வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
மிசோராமில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் இணைய வழியில் திறந்து வைத்தார்.
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUL 2020 3:46PM by PIB Chennai
மிசோராமில் உள்ள கோலாசிப்பில் அமைக்கப்பட்டுள்ள சோராம் மெகா புட் பார்க் லிமிடெட்டை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் காணொளிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். 55 ஏக்கர் நிலத்தில், ரூ 75 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த உணவுப் பூங்காவானது 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளித்து, இந்தப் பகுதியில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும். இப்பூங்காவின் தொடக்கம் இந்தப் பகுதியின் புதிய விடியல் எனக் குறிப்பிட்ட திருமதி பாதல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவுக்கான கனவைப் பூர்த்தி செய்வதில் இது பெரிய அளவில் பங்காற்றும் என்று தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 3 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலும், மிசோராமில் 7 திட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் ரூ 1,000 கோடி மதிப்பில் 88 திட்டங்கள் கடந்த ஆறு வருடங்களில் தனது அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினரும், வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான மத்திய இணை அமைச்சருமான (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்குப் பிராந்தியத்துக்கு கடந்த ஆறு வருடங்களில் உயர் முக்கியத்துவம் அளித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தப் பிராந்தியத்தின் தேவைகள் மற்றும் லட்சியங்கள் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் பணிக் கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
சொராமில் மிகப்பெரிய உணவுப் பூங்கா திறக்கப்பட்டுள்ளதைப் பாராட்டிய டாக்டர். ஜிதேந்திர சிங், இடைத்தரகர்களை இல்லாமல் ஆக்குவதால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வருவாயை இது இரு மடங்காக்கும் எனத் தெரிவித்தார். பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 40 சதவீதம் பழங்கள் வீணானதைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், சிறந்த மற்றும் அதிக வகையிலான பழங்களை சுத்தமான அடைக்கப்பட்ட சாறாக இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் விற்கலாம் என்று கூறினார். தனது வளமான விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் தயாரிப்புகளால் உலகின் இயற்கை விவசாய தளமாக மாறும் ஆற்றல் வடகிழக்கு மாகாணத்துக்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை 54-க்கு அருகே அமைந்துள்ள சொராம் மிகப்பெரிய உணவுப் பூங்கா, போக்குவரத்து சிக்கல்களை களைய உதவும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அதிக வகையிலான உணவுகள், வாசனைப் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் சேமிப்புக்கும், பதப்படுத்துதலுக்கும் இந்தப் பகுதியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் பூங்கா விரைவில் மாறும் என்று கூறினார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1639937)
வருகையாளர் எண்ணிக்கை : 326