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுவரும் 1000 நாட்களுக்குள், நாட்டின் அனைத்து 6 லட்சம் கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுவிடும்.

25. எனது அன்புக்குரிய நாட்டு மக்களே, எப்போதெல்லாம் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டுக்குப் பெருமையைக் கொண்டு வந்து, நாட்டை வலுப்படுத்தியுள்ளனர் என்பதை நமது அனுபவம் தெரிவிக்கிறது. இன்று, பெண்கள் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிவதுடன், போர் விமானங்களை ஓட்டி, ஆகாயத்தின் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளனர்.

26. நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில், சுமார் 22 கோடி வங்கிக் கணக்குகள் பெண்களின் பெயர்களில் உள்ளன. கொரோனா காலத்தில், ஏப்ரல் - மே - ஜூன் என இந்த மூன்று மாதங்களில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

27. கொரோனா தொடங்கியபோது, அதற்கான ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே நமது நாட்டில் இருந்தது. இப்போது 1,400க்கும் மேற்பட்ட பரிசோதனை நிலையங்கள் உள்ளன.

28. இன்று முதல் மற்றொரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. இது தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத் திட்டம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்தியாவின் சுகாதாரத் துறையில் இந்த தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத்திட்டம் புதியதொரு புரட்சியை உருவாக்கும். உங்களுடைய அனைத்துப் பரிசோதனைகள், நோய்கள், டாக்டர் உங்களுக்கு அளித்த மருந்துகள், எப்போது சிகிச்சை பெற்றீர்கள், என்ன சிகிச்சை பெற்றீர்கள் என்பவை பற்றிய பதிவுகள், என அனைத்துத் தகவல்களும் இந்த ஒரே ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

29. இன்றைய காலக்கட்டத்தில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பதில் ஒன்று, இரண்டு என்றில்லாமல், மூன்று பரிசோதனைகள் நடந்து வருகின்றன. விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டிய பிறகு, அந்தத் தடுப்பூசி மருந்துகளைப் பெருமளவில் தயாரிப்பதற்கு நாடு தயார் நிலையில் இருக்கிறது.

30. இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிப் பயணம் தொடங்கிய ஆண்டாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் வாழும் பெண்கள் மற்றும் தலித்களுக்கு உரிமை கிடைத்த ஆண்டாக இது உள்ளது! ஜம்மு காஷ்மீரில் உள்ள அகதிகளுக்கு கண்ணியமான வாழ்க்கை கிடைத்த ஆண்டாக இது உள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உணர்வுடன் தீவிரமான செயல்பாட்டுடன் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பது நம் எல்லோருக்கும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.

31. கடந்த ஆண்டு லடாக்கை யூனியன் பிரதேசமாக ஆக்கியதன் மூலம், அந்த மக்களின் பழைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள லடாக், இப்போது வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொடும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் தனது முத்திரையைப் பதித்திருப்பதைப் போல, வரும் காலத்தில் லடாக்கும், கரிக்காற்று உற்பத்தி இல்லாத பிராந்தியமாக தனது அடையாளத்தைப் பதிவு செய்யும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

32. நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களில் மாசுபாட்டைக் குறைப்பதற்கு, முழுமையான அணுகுமுறைகளைக் கொண்ட சிறப்பு இயக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

33. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தலில் இந்திய முழுமையான அக்கறை கொண்டுள்ளது. சமீப காலத்தில் நாட்டில் புலிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது! இப்போது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதேபோல டால்பின்களுக்கான ஒரு திட்டமும் தொடங்கப்படும்.

34. எல்..சி. என்பதில் இருந்து எல்..சி. வரையில், நாட்டின் இறையாண்மையை யார் கேள்விக்கு உள்ளாக்கினாலும், நாடும், நாட்டின் ராணுவமும் அதே பாணியில் பதிலடி தந்திருக்கின்றன. இந்தியாவின் இறையாண்மையை மதித்தல் என்பது தான் நம் எல்லோருக்கும் மிக உயர்வானது. இந்த லட்சியத்துக்காக, தைரியமான நமது வீரர்கள் எதைச் செய்ய முடியும், நம் நாட்டால் என்ன செய்ய முடியும் என்பதை லடாக்கில் நடந்த சம்பவங்கள் மூலம் உலகம் பார்த்தது.

35. உலக மக்கள் தொகையில் கால் பங்கு பேர் தெற்காசியாவில் வாழ்கின்றனர். இவ்வளவு அதிகமான மக்களைக் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்புடன், கணிக்க முடியாத அளவுக்கு வளர்ச்சிக்கான சாத்தியங்களை நம்மால் உருவாக்க முடியும்.

36. நாட்டின் பாதுகாப்பில் நமது எல்லைக்காவல், கடலோரக் கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இமயமலைச் சிகரங்களாக இருந்தாலும், இந்தியப் பெருங்கடல் பகுதி தீவுகளாக இருந்தாலும், சாலை விரிவாக்கம் மற்றும் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகின்றன.

37. நமது நாட்டில் 1300க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றின் பூகோள அமைப்பின்படியும், நாட்டின் வளர்ச்சியில் அவற்றின் முக்கியத்துவம் கருதியும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தீவுகளில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அடுப்படியாக, அடுத்த 1000 நாட்களில் லட்சத்தீவு பகுதி கடலின் அடியில் செல்லும் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்படும்.

38. நாட்டின் 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களுக்கும் என்.சி.சி. விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் 1 லட்சம் புதிய என்.சி.சி. உறுப்பினர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதிலும்கூட நாட்டின் மகள்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இடம் தரப்படும்.

39. நமது கொள்கைகள், செய்முறைகள், உற்பத்திப் பொருள்கள், நாம் செய்யும் அனைத்தும் சிறந்தவையாக இருக்க வேண்டும், சிறந்தவையாக மட்டுமே இருந்தாக வேண்டும். அப்போது தான் நாம் ஒரே பாரதம், ஒப்பில்லா பாரதம் என்ற லட்சிய நோக்கத்தை எட்ட முடியும்.

40. `வாழ்வதை எளிதாக்குதல்' முயற்சியின் மூலம் நடுத்தர வகுப்பினர் தான் அதிகம் பயன்பெறுவார்கள். குறைந்த செலவில் இன்டர்நெட் வசதி, குறைந்த விலையில் விமான பயண டிக்கெட்டுகள், நெடுஞ்சாலைகள் முதல் -வே வரையில் குறைந்த கட்டணத்தில் வசதி கிடைத்தல், குறைந்த விலையில் வீட்டு வசதி கிடைத்தல் முதல் வரி குறைப்பு வரை என இந்த அனைத்து நடவடிக்கைகளும், நாட்டின் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதாக இருக்கும்.

*************************



(Release ID: 1646092) Visitor Counter : 277