சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தடுப்பு மருந்தை II+III கட்டப் பரிசோதனைக்கு உட்படுத்த பூனாவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையத்திற்கு டி.சி.ஜி.ஐ அனுமதி

இந்தியாவில் தொற்றாளர்களில் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) மேலும் குறைந்து 2.11% ஆக ஆனது
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11.8 லட்சத்திற்கும் அதிகம்

Posted On: 03 AUG 2020 1:10PM by PIB Chennai

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கோவிட்-19 தடுப்பு மருந்தை (கோவிஷீல்ட்) இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் மருத்துவமனை சார்ந்து பரிசோதித்துப் பார்க்க பூனாவில் உள்ள சீரம்  ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜிஐ) அனுமதி அளித்துள்ளார்.

உலக அளவில் கோவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது இந்த இறப்பு விகிதம் மேலும் குறைந்து இன்று அது 2.11% என்ற அளவில் உள்ளது.  நாட்டில் கோவிட் நிர்வாகத்தை வழிநடத்துகின்ற ”பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை” என்ற சிறப்பான உத்தியை திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தப் பலன் ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19க்கான நிர்வாக உத்தி என்பது தொடக்க நிலையிலையே தொற்றாளர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களைத் தனிமைப்படுத்துதல் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் ஆபத்துக்காரணி அதிகம் உள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. களத்தில் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு நாடு முழுவதும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,574 நோயாளிகளுக்கு மேல் குணம் அடைந்துள்ளனர்.  இதனோடு சேர்த்தால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,86,203 ஆகும். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 65.77% என உள்ளது. 

தினசரி குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குணமடைந்தோர் எண்ணிக்கைக்கும், தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி 6 லட்சத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.  தற்போது இதன் எண்ணிக்கை 6,06,846 ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 5,79,357 என்பதாகும். இவர்கள் அனைவருமே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் 24 மே 2020இல் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு பதிலாக தற்போது சர்வதேச விமானங்கள் மூலம் வருகின்றவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இந்த வழிமுறைகள் 8 ஆகஸ்ட் 2020 அன்று 00.01 மணி முதல் நடைமுறைக்கு வரும்.  இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.mohfw.gov.in/pdf/RevisedguidelinesforInternationalArrivals02082020.pdf என்ற இணைப்பைப் பார்க்கவும்.  

********



(Release ID: 1643165) Visitor Counter : 249