வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பாதசாரிகளுக்கு உகந்த சந்தை இடங்களை உருவாக்குவதற்கு பல தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து முழுமையான திட்டமிடலை மேற்கொள்ள மத்திய வீட்டுவசதி, நகர உறவுகள் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது

Posted On: 10 JUN 2020 1:20PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சந்தை இடங்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை பல்வேறு தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து மத்திய வீட்டுவசதி, நகர உறவுகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.  வீட்டுவசதி மற்றும் நகர உறவுகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா இது குறித்த ஆலோசனைத் தொகுப்பை அனைத்து மாநிலங்கள் / நகரங்கள் / நகராட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளார்.  பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் பாதசாரிகளுக்காக குறைந்தபட்சம் மூன்று சந்தை இடங்களையும் பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கண்ட நகராட்சிகள் பாதசாரிகளுக்கு உகந்த ஒரு சந்தைப் பகுதியையாவது உருவாக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைத் தொகுப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சந்தைப்பகுதிகளில் பாதசாரிகள் மட்டுமே செல்லும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்த கீழ்வரும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:-

  • சந்தை இருக்கும் இருப்பிடத் தேர்வு – பத்து லட்சம் மக்கள்தொகையை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மாநகராட்சிகள் பாதசாரிகளுக்காக குறைந்தபட்சம் மூன்று சந்தை இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்த இடத்தை பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்ய வேண்டும்.  பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் பாதசாரிகளுக்காக குறைந்தபட்சம் ஒரு சந்தை இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் முழுமையான திட்டமிடல் – வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துக் காவல்துறையினர், நிறுத்துமிட வசதி அளிக்கும் உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சந்தைப்பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.  திட்டம் உருவாக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு நகரங்கள் இந்தத் திட்டத்தைக் குறுகிய காலம் மற்றும் நீண்டகாலம் என இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • விரைவான, தற்காலிகமான, நிறுவுவதற்கு எளிதான மற்றும் ஊரடங்குக்குப் பிறகு பயணம் செல்பவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும் முன்னெடுப்புகள் குறுகியகால பரிந்துரைகளில் உள்ளடங்கி உள்ளன.  சந்தை இடங்களில் தடை அரண் அமைத்தல், வாகனம் செல்லாமல் சாலைகளை அடைத்தல் போன்ற செயல்பாடுகள் விரைவாகவும் தற்காலிகமாகவும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
  • நடந்து செல்வதற்கு கூடுதல் இடவசதியும் காத்திருப்புக்கான இடவசதியும் அளிக்கும் வகையில் தெருவில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடமும் வாகனப் பாதைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படலாம்.
  • கூடுதல் தெருக்கள் மூலமாக சந்தையை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித் தருவது குறித்து நகரங்கள் கவனம் செலுத்தலாம்.
  • சைக்கிள் ஓட்டுபவர்கள் அதற்கென பிரத்யேகமான / குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள பாதைகளில் செல்ல அனுமதிக்கப்படலாம். 
  • அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் வாகனங்களில் செல்வதற்கான வழிகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு தெரிவிக்கப்பட வேண்டும்.
  • பொதுமக்கள் சந்தைப்பகுதிக்கு வசதியாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகள் அடிக்கடி கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • வியாபார இடங்களை வடிவமைப்பது என்பது புதியன கண்டுபிடிக்கும் ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
  • தற்காலிக குறுகியகால நடவடிக்கைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்த பிறகு தான் பாதசாரிகளுக்கு மட்டுமேயான நீண்டகால நிரந்தர அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பாதசாரிகள் மட்டுமே செல்லக்கூடிய நகரச் சந்தைப்பகுதிகளை ஜுன் 30, 2020க்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.  பிறகு அடுத்த மூன்று மாதங்களில், அதாவது செப்டம்பர் 30, 2020க்குள் அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து முழுமையான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 உலகைத் தாக்கத் தொடங்குவதற்கு முன்பே சென்னை, பூனா மற்றும் பெங்களூர் போன்ற இந்திய நகரங்கள் மக்களுக்கு உகந்த நகரங்களாக உருமாறத் தொடங்கி இருந்தன.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையானது 100 கி.மீட்டருக்கும் அதிகமான அளவில் பாதசாரிகளுக்கு ஏற்ற தெருக்களை நகரம் முழுவதும் உருவாக்கியுள்ளது.  நகரத்தின் வர்த்தக மையமாக உள்ள இடத்தில் பாதசாரிகள் பிளாசா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.  மேலும், மெகா தெருக்கள் திட்டத்தின் வாயிலாக எடுக்கப்பட்ட பன்மடங்கு முயற்சிகளானது சென்னையின் பாதுகாப்பற்ற தெருக்களை பாதசாரிகளுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கின்ற முழுமையான தெருக்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  சென்னை மேற்கொண்ட முயற்சிகளால் உந்தப்பட்டு, மாநில அரசானது தமிழ்நாட்டின் பத்து நகரங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நிதிஒதுக்கீடு செய்துள்ளது.  400கி.மீட்டர் நீளத்திற்கு சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உகந்த தெருக்களை உருவாக்கும் நோக்கத்தோடு விரிவான சைக்கிள் ஓட்டும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள முதல் இந்திய நகரமாக புனே முன்னணியில் உள்ளது.  பல இந்திய நகரங்கள் சைக்கிள்களைப் பகிர்ந்து கொள்ளும் முறைகளைத் தொடங்கியுள்ளன.  இந்த நகரங்கள் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவித்து வருகின்றன.  நகரத்தை சைக்கிளில் சுதந்திரமாக சுற்றிவர ஊக்கம் அளிக்கப்படுகிறது.  பல்வேறு நகரங்களில் மேயர்கள் / நகராட்சி ஆணையர்கள் / பொலிவுறு நகரங்கள் மற்றும் குடிமைச் சமூகக் குழுக்கள் ஆகியன சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு அளித்து வரும் ஊக்கத்தைப் பயன்படுத்தி, சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க இதுவே பொன்னான வாய்ப்பாகும்



(Release ID: 1630673) Visitor Counter : 256