உள்துறை அமைச்சகம்

தில்லியில் கொவிட் நிலைமையை சமாளிக்க, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டங்களையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 17 JUN 2020 9:22PM by PIB Chennai

தில்லியில் கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், சென்ற ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாதிரிகளைப் பரிசோதனை செய்யும் எண்ணிக்கை உடனடியாக இரண்டு மடங்கு ஆக்கப்பட்டுள்ளது. ஜூன் 15-16 தேதிகளில் மொத்தம் 16,618 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஜூன் 14-ம் தேதி வரை, தினமும் 4,000 - 4,500 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை, 6,510 பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. மீதியுள்ளவை நாளை கிடைக்கும்.

     கொவிட் நிர்வாகக் கூட்டங்களில், உள்துறை அமைச்சர் மேற்கொண்ட முடிவுகளின்படி, தில்லியில் 242 பரவல் மண்டலங்களில் வீடு வீடாகச் சென்று சுகாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த மண்டலங்களில் உள்ள மொத்தம் 2,30,466 பேரில் 1,77,692 பேருக்கு, 15-16 தேதிகளில் கணக்கெடுப்புப் பணி முடிவுற்றது. மீதியுள்ளவர்களுக்கு 20-ம் தேதி செய்யப்படும்.

  திரு அமித் ஷா, உத்தரவிட்டவாறு, பரிசோதனை நிலையங்கள், பரிசோதனைக்காக பெறப்படும் கட்டணங்களை  நிர்ணயிக்கும்  டாக்டர் வி கே பால் தலைமையிலான உயர்மட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் பெற்றுள்ளது. இது தேவையான நடவடிக்கைக்காக தில்லி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஒரு பரிசோதனைக்கான கட்டணம் ரூ.2,400 ஆகும்.

----



(Release ID: 1632279) Visitor Counter : 227